வியாழன், 26 அக்டோபர், 2017

தினகரன் மீது தேசத்துரோக வழக்கு ஏன்? சிலிப்பர் செல் பயம்?


தினகரன் மீது தேசத்துரோக வழக்கு ஏன்?
மின்னம்பலம் : சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படுவதைத் தவிர்க்கவே தினகரன், புகழேந்தி உள்ளிட்டோர் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
அணிகள் இணைந்த பிறகு தினகரன் தனியாகச் செயல்பட்டுவரும் நிலையில், சேலம் மாவட்டத்தில் கடந்த மாதம் நீட் தேர்வுக்கு எதிராக தினகரன் ஆதரவாளர்கள் சார்பில் வழங்கப்பட்ட நோட்டீஸில் மத்திய, மாநில அரசுகளை விமர்சிக்கும் வாசகங்கள் இடம்பெற்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து தினகரன் அணியைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் எஸ்.கே.செல்வம், வெங்கடாசலம் உள்பட 14 பேர் மீது சேலம் அன்னதானப்பட்டி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுத்தனர். நோட்டீஸில் தினகரன், புகழேந்தி உள்ளிட்டோர் புகைப்படங்கள் இடம்பெற்றிருந்ததால், அவர்கள் மீதும் தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

தன் மீது பதிவு செய்யப்பட்டுள்ள தேசத்துரோக வழக்கை ரத்து செய்யக் கோரிச் சென்னை உயர் நீதிமன்றத்தில் புகழேந்தி மனு தாக்கல் செய்தார். “நோட்டீஸில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, சசிகலா, தினகரன் ஆகியோரது புகைப்படங்கள் இடம்பெற்றது போலவே என் படமும் இடம் பெற்றுள்ளது. என் பெயரைத் தேவை இல்லாமல் எப்ஐஆரில் சேர்த்துள்ளனர், எனவே உள்நோக்கத்துடன் பதிவு செய்யப்பட்டுள்ள இந்த வழக்கையும், எப்ஐஆரையும் ரத்து செய்ய வேண்டும்" என்று அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கின் விசாரணை இன்று (அக்டோபர் 26) உயர் நீதிமன்றத்தில் வந்தபோது, தினகரன், புகழேந்தி மீது தேசத்துரோக வழக்கு ஏன் என்பது குறித்து தமிழக அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், “உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்தே தமிழகத்தில் நீட் தேர்வு நடத்தப்பட்டது. தொடர்ந்து நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்களில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது. எனவே அரசுக்கு அவமரியாதை ஏற்படுத்தும் வகையிலும், தீர்ப்புக்கு எதிராகவும் சேலம் பகுதியில் நோட்டீஸ் வழங்கியதால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் இருக்கவே தினகரன், புகழேந்தி ஆகியோர் மீது தேசத்துரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் தினகரன் தரப்பிலிருந்து வழங்கப்பட்ட நீட் தேர்வுக்கு எதிரான நோட்டீஸில் அரசுக்கு அவமரியாதை ஏற்படுத்தும் வகையிலான வாசகங்கள் எதுவும் இடம்பெறவில்லையே என்ற கேள்வியை நீதிமன்றம் எழுப்பியது. இதற்கு அரசின் தலைமை வழக்கறிஞர் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும், எனவே அதற்குக் கால அவகாசம் வேண்டும் என்று அரசு தரப்பு வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார். இதனை ஏற்ற நீதிமன்றம் விசாரணையை நாளைய தினத்துக்கு ஒத்திவைத்தது.

கருத்துகள் இல்லை: