வியாழன், 26 அக்டோபர், 2017

எம்ஜிஆர் நூற்றாண்டு விழா பேனர்கள்: நீதிபதிகள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

tamilthehindu : திருச்சியில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பொதுமக்கள், போக்குவரத்துக்கு இடையூறாக பிளக்ஸ் பேனர் இடம் பெற்றது குறித்து அதிருப்தி வெளியிட்ட நீதிபதிகள் வைக்கப்பட்ட பேனர்களை நாளைக்குள் அகற்ற வேண்டும், வரும் திங்கட்கிழமை பதில் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.
அரசியல் கட்சிகள் நடத்தும் கூட்டங்கள், மாநாடுகளில் பொதுமக்களுக்கு இடையூறாக பேனர்கள் வைக்கக்கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் அதையும் மீறி எம்ஜிஆர் நூற்றாண்டு விழா பெயரில் சாலையை ஆக்கிரமித்து பொதுமக்களுக்கு இடையூறாக பேனர்கள் வைக்கப்படுகின்றன.

இன்று திருச்சியில் முதல்வர், துணை முதல்வர் பங்கேற்கும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடக்கிறது. இதில் அனுமதியின்றி நூற்றுக்கணக்கில் பொதுமக்களுக்கு இடையூறாக பேனர்கள் வைக்கப்பட்டது குறித்து டிராபிக் ராமசாமி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அவரது மனுவில் எம்ஜிஆர் நூற்றாண்டுவிழா பெயரில் அமைக்கப்படும் பேனர்களால் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுகிறது. உடனடியாக அகற்ற கோரிக்கை மனு அளித்தும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாக இருக்கிறார்கள். ஆகவே அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற உத்தரவிட வேண்டும் என்று கேட்டிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எம்.சுந்தர் அமர்வு அனுமதியுடன் வைக்கப்பட்ட பேனர்கள் எத்தனை, அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர்கள் எத்தனை எனபது குறித்து மாலைக்குள் விளக்கம் அளிக்க உத்தரவிட்டிருந்தனர். மாலை அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜய்நாராயண் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் 220 பேனர்கள் வைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது, 20 பேர் அனுமதி பெற்றுள்ளனர். அனுமதி பெறாத பேனர்கள் எதுவும் இல்லை, அனுமதி பெறாமல் வைக்கப்பட்டிருந்தால் உடனடியாக அகற்றிவிடுவதாக தெரிவித்தார்.
ஆனால் இதை ஆட்சேபித்த டிராபிக் ராமசாமி தரப்பு வழக்கறிஞர் அனுமதி இன்றி அதிக அளவில் பேனர்கள் வைக்கப்பட்டிருக்கிறது என்று தெரிவித்தனர். ஏராளமான பேனர்கள் வைக்கப்பட்டிருப்பதிலிருந்தே அனுமதி அளிக்காமல் அவை வைக்கப்பட்டிருக்கின்றன என்பது தெரிய வருகிறது. முறையின்றி வைக்கப்படும் பேனர்களை வரைமுறைப்படுத்த வேண்டி உள்ளது என்று தெரிவித்து, உடனடியாக பேனர்களை நாளைக்குள் அகற்ற உத்தரவிட்டு திங்கட்கிழமை அறிக்கை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டனர்.

கருத்துகள் இல்லை: