வெள்ளி, 3 அக்டோபர், 2014

மோடிக்கு கமல் : தூய்மை இந்தியா பணியில் 90 லட்சம் பேரை இணைப்பேன் !

சென்னை: சுத்தமான இந்தியாவை உருவாக்க அழைத்து விடுத்துள்ளதற்கு பிரதமர் நரேந்திரமோடிக்கு நடிகர் கமல்ஹாசன் நன்றி கூறியுள்ளார். இந்த பணியில் 90 லட்சம் பேரை இணைக்க உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அக்டோபர் 2, காந்தி ஜெயந்தியன்று டெல்லியில் ‘சுத்தமான இந்தியா' திட்டத்தை இந்திய பிரதமர் நரேந்திர மோடி துவக்கிவைத்தார். இந்த விழாவில் பேசிய பிரதமர் மோடி "சுத்தமான இந்தியாவை உருவாக்க பொது இடங்களில் வந்து பணியாற்ற 9 பேருக்கு நான் அழைப்பு விடுத்துள்ளேன். மிருதுளா சின்காஜி, சச்சின் தெண்டுல்கர், பாபா ராம்தேவ், கமல்ஹாசன், சசிதரூர், பிரியங்கா சோப்ரா, சல்மான்கான், அனில் அம்பானி ஆகியோருக்கு சுத்தமான இந்தியாவை உருவாக்கும் பணியில் இணைய நான் அழைப்பு விடுத்துள்ளேன். அவர்கள் மேலும், 9 பேருக்கு அழைப்பு விடுக்க கேட்டுக் கொண்டுள்ளேன். சுத்தமான இந்தியாவை உருவாக்குவது என்பது இந்திய மக்களின் பொறுப்பு. இந்தியாவை சுத்தப்படுத்துவதற்கு மக்கள் சுமார் 100 மணி நேரம் செலவிட வேண்டும்..." என்று மோடி கேட்டுக் கொண்டார். பிரதமர் மோடியின் இந்த அழைப்பை ஏற்றுக் கொள்வதாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
மதிப்பிற்குரிய பிரதம மந்திரி அவர்கள் குறிப்பிட்டுள்ள ஒன்பது பேர்களில் என் பெயரும் இடம் பெற்றிருப்பதை பெரும் ஒரு பாக்கியமாக நான் கருதுகிறேன். கட்சிகளுக்கு அப்பாற்பட்ட, சித்தாந்தங்களுக்கு அப்பாற்பட்ட மனித சேவை என்பதில் என்றுமே நம்பிக்கை உள்ளவன் நான்.
இங்கே குறிப்பிடப்பட்டிருக்கும் அரிய ஒன்பது பேர்களில் நாங்கள் அனைவருமே வெவ்வேறு கருத்துக்கள் உடையவர்கள். நான் மனித நேயத்தை ஆத்திகம் மூலமாகவோ, வேறு சித்தாந்தங்கள் மூலமாகவோ அணுகாமல் மனிதம் மூலமாக, பகுத்தறிவு மூலமாக அணுகி வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருப்பவன்.
பிரதமருக்கு நன்றி இதை எனக்கு கொடுக்கப்பட்டிருக்கும் புதியதொரு கடமையாக நான் நினைக்காமல் செய்த கடமைக்கான ஒரு பாராட்டாக நினைத்து தொடர்ந்து செயல்படுவேன் என்பதை மாண்புமிகு பிரதமருக்கு சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.
கடந்த முப்பதாண்டுகளாக எனது சினிமா ரசிகர்களாக இருந்தவர்களை சமுதாய ஆர்வலர்களாக, சேவையாளர்களாக மாற்ற நானே ஒரு சிறிய கிரியாஊக்கியாக இருந்திருக்கிறேன். அந்த பணி இனியும் தொடரும். சுற்றமான சூழல் என்பதை நான் உணர ஆரம்பித்து, பேச ஆரம்பித்து பல மாமாங்கங்கள் கடந்து விட்டன. இந்தப் பணியும் தொடரும்.
பிரதமர் தான் தேர்ந்தெடுத்த ஒன்பது பேர், இன்னும் ஒன்பது பேரை இந்தச் சேவைக்காக தேர்ந்தெடுக்க வேண்டும் என்று பணித்திருக்கிறார்.. பரிந்துரைத்திருக்கிறார். முடிந்தால் இன்னும் தொண்ணூறு லட்சம்பேரை சேர்க்க வேண்டியது என்னுடைய இயலும் கடமையாக நான் நினைக்கிறேன்.
ஒரு பில்லியன் ஜனத் தொகை உள்ள இந்த நாட்டில் என் தொழில் சிறு துளியாக இருந்தாலும், பெரு வெள்ளத்தின் முதல் துளியாக இது இருக்குமென்றும் நம்புகிறேன். இந்த முயற்சியில் அரசியல், மத, இன, மொழி கடந்த மனிதம் நிச்சயம் பரவும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

tamil.filmibeat.com

கருத்துகள் இல்லை: