புதன், 25 அக்டோபர், 2017

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு: நவம்பர் 7-ம் தேதி தீர்ப்பு தேதி வெளியாகும் என அறிவிப்பு

மாலைமலர் : 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்கின் தீர்ப்பு தேதி நவம்பர் 7-ம் தேதி வெளியாகும் என சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஷைனி அறிவித்துள்ளார். 2ஜி வழக்கு: நவம்பர் 7-ம் தேதி தீர்ப்பு தேதி வெளியாகும் என அறிவிப்பு புதுடெல்லி: மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் 2 ஜி ஸ்பெக்ட்ரம் எனப்படும் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக புகார் கூறப்பட்டது. இதுதொடர்பாக முன்னாள் தொலை தொடர்பு துறை மந்திரி ஆ.ராசா, தி.மு.க. எம்.பி. கனிமொழி மற்றும் சில நிறுவன நிர்வாகிகள் மீது குற்றம் சாட்டப்பட்டது. 2ஜி ஊழல் வழக்கு விசாரணை டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஓ.பி.ஷைனி முன்னிலையில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கின் தீர்ப்பு தேதி இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், 2ஜி ஊழல் வழக்கின் தீர்ப்பு தேதி நவம்பர் 7-ம் தேதி வெளியாகும் என சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.ஷைனி அறிவித்துள்ளார். இதுதொடர்பாக நீதிபதி ஷைனி கூறுகையில், தீர்ப்புடன் கூடுதல் ஆவணங்களை சேர்க்க வேண்டிய பணிகள் நடப்பதால் தீர்ப்பு தேதி அறிவிப்பில் தாமதம் ஏற்பட்டுள்ளது. எனவே, நவம்பர் 7-ம் தேதி தீர்ப்பு தேதி வெளியாகும் என தெரிவித்துள்ளார். தீர்ப்பு தேதி இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்ததால் ஆ.ராசா மற்றும் தி.மு.க. எம்.பி. கனிமொழி ஆகியோர் டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்துக்கு வருகை தந்திருந்தனர். 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்கின் தீர்ப்பு தேதி மூன்றாவது முறையாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: