திங்கள், 29 செப்டம்பர், 2014

சுப்பிரமணியன் சுவாமி: தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும்

ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் தலையிட மாட்டேன். வழக்கை சட்டப்படி நடத்துங்கள்’ என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியதாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்தார்.
இதுதொடர்பாக ‘தி இந்து’வுக்கு தொலைபேசி மூலம் சுப்பிரமணியன் சுவாமி அளித்த சிறப்புப் பேட்டி:
ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு சரியானது என்று நினைக்கிறீர்களா?
இந்த வழக்கின் ஆரம்ப காலத்திலேயே தகுந்த உண்மை யான ஆதாரங்களை முன்வைத்து தான் மனு தாக்கல் செய்திருந்தேன். வழக்கில் நிச்சயமாக வெற்றி பெறுவேன் என்று ஆரம்பத்திலேயே தெரியும். தீர்ப்பு சரியானபடியே வந்துள்ளது. இது நான் எதிர்பார்த்த தீர்ப்புதான். ஆனால் கொஞ்சம் தாமதமாக வந்துள்ளது.

இந்த வழக்குக்காக நீங்கள் மேற்கொண்ட முயற்சிகள் எப்படிப்பட்டவை?
இந்த வழக்கைப் பொறுத்தவரை ஆதாரங்களை திரட்டுவதுதான் எனக்கு மிகப்பெரிய போராட்டமாக இருந்தது. தமிழகத்தின் முக்கியமான அரசியல் தலைவர் என்பதால் இதை நீதிமன்றத்துக்கு எடுத்துச் சென்றதே மிகப்பெரிய போராட்டம் என்று சொல்லலாம். நிறைய பிரஷர்கள், சமரச முயற்சிகள் எல்லாம் நடந்தன. ஆனாலும், வழக்கை வாபஸ் பெறுவது என்ற நிலைக்கு செல்லவே இல்லை.
தீர்ப்பை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளதே?
உடல்நலத்தை காரணம் காட்டி அவர்கள் மேல்முறையீடு செய்யலாம். இதன்பேரில் ‘அவர் சிறையில் இருக்கக்கூடாது. மருத்துவமனையில் அனுமதிக் கப்பட வேண்டும்’ என்றுகூட தீர்ப்புகள் வரலாம். ஆனால், மேல்முறையீட்டில் அவர்களுக்கு சாதகமான தீர்ப்பு சாதாரணமாக கிடைத்துவிடக் கூடாது.
இந்த வழக்கின் தீர்ப்பு, அதிமுக என்னும் பேரியக்கத்தின் ஸ்திரத்தன்மையை அசைத்துள்ளதாக கருதுகிறீர்களா?
அப்படியில்லை. இந்தியா ஜனநாயக நாடு. தற்போது நாட்டில் ஊழலுக்கு எதிராக மிகப்பெரிய எழுச்சி ஏற்பட்டுள்ள நிலையில் இந்தத் தீர்ப்பு வந்துள்ளது. ஆரம்பத்தில் நான்கூட, இந்த விஷயத்தில் ஜெயலலிதாவுக்கு மோடி ஏதாவது உதவி செய்வாரோ என்று நினைத்தேன். ஆனால், ‘வழக்கில் நான் தலையிட மாட்டேன். எல்லாம் சட்டப்படி நடக்கட்டும்’ என்று அவரே என்னிடம் கூறினார். இனி ஊழல் செய்பவர்கள் யாரும் தப்பிக்க முடியாது.
தமிழகத்தில் உங்களுக்கு எதிரான சூழல் அதிகரித்து வருகிறதே?
தமிழகத்தின் சில இடங்களில் சமூக விரோதிகள் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டனர். வன்முறையில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும். இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் தொலைபேசியில் பேசினேன். தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று கூறினேன். அரசியலமைப்புச் சட்டத்தின் 256-வது ஷரத்தின்கீழ் தமிழக ஆளுநருக்கு உள்துறை அமைச்சர் சில ஆலோசனைகளை அனுப்பியுள்ளார். அதன் அடிப் படையில் சட்டம் - ஒழுங்கை நிலைநிறுத்த ஆளுநர் உத்தர விட்டுள்ளார். இப்போது தமிழகத்தில் அமைதியான சூழல் உருவாகியுள்ளது.
2ஜி வழக்கு தீர்ப்பு எப்படியிருக்கும் என்று நினைக்கிறீர்கள்?
ஜெயலலிதா வழக்கு தீர்ப்பைப் போலவே 2ஜி வழக்கிலும் ராசா, கனிமொழி உட்பட வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள அனைவரும் தண்டனை பெறுவது நிச்சயம். இந்த வழக்கில் ப.சிதம்பரத்தையும் சேர்க்க வேண்டும் என்று கூறியிருந்தேன். ஆனால், என்னிடம் போதுமான ஆதாரம் இல்லை என்று கூறி நீதிமன்றம் அவரை சேர்க்க மறுத்தது. வலுவான ஆதரத்தை திரட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். இந்த வழக்கில் இருந்து ப.சிதம்பரம் தப்ப முடியாது.
சோனியா, ராகுல் மீதான ‘நேஷனல் ஹெரால்டு’ வழக்கில் உங்களின் அடுத்தகட்ட செயல்பாடு என்ன?
இந்த வழக்கு குறித்த என்னுடைய வாதம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வரும் 1-ம் தேதி நடக்கவுள்ளது. அப்போது தகுந்த ஆதாரங்களை எடுத்து வைப்பேன். தீபாவளி முடிந்து டிசம்பரில் இந்த வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வரும்.
இவ்வாறு சுப்பிரமணியன் சுவாமி கூறினார்.tamil.thehindu.com

கருத்துகள் இல்லை: