சனி, 4 அக்டோபர், 2014

சென்னையில் தூய்மை இந்தியா தொண்டு பணி தொடக்கம் !

சென்னையில் ஆளுநர் மாளிகை உள்பட பல்வேறு இடங்களில் பிரதமர் நரேந்திர மோடியின் "தூய்மை இந்தியா' திட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
ஆளுநர் மாளிகை: சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகையில் வியாழக்கிழமை நடைபெற்ற தூய்மைப் பணியில் ஆளுநர் ரோசய்யா கலந்து கொண்டு ஆளுநர் மாளிகை வளாகத்தைச் சுத்தப்படுத்தும் பணியைத் தொடங்கி வைத்தார்.
அவர் பேசுகையில், சுத்தப்படுத்தும் பணியை அனைத்து வீடுகளிலும் உள்ள ஒவ்வொரு தனிநபரும் தொடங்க வேண்டும். தாங்கள் சார்ந்துள்ள வளாகத்தைத் தூய்மையாகவும், சுகாதாரமாகவும் வைத்திருக்க வேண்டியது அனைவரின் கடமையாகும். தூய்மைக்கு எடுத்துக்காட்டாக காந்தியடிகளை முன்னுதாரணமாகக் கொள்ள வேண்டும் என்றார்.

இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் மாளிகை அதிகாரிகள், பணியாளர்கள் கலந்துகொண்டு ஆளுநர் மாளிகை வளாகத்தைச் சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
ராணுவ வளாகம்: சென்னை கோட்டை ரயில் நிலையம் அருகில் உள்ள ராணுவ வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆந்திரம், தமிழ்நாடு, கர்நாடகம், கேரள பிராந்திய ராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜக்பீர் சிங் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட ராணுவ அதிகாரிகள், வீரர்கள் உறுதி மொழி ஏற்றுக் கொண்டனர். இதைத் தொடர்ந்து எழும்பூர் ரயில் நிலையம், ராணுவக் குடியிருப்பு வளாகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களை அவர்கள் சுத்தப்படுத்தினர்.
இந்திய எண்ணெய் நிறுவனம் (ஐ.ஓ.சி.): சென்னை நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலையில் உள்ள இந்திய எண்ணெய் நிறுவனம் (ஐ.ஓ.சி) மார்க்கெட்டிங் மண்டல வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற தூய்மைத் திட்ட நிகழ்ச்சியில், பொது மேலாளர் (மண்டல சேவைகள்) ஏ.பாண்டியன், தமிழ்நாடு அலுவலக செயல் இயக்குநர் யு.வி.மன்னூர், சிபிசிஎல் மேலாண்மை இயக்குநர் கௌதம் ராய் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து அந்த வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.
எழும்பூர் ரயில் நிலையத்தில்...: இதுபோல, சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் பாஜக மூத்த தலைவர் இல. கணேசன், மாநிலத் தலைவர் தமிழிசை செüந்திரராஜன், பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன், மாநில அமைப்பு பொதுச் செயலாளர் மோகன்ராஜூலு ஆகியோர் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். maalaimalar.com

கருத்துகள் இல்லை: