செவ்வாய், 30 செப்டம்பர், 2014

மோடி இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நதன்யாகு சந்திப்பு

பிரதமர் நரேந்திர மோடியும்,இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் நியூயார்க்கில் ஞாயிற்றுக்கிழமை சந்தித்து சுமார் அரை மணிநேரம் பேசினர்.
இது குறித்து இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் சையது அக்பரூதின் கூறியதாவது:
இந்தச் சந்திப்பின்போது இரு நாட்டுத் தலைவர்களும் பரஸ்பரம் பொருளாதார உறவுகளை மேம்படுத்துவது, பாதுகாப்புத் துறையில் கூட்டு நடவடிக்கைகள், வேளாண் துறையில் ஒத்துழைப்பு உள்ளிட்டவை குறித்துப் பேசினர்.

அப்போது, நீர் மேலாண்மை குறித்த தொழில்நுட்பங்களை இந்தியாவுக்கு வழங்க இஸ்ரேல் தயாராக இருப்பதாகவும், இஸ்ரேலில் அமைக்கப்படவுள்ள தேசிய இணைய பாதுகாப்பு ஆணையத்தின் மூலம் இருதரப்பும் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டால், எதிர்காலத்தில் தொழில்துறையில் கணிசமான முன்னேற்றத்தைக் காணலாம் என்றும் மோடியிடம் நெதன்யாகு தெரிவித்தார்.
மேற்கு ஆசியாவில் நிலவும் பிரச்னைகள், அந்தப் பிராந்தியத்தில் ஐ.எஸ். தீவிரவாதிகளால் எழுந்துள்ள அச்சுறுத்தல் குறித்து நெதன்யாகுவிடம் மோடி கேட்டறிந்தார்.
பாதுகாப்புத் துறையில் இணைந்து செயல்படுவது பற்றி அவர்கள் பேசியபோது, "இந்தியாவில் உற்பத்தி' திட்டத்துக்கு, தான் அளித்துவரும் முன்னுரிமை குறித்து மோடி எடுத்துரைத்தார். இந்திய பாதுகாப்புத்துறை திட்டங்களில் இஸ்ரேல் உள்பட எந்த ஒரு வெளிநாடும் 49 சதவீத நேரடி முதலீட்டை செய்யலாம் என்பதையும் சுட்டிக் காட்டினார்.
மோடிக்கு அழைப்பு: இந்தப் பேச்சின்போது, இஸ்ரேலுக்கு வருகை தருமாறு மோடிக்கு நெதன்யாகு அழைப்பு விடுத்தார். முன்பு குஜராத் முதல்வராக இருந்தபோது இஸ்ரேலுக்கு அரசுமுறைப் பயணமாக மோடி வந்திருந்ததை நினைவுகூர்ந்த நெதன்யாகு, தற்போது பிரதமர் என்ற அந்தஸ்துடன் அவர் வெகு விரைவில் தங்கள் நாட்டுக்கு வரவேண்டும் என்று கூறினார். அதை மோடி ஏற்றுக் கொண்டார் என்று சையது அக்பரூதின் கூறினார்.
இதனிடையே, இந்தச் சந்திப்பு குறித்து இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
உலக அளவில் இந்தியாவில் மட்டும்தான் யூதர்கள் மிகப் பாதுகாப்பாக வசிக்கின்றனர் என்ற நம்பிக்கை இஸ்ரேல் நாட்டு மக்களிடையே ஆழமாக வேரூன்றியிருப்பதை தான் உணர்ந்திருப்பதாக பிரதமர் நெதன்யாகுவைச் சந்தித்தபோது மோடி தெரிவித்தார்.  யூதர்களுக்கு எதிரான இன வேற்றுமை உணர்வுக்கு எப்போதும் இந்தியா இடம் கொடுத்ததில்லை என்றும், இந்தியாவில் வாழும் யூதர்கள், தங்களை இந்தியச் சமூகத்தின் ஒர் அங்கமாகவே கருதுகின்றனர் என்றும் மோடி தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது என்று அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலைப்பாட்டில் மாற்றம்?: முன்னதாக, ஐ.நா. பொதுச்சபையில் பங்கேற்க வந்திருந்த பாலஸ்தீன அதிபர் மகமது அப்பாûஸ நியூயார்க்கில் மோடி ஞாயிற்றுக்கிழமை சந்திப்பதாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், இந்தச் சந்திப்புக்கு முன்கூட்டியே அப்பாஸ் திடீரென பாலஸ்தீனத்துக்கு புறப்பட்டுச் சென்றுவிட்டார்.
இந்த நிலையில், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடனான மோடியின் சந்திப்பு, இந்திய வெளியுறவுக் கொள்கை நிலைப்பாட்டில் இருந்து மாறுபட்டிருப்பதாக அரசியல் வட்டாரங்களில் கருதப்படுகிறது. dinamani.com

கருத்துகள் இல்லை: