வியாழன், 26 அக்டோபர், 2017

கந்து காட்டு மிராண்டிகளும் பொதுமக்களும் ... எதுவுமே கொடுக்காமலே வசூலிக்கும் கந்து வட்டி?

xavier.suji: நெல்லையில் அரசு ஊழியர் ஒருவர்
தன்னுடைய தேவைக்காக சக அலுவலக நண்பரிடம் ஒரு லட்சம் தேவையென சொல்கிறார்
அவரது நண்பர் இவருக்கு தெரியாமலேயே நெல்லையில் உள்ள பிரபலமான கந்துவட்டி காரரிடம் என் நண்பனுக்கு ஒரு லட்சம் வேண்டும் என்கிறார். அவரும் தர சம்மதிக்கிறார், ஆனால் நண்பர்கள் இருவரும் அந்தப் பேச்சையே அடுத்து மறந்துவிடுகின்றனர். கடன் கேட்டவரும் வேறு ஏற்பாடு செய்து கொள்கிறார், கந்துவட்டிகாரரிடம் பணம் கேட்ட அரசு ஊழியருக்கு ஆறுமாதம் கழித்து ஒரு போன் வருகிறது. நீங்கள் ஒரு லட்சம் கேட்டீர்கள். எடுத்து வைத்து அதற்கு வட்டியும் 60,000 சேர்ந்துவிட்டது வந்து வட்டியைக் கட்டுங்கள் என்கிறார்கள், அரசு ஊழிய நண்பர்கள் இருவரும் அலறி அடித்து கந்துவட்டிகாரரிடம் செல்கிறார்கள்
வட்டியை கொடுங்கள் இல்லாவிட்டால் மோசமான விளைவு வரும் என்று மிரட்டுகிறார் கந்துவட்டிகாரர் இருவரும் புலம்பிக்கொண்டு சிந்துபூந்துறையில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திற்கு வந்தார்கள். நான் அப்போது அங்கு இருந்தேன். நானும்,கம்யூனிஸ்ட் மாவட்டச்செயலாளர் சண்முகவேலும் அரசு ஊழியர்கள் இருவரும் கந்துவட்டிகாரரை சந்தித்தோம்
ஒரு ரவுண்ட் டேபிள் மீது ஒரு லட்சம் ரூபாய் அங்கு கிடந்தது. அவன் சிம்பிளா ஒரு பதில் சொன்னான்
இவர் போன் பண்ணி கேட்ட அன்று இந்த ஒரு லடசத்தை எடுத்து வைத்தேன்
கணக்கிலும் ஏறிவிட்டது. நான் இப்போதுதான் பார்க்கிறேன்
எனவே வட்டி 60,000 த்தை கட்டச் சொல்லுங்கள் என்றான்

எனக்கு கோபம் அத்துக்கிட்டு வந்தது
கட்ட முடியாவிட்டால் என்ன செய்வீர்கள் என்றேன்
வாய் தகராறு ஏற்பட்டது
சில புனித வார்த்தைகளும் கடுமையாகப் பரிமாறப்பட்டது
தெரிஞ்சதப்பாருடான்னு சொல்லிட்டு வந்துட்டோம்
அதன் பிறகு ஆறுமாதம் கழித்து அந்த அரசு ஊழியரை தற்செயலாக சந்தித்தேன்
என்ன சார் பிரச்சனை ஏதும் இப்போது இல்லையேன்னு கேட்டேன்
ரௌடிகளோட எதுக்கு வம்புன்னு 25,000 கொடுத்து பிரச்சனையை நானே முடிச்சிட்டேன்னு சொன்னாரு
கந்துவட்டிக்காரனிடம் அன்று பேசிய புனித வார்த்தைகளை அரசு ஊழியரை நோக்கி சொல்லத் தொடங்கினேன்
ஒரு சின்ன வேலை இருக்கு
நான் உங்களை பிறகு நேரில் சந்தித்து விபரம் சொல்றேன்னு இடத்தை விட்டு நகர்ந்தார்

கருத்துகள் இல்லை: