வெள்ளி, 27 அக்டோபர், 2017

சு. சாமியின் மனு தள்ளுபடி .. சசிதரூர் மனைவி கொலை வழக்கில் உச்ச நீதிமன்றம் ...

தினமலர் :புதுடில்லி: காங்., மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான, சசி தரூரின் மனைவி, சுனந்தா புஷ்கர் மரணம் தொடர்பாக, பா.ஜ., மூத்த தலைவர், சுப்பிரமணியன் சாமி தொடர்ந்த, பொதுநல மனுவை விசாரணைக்கு ஏற்க, டில்லி உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.காங்., மூத்த தலைவர், சசி தரூரின் மனைவி, சுனந்தா புஷ்கர், 52, டில்லியில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில், 2014 ஜன., 17ல், சடலமாக மீட்கப்பட்டார். அவரது மரணம் தொடர்பான வழக்கு நடந்து வருகிறது. இந்நிலையில், சுனந்தா புஷ்கர் மரணம் தொடர்பாக, சிறப்பு விசாரணை குழுவின் விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி, பா.ஜ., மூத்த தலைவர், சுப்பிரமணியன் சாமி, பொதுநல வழக்கை தாக்கல் செய்தார். இந்த வழக்கை தள்ளுபடி செய்து, டில்லி உயர் நீதிமன்ற அமர்வு கூறியதாவது:
ஓர் அரசியல் தலைவர் மீது, மற்றொரு அரசியல் தலைவர், அரசியல் நோக்கத்துக்காக, பொதுநல வழக்கு என்ற பெயரில், வழக்கு தொடர்வதை ஏற்க முடியாது. இதற்காக, அரசியல்வாதிகள் பொதுநல வழக்கு தொடரக் கூடாது என, கூறவில்லை. ஆனால், அரசியல் காரணங்களுக்காக, பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்து, வழக்கு தொடர்வதை ஏற்க முடியாது.


சுனந்தா புஷ்கர் மரணம் தொடர்பான விசாரணையின் போது, தனக்கு தெரிந்த அனைத்து தகவல்களையும் கூறியுள்ளதாக, சுப்பிரமணியன் சாமி கூறினார். ஆனால், தற்போது இந்த வழக்குக்கு தேவைப்பட்டால், தன்னிடம் உள்ள கூடுதல் ஆதாரங்களை தாக்கல் செய்வதாகக் கூறியுள்ளார். அப்படியானால், விசாரணையின் போது, அவர் முழு தகவல்களையும் அளிக்கவில்லை என்பது தெளிவாகிறது. அரசியல் காரணங்களுக்காக, இந்த பொதுநல வழக்கு, தற்போது தொடரப்பட்டு உள்ளதாகவே கருதுகிறோம். அதனால், அது தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு அமர்வு கூறியுள்ளது.

கருத்துகள் இல்லை: