வியாழன், 26 அக்டோபர், 2017

நெல்லை அதிகாரிகளை கைது செய்ய போராட்டம் ... கலெக்டர் சந்தீப்குமார், எஸ்.பி.அருன்சக்திகுமார்,எஸ் ஐ முருகனை கைதுசெய்

வினவு :“கந்துவட்டி கும்பலுக்கு துணை நின்ற கிரிமினல் கலெக்டரை மக்கள்தான் தண்டிக்கவேண்டும் –
நெல்லையில் கலெக்டரை கைதுசெய்யும் போராட்டம்.என 26.10.2017 காலை 11.00 மணியளவில் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பாக நெல்லை கலைக்டரை கைது செய்யும் முற்றுகைப் போராட்டம் நடந்தது.
கந்துவட்டி கொடுமை காரணமாக இசக்கிமுத்து தன் குடும்பத்துடன் தீக்குளித்திருந்த நிலையில்  இது படுகொலை என்றும், கொலைக் குற்றவாளிகள் மாவட்ட ஆட்சியர், காவல்துறை உயர் அதிகாரிகள்தான் என்றும், இவர்களை மக்களே அதிகாரத்தை கையில் எடுத்துதான் தண்டிக்க வேண்டும் என்று, நகர் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. வழக்கம்போல் பல இடங்களில் காக்கிகள் ஆட்களை ஏவி சுவரொட்டிகளை கிழித்தனர்.

நேற்று கலையில் உயிருக்கு போராடி வந்த இசக்கிமுத்துவும் பாளையங்கோட்டை ஹைகிரவுண்டு மருத்துவமனையில் உயிரிழந்தார். அதை குடும்பத்தினரிடம் சொல்லாமல் மூடிமறைத்து உடலை பெற்றுக்கொள்வதாக கையெழுத்து வாங்க முயன்றனர் அதிகாரிகள்.

ஏற்கனவே இறந்த மூவரின் உடல்களையும் ஊருக்கு அனுப்பாமல் சத்தமில்லாமல் நெல்லையிலேயே எரித்து சாம்பலாக்கி விட்டனர். இப்பொழுதும் அதே சதியை அரங்கேற்றுவதை கண்டு உடனே உறவினர்களுடன் மருத்துவமனை முன்பு சாலை மறியலில் செய்யப்பட்டது. அரசு அதிகாரிகள் உடனே தோழர்களையும், உறவினர்களையும் கைது செய்து அப்புறப்படுத்திவிட்டு, இசக்கிமுத்துவின் உடலை மீண்டும் ஒருமுறை நெல்லையிலேயே எரித்தனர்.
மாலையில் தோழர்களை விடுவித்தது போலீசு. கொலைக் குற்றவாளிகளிடமே மனு கொடுத்து கெஞ்சுவது, கந்துவட்டி கும்பல் மீது நடவடிக்கை எடுக்கும் படி வலியுறுத்துவது என்று பலரும் செய்துவரும் நிலையில்,  இந்த அதிகார வர்க்க கிரிமினல்கள்தான் முதன்மை குற்றவாளிகள் என்பதை உணர்த்தும் விதமாக கலெக்டரை கைது செய்வோம் என்று இன்று  களமிறங்கினோம்.
மக்கள் அதிகாரம் நெல்லை மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் ஆதி தலைமையில் காலை 11.00 மணியளவில் நெல்லை கொக்கிரக்குளம் பேருந்து நிறுத்தத்தில் பிரசுரம், முழக்க அட்டை, பேனருடன் பேருந்திலிருந்து தோழர்கள் இறங்கியதும் பாய்ந்து வந்து சுற்றிவளைத்தது போலீசு. பேனரைக்கூட முழுமையாக விரிக்கமுடியாத நிலையில் சாலையில் அமர்ந்தபடி அங்கேயே போராட்டம் தொடங்கியது.
மக்கள்தான் அதிகாரத்தை கையில் எடுத்து அரசை, கலெக்டரை, SP யை கைது செய்து தண்டிக்கவேண்டும் என்பதை வலியுறுத்தி தோழர்கள் முழக்கமிட்டனர்.  “விடாதே, இழுத்து ஏற்று” என்று காக்கிகள் கிளப்பிய கூச்சல் அதிகமாக இருந்தது. யார் வந்திருப்பது என்ன கோரிக்கை என்று செய்திசேகரிக்க ஓடிவந்த மீடியா செய்தியாளர்களையும் ஒதுக்கித் தள்ளியது காவல்துறை.
ஒவொருவராக இழுத்துச்சென்று வேனில் ஏற்றியது போலீசு. கீழே சிதறிய பிரசுரத்தைக்கூட பொதுமக்கள் எடுத்துவிடாதபடி காத்து நின்றனர் காக்கிகள். அதையும் மீறி எடுக்க வந்த பெரியவரை திட்டி விரட்டினார் ஒரு உயர் அதிகாரி. அதேநேரம் ஒரு தோழர் பேருந்து நிறுத்தத்தில் இருந்தவர்களிடம் பிரசுரம் தந்துகொண்டிருந்தார். அவரையும் பாய்ந்துசென்று பிடித்து தனி ஜீப்பில் ஏற்றி கொண்டு சென்றனர்.
கந்துவட்டிக்காரனை பிடிக்கவோ, கிரிமினல்களை தண்டிக்கவோ துப்பற்ற காவல்துறையினர் போராடுபவர்களை மட்டும் போய் பாய்ந்து பிடிப்பதை எதிர்திசையிலிருந்து பார்த்து வெறுப்புடன் திட்டினர் பொதுமக்கள். அப்பொழுதே சிலர் கசங்கியிருந்த பிரசுரத்தை எடுத்து நேராக்கி பொறுமையாக படித்தனர். 50 -க்கும் மேற்பட்ட தோழர்கள் கைதாகியுள்ளனர்.
குறைந்தபட்சம் யார்? என்ன? என்றுகூட சுற்றியுள்ள மக்கள் பார்த்துவிடாதபடி ஜனநாயகத்தை கட்டிக்காத்துள்ள நெல்லை மாட்ட நிர்வாகத்திற்கு அதே பாணியில் பதிலடி தந்துள்ளனர் தோழர்கள். கைதாகியுள்ள தோழர்கள் கலைக்டரை கைதுசெய்யும்வரை சிறைப்பட்ட நிலையிலும் போரட்டம் தொடரும் என்றும் அதுவரை உணவருந்துவதோ, காவல்துறைக்கு கைதாகியுள்ளவர்கள் பெயர், முகவரி தந்து ஒத்துழைப்பதோ இல்லை என்றும் அறிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை: