சனி, 28 அக்டோபர், 2017

பழனிசாமி, பன்னீரின் காலடியில் எம்.ஜி.ஆர்!

 பழனிசாமி, பன்னீரின் காலடியில் எம்.ஜி.ஆர்!
மின்னம்பலம் : தமிழக அரசு சார்பில் நடத்தப்படும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாக்கள் உண்மையிலேயே எம்.ஜி.ஆர்.புகழ் பாடும் விழாக்கள் அல்ல, அவை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீரின் புகழ் பாடும் விழாக்களாக மாறிவிட்ட அவற்றை ரத்து செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்
உயிருடன் உள்ள தலைவர்களுக்கு பதாகைகள் மற்றும் கட்-அவுட்கள் வைக்கக்கூடாது என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அளித்தத் தீர்ப்பை எதிர்த்து அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் சத்யநாராயணா, சேஷசாயி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தபோது, தமிழக அரசின் செயல்பாடுகளை மிகக் கடுமையாக விமர்சித்திருக்கிறது.
‘‘தமிழகமெங்கும் கட்-அவுட், பதாகைகள் தான் நிறைந்துள்ளன. என் வீட்டு முன் அமைக்கப்பட்ட இரு பதாகைகள் இன்னும் அகற்றப்படவில்லை. ஒரு பதாகை அகற்றப்பட்டால் அடுத்த சிறிது நேரத்தில் இன்னொரு பதாகை வைக்கப்படுகிறது. இது தொடர்பாக 1000 வழக்குகள் உள்ளன. மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பதாகை அமைத்தோர் மீது அரசு என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது? இந்த அரசு செயல்படாததால், மக்கள் குறைகளுடன் நீதிமன்றத்திற்கு வருகின்றனர்.  இதற்குத்தானே ஆசைப்பட்டாய் ராமச்சந்திரா ? 
அவர்களுக்கு தீர்வு சொல்வதன் மூலம் அரசு செய்ய வேண்டிய பணிகளை நீதிமன்றம் செய்து கொண்டிருக்கிறது. நாங்கள் நீதிமன்றத்திற்குள் இருப்பதால் வெளியில் என்ன நடக்கிறது என்பது எங்களுக்கு தெரியாது என நினைக்க வேண்டாம். அனைத்தும் எங்களுக்குத் தெரியும். ஒருவேளை வெளியில் நடப்பதை நாங்கள் கண்டுகொள்ளக்கூடாது என்றால் முகமூடி வாங்கித் தாருங்கள். நாங்கள் அணிந்து கொள்கிறோம்’’ என நீதிபதி சத்தியநாராயணா கூறினார்.
நீதிமன்றத்தின் இந்த சாட்டையை இன்று (அக்டோபர் 28) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுக் காட்டியுள்ள ராமதாஸ், ’’உயர்நீதிமன்றத் தீர்ப்பையே அவமதிக்கும் ஆட்சியாளர்கள் மக்களின் உணர்வுகளுக்கு எந்த அளவுக்கு மதிப்பளிப்பர்?’ என்று கேள்வி கேட்டுள்ளார்.
மேலும்... எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடி அவருக்கு மரியாதை செலுத்த வேண்டும் என்பதில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு மாற்றுக்கருத்து இல்லை. உண்மையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு கடந்த ஆண்டே நிறைவடைந்து விட்டது. அப்போது யாருக்கோ பயந்து எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை நடத்தாதவர்கள் இப்போது அவ்விழாவை நடத்துகின்றனர். இதிலும் முன்னிலைப் படுத்தப்படுத்தப்பட்டவர்கள் எடப்பாடி பழனிச்சாமியும்,
பன்னீர்செல்வமும் தான்.
எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாக்களில் தங்களின் கட்-அவுட்டுகளை 60 அடி உயரத்துக்கு அமைத்துக் கொண்ட பழனிச்சாமியும், பன்னீர்செல்வமும் தங்களின் காலடியில் 5 அடி உயரத்திற்கு எம்.ஜி.ஆரின் பதாகைகளை அமைத்தனர். இதை விட எம்.ஜி.ஆரை இழிவுபடுத்த முடியாது என்றும் கூறியுள்ளார் ராமதாஸ்.
கூடவே, ’’எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா இதுவரை 21 மாவட்டங்களில் நடந்துள்ளது. ஒவ்வொரு விழாவுக்கும் குறைந்தபட்சம் ரூ.10 கோடி செலவழிக்கப்பட்டதாக அதிமுகவினரே பெருமை பேசுகின்றனர். அத்தனையும் மக்கள் வரிப்பணமாகும்.
தமிழகத்தின் நிதிநிலை மோசமடைந்து நியாயவிலைக்கடை சர்க்கரையின் விலை இரு மடங்காக உயர்த்தப்பட்டிருக்கிறது.
இத்தகைய சூழலில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா என்ற பெயரில் பழனிச்சாமியும், பன்னீர்செல்வமும் தங்களுக்கு விளம்பரம் தேடிக் கொள்வதற்காக மக்களின் வரிப்பணத்தை வீணடிப்பதை அனுமதிக்க முடியாது. அதுமட்டுமின்றி சென்னை உட்பட மீதமுள்ள 11 மாவட்டங்களில் நூற்றாண்டு விழாக் கொண்டாடப்படும் போது மக்களுக்கு கடுமையான பாதிப்புகள் ஏற்படக்கூடும். எனவே, மீதமுள்ள 11 மாவட்டங்களிலும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாக்களை ரத்து செய்ய வேண்டும். அதற்காக ஒதுக்கப்பட்ட நிதியை மக்கள் நலனுக்காக பயன்படுத்த வேண்டும்’’ என்று வலியுறுத்தியுள்ளார் ராமதாஸ்.

கருத்துகள் இல்லை: