சனி, 28 அக்டோபர், 2017

BBC : தமிழகத்தில் ரேஷன் சர்க்கரை விலையை உயர்வு, பல தரப்பிலும் எதிர்ப்பு

தமிழக நியாய விலைக் கடைகளில், இதுவரை ஒரு கிலோ சர்க்கரை ரூ.13.50க்கு அளிக்கப்பட்ட நிலையில், வரும் நவம்பர் முதல், வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களைத் தவிர்த்து, பிறருக்கு ரூ.25 ஆக விலை உயர்த்தி விற்கப்படும் என தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. ;அனைத்து குடும்ப அட்டைதாரகளுக்கும் அதிகபட்சமாக ஒரு கார்டுக்கு ஒரு மாதத்திற்கு ஐந்து கிலோ சர்க்கரை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அடுத்தமாதம் முதல் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டுமே சலுகை விலையில் சர்க்கரை வழங்கப்படும் என்று உணவுத்துறை செயலர் குமார் ஜெயந்த் தெரிவித்துள்ளார்.
ரேஷன் கடையில் சர்க்கரையின் விலை அதிகரிக்கப்பட்டாலும், வெளிச்சந்தையில் விற்கப்படும் சர்க்கரையின் விலை ஒரு கிலோவிற்கு ரூ.45ஆக இருப்பதால்,ரேஷனில் ஒரு கிலோவிற்கு ரூ.20-ஐ அரசு ஏற்றுக்கொண்டு, மானியத்துடன் விற்பனை செய்யப்படுகிறது என்று அரசு தெரிவித்துள்ளது. இதன்காரணமாக ஒரு ஆண்டிற்கு ரூ.836.29கோடி ரூபாயை சர்க்கரைக்கான மானியமாக செலவிடவேண்டியுள்ளது என்றும் தெரிவித்துள்ளது.

இதுநாள் வரை மத்திய அரசு சர்க்கரைக்கு அளித்து வந்த மானியம் கடந்த ஜூன் மாதத்தில் நிறுத்தப்பட்டதால், தமிழக அரசு ஒவ்வொரு மாதமும் சலுகை விலையில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் சர்க்கரை வழங்க ரூ.85.92 கோடி முதல் ரூ.109 கோடி வரை செலவுசெய்யவேண்டிய நிலைக்கு ஆளானது என்று அரசாணையில் கூறப்பட்டுள்ளது.
மேலும் சர்க்கரை அளிப்பதிலும் மத்திய அரசு ஒவ்வொரு மாதமும் 10,820 மெட்ரிக் டன் அளித்தவந்ததை வெறும் 1,863மெட்ரிக் டன் மட்டுமே அளிப்பதால், தமிழக அரசு இந்த விலைஉயர்வை அமல்படுத்தியுள்ளது என்று அரசாணையில் கூறப்பட்டுள்ளது.
தமிழக அரசு அறிவித்துள்ள இந்த விலை ஏற்றத்தை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன. திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தை ஆட்சி செய்யும் 'குதிரைபேர' அதிமுக அரசு பொது விநியோகக் திட்டத்திற்கு ஏற்படும் மோசமான பாதிப்பைப் பற்றிக் கவலைப்படாமல் உள்ளது என்றும் இது கண்டிக்கப்படவேண்டிய ஒன்று என்றும் தெரவித்துள்ளார்.
அதோடு நியாய விலை கடைகளில் சர்க்கரையின் விலையேற்றத்தைக் கண்டித்து, திமுக சார்பில் நவம்பர் 6 ஆம் தேதி தமிழகத்தின் அனைத்து நியாய விலை கடைகளின் முன்பாகவும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளார் .
"தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தால் பொது விநியோகத் திட்டத்துக்கு ஏற்படும் மோசமான பாதிப்பு பற்றி கவலைப்படாமல், கையெழுத்துப் போட்ட 'குதிரை பேர' அரசின் கையாலாகாதத்தனத்தால் இன்றைக்கு ரேசன் கடைகளில் வழங்கப்படும் சர்க்கரை விலை விண்ணளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு கிலோ சர்க்கரையை 25 ரூபாய் கொடுத்து வாங்க வேண்டிய அவலநிலைக்குத் தமிழக மக்கள் தள்ளப்பட்டுள்ளார்கள்," என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார்.
மத்திய அரசு சலுகை விலையில் சர்க்கரை அளிப்பதை ரத்து செய்யவேண்டும் என்ற முடிவை எடுத்துள்ளது என்று கூறிய தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுகரசர், "தமிழக அரசு அதை எதிர்க்காமல் மக்கள் விரோதப்போக்கை கடைப்பிடிக்கிறது," என்று கூறினார்.

e>''சர்க்கரை விலைஉயர்வு பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மானியத்தை மத்திய அரசு நிறுத்தியபோது எதிர்க்காமல், தற்போது வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு ஒரு விலையும், மற்றவர்களுக்கு ஒரு விலை என்றும் ரேஷன் கடைகளில் விற்பனை செய்வது மக்கள் விரோத நடவடிக்கை,'' என்றும் அவர் தெரிவித்தார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞர் அணித்தலைவர் அன்புமணி ராமதாஸ் தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டத்தை தமிழ்நாட்டில் செயல்படுத்துவதால் மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் அரசு பார்த்துக்கொள்ளும் என்று தமிழக அரசின் முன்னர் தெரிவித்திருந்தது என்றும் தற்போது மக்களை ஏமாற்றிவிட்டது என்றும் கூறியுள்ளார்.
''தமிழகத்தில் மொத்தமுள்ள 2.03 கோடி குடும்ப அட்டைகளில் வெறும் 9.15%, அதாவது 18,64,600 அட்டைகள் மட்டும் தான் அந்தியோதயா அன்னயோஜனா திட்டத்தின் கீழ் பெறப்பட்டவை. இலவச அரிசி பெறும் ஏழைக் குடும்பங்களின் எண்ணிக்கை 1.91 கோடி, அதாவது 94.05% ஆகும். இவ்வளவு பேரை பாதிக்கும் முடிவை அறிவித்து விட்டு அதனால் ஏழைகள் பாதிக்கப்பட மாட்டார்கள் என்பது குரூரமான சிந்தனை,'' என்று அன்புமணி செய்தியறிக்கையில் கூறியுள்ளார்.
சர்க்கரைவிலை உயர்வைக் கண்டித்த எதிர்க்கட்சிகளுக்கு பதில் அளித்த உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தமிழகம் மட்டுமே மானிய விலையில் சர்க்கரை நியாய விலைக் கடைகளில் அளித்துவருகிறது என்றார். அவர் மேலும் வறுமைக்கோட்டிற்குக் கீழ் வாழ்பவர்களுக்கு பழையவிலை தொடர்வதால்,ஏழை மக்களுக்கு பாதிப்பு இருக்காது என்று தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: