புதன், 1 அக்டோபர், 2014

ஜெயலலிதாவுக்கு ஜாமீன் ? மீண்டும் சமுக விரோத சக்திகளுக்கு ஆக்சிஜன் ?

ஜெயலலிதா, சுதாகரன், இளவரசி, சசிகலா
கண்டன அறிக்கை :கிரிமினல் ஜெயலலிதா கும்பலை வெளியே விடுவது, இந்த தீர்ப்பை ஒன்றும் இல்லாமல் செய்யவும், மீண்டும் முதல்வராக தமிழகத்தை கொள்ளையடிக்கவும், அ.தி.மு.க காலிகள் வெறியாட்டம் போடவுமே வழிசெய்யும்.
:ஜெயலலிதா வகையறாவுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது.
1991-96 ல் தமிழகத்தின் முதல்வராக இருந்த ஜெயலலிதா வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் விசாரணை முடிந்து குற்றம் நிரூபிக்கப்பட்டு ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோருக்கு நான்காண்டுகள் சிறைத்தண்டனை வழங்கியுள்ளது கர்நாடக சிறப்பு நீதிமன்றம்.
ஜெயலலிதா, சுதாகரன், இளவரசி, சசிகலா
இந்த தண்டனை கூட சாதாரணமாக கிடைத்து விடவில்லை. உழைத்து வாழும் சாமானிய மக்கள் ரயிலில் வெள்ளரிக்காய் விற்றால் சட்டவிரோதமான செயல் என்று கூறி விசாரணையின்றி உடனே சிறை. இதே ஜெயலலிதா அரசால் எவ்வித குற்றமும், விசாரணையும் இன்றி அரசியல் பழிவாங்குதலுக்காக எத்தனைபேர் குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் சிறையிலடைக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால் நாடே பார்க்க பகிரங்கமாக நடந்த பகற்கொள்ளைக்கு 18 ஆண்டுகள் கழித்த பிறகே தீர்ப்பும், தண்டனையும். இந்த காலங்களில் மீண்டும் 2 முறை முதல்வராகி பல ஆயிரம் கோடிக்கு சொத்துக்களை குவித்துள்ளார்.

இப்படிப்பட்ட ஜெயலலிதா வகையறாவுக்கு கொடுக்கப்பட்டுள்ள தண்டனை மிக மிக குறைவானது. கட்சியின் பொதுச்செயலாளரே கிரிமினல் என்றால், அவர் வழி நடத்தும் கட்சி எப்படிப்பட்டதாக இருக்கும். சந்தேகத்திற்கிடமில்லாமல் அந்த கட்சியே கிரிமினல் மயமானது என்பதற்கு ஆயிரக்கணக்கான உதாரணங்கள் சொல்லமுடியும். குற்றவாளிகளாக ஓடி ஒளிய வேண்டியவர்கள் கடந்த மூன்று நாட்களாக தமிழகத்தையே முடக்கியுள்ளனர். பேருந்து எரிப்பு, பொதுச்சொத்துக்களை நாசம் செய்வது, கடைகளை சூறையாடுவது என வெறியாட்டம் போட்டு வருகின்றனர். இப்படிப்பட்ட சமூகவிரோத அ.தி.மு.க கட்சியை தடைசெய்திருக்க வேண்டும். ஜெயா வகையறாக்களின் சொத்துக்களை பறிமுதல் செய்திருக்க வேண்டும். அப்படி இல்லாமல் வெறும் 4 வருடம் என்பது ஒரு தண்டனையே இல்லை. அதிலிருந்தும் தப்பிக்க பெயில் என்ற பெயரில் பல தகிடுதத்தங்களை செய்கின்றது ஜெயா கும்பல்.
வயதையும், தனக்குள்ள நோய்களையும் காரணம் காட்டி பெயிலில் வெளிவர முயற்சிக்கின்றார் ஜெயா. சாதாரண உழைக்கும் மக்கள் குற்றம் எதுவும் செய்யாமல் விசாரணைக் கைதிகளாகவே பல ஆண்டுகள் தமிழகச் சிறைகளில் வதைபடுகிறார்கள். இவர்களுக்கு பெயில் இல்லை. தமிழகத்திலுள்ள ஈழத்தமிழ் அகதிகள் பல்லாயிரக்கணக்கில் சிறப்பு முகாம்கள் எனும் முள்வேலிக் கம்பிக்குள் வதைபட்டு சாகிறார்கள். இந்த சட்டவிரோத முகாம்கள் கலைக்கப்படவில்லை, இம்மக்களுக்கும் பெயில் இல்லை. அவர்களில் பலர் ஜெயலலிதாவின் வயது உடையவர்கள், பலர் அவருடைய வயதுக்கும் அதிகமானவர்கள். ஜெயலலிதாவுக்கு சாதாரணமாக உடல்நிலையை சோதிக்கவே அவர் விரும்பிய மருத்துவர் வருகிறார். அப்பல்லோவில் இருந்து மருந்து வருகிறது. ஆனால் சிறையில் வாடும் சாதாரண மக்களுக்கு என்ன நோய் என்று தெரியாமலும், உரிய மருத்துவம் இல்லாமலும் செத்தவர்கள்,செத்துக் கொண்டிருக்கின்றவர்கள் பல நூறு பேர். ஒரு குற்றமும் செய்யாத இவர்களெல்லாம் பெயில் இல்லாமல் ஜெயிலில் அடைபட்டுக் கிடக்கும் போது, குற்றம் நிரூபிக்கப்பட்டும் சிறை என்ற பெயரில் சகல வசதிகளுடன் சொகுசாக ஓய்வெடுக்கும் ஜெயாவுக்கு எதற்கு பெயில்.
இப்படிப்பட்ட கிரிமினல் ஜெயலலிதா கும்பலை வெளியே விடுவது, இந்த தீர்ப்பை ஒன்றும் இல்லாமல் செய்யவும், மீண்டும் முதல்வராக தமிழகத்தை கொள்ளையடிக்கவும், அ.தி.மு.க காலிகள் வெறியாட்டம் போடவுமே வழிசெய்யும். எனவே கொள்ளை கும்பலான ஜெயலலிதா வகையறாக்களை பெயிலில் விடக்கூடாது.
ஜெயலலிதாவுக்கு தீர்ப்பு வழங்கப்பட்ட கடந்த 27 ந்தேதி முதல் அ.தி.மு.க வினர் தமிழகம் முழுவதும் பொதுச் சொத்தை நாசப்படுத்தி வெறியாட்டம் போட்டு வருகின்றனர். ’அம்மாவு’க்கான அனுதாப அலையை உருவாக்குவதற்காக தமிழக மக்களிடையே அச்சுறுத்தலை உருவாக்கி வருகிறார்கள். பல கல்லூரி மாணவர்களை மிரட்டியும், சாராயாம், பிரியாணி கொடுத்து வளைத்துப் போட்டும், கல்லூரி நிர்வாகங்களின் துணையுடனும் அம்மா ஆதரவு மாணவர் போராட்டங்களை நடத்தி, மாணவர்களை தவறாக வழிநடத்தி வருகின்றனர். இதனை பு.மா.இ.மு வன்மையாக கண்டிக்கிறது. தமிழகத்திலுள்ள ஜனநாயக சக்திகளும், உழைக்கும் மக்களும், மாணவர்கள், இளைஞர்களும் அ.தி.மு.க வினரின் இந்த வன்முறைக்கு எதிராக ஒன்றிணைந்து போராட முன் வரவேண்டும் என்றும் அறைகூவி அழைக்கிறோம்.
இவண்
த. கணேசன்  புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி
தமிழ்நாடுvinavu.com 

கருத்துகள் இல்லை: