புதன், 1 அக்டோபர், 2014

ஜெயாவின் அண்ணன் தங்கையோ வறுமையில் ! ஜெயாவோ சொத்து குவிப்பில் !


பெங்களூரு: "எங்களை, ஜெயலலிதா புறக்கணித்தாலும், அவரை சிறையில் அடைத்தது அதிர்ச்சியாக இருக்கிறது,” என, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மூத்த சகோதரர் வருத்தம் தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலம், மைசூரு மாவட்டம், டி.நரசிபுரா தாலுகா, ஸ்ரீரங்கராஜபுராவில் வசித்து வருபவர் வாசுதேவன், 78. இவர், ஜெயலலிதாவின் தந்தை ஜெயராமின் முதல் மனைவி ஜெயாவின் மகன். இவருடன் பிறந்தவர் ஷைலஜா. ஜெயலலிதாவின் தாயார் சந்தியா. இவர் ஜெயராமின் இரண்டாவது மனைவி. ஜெயலலிதா உடன் பிறந்தவர் ஜெயகுமார். இவர்களில், ஷைலஜா பெங்களூரில் வசிக்கிறார்.
தன் நினைவுகள் பற்றி வாசுதேவன் கூறியதாவது:ஜெயகுமார் பற்றி, எனக்கு எதுவும் தெரியாது. எங்களுடைய தாத்தா ரங்காச்சார், மைசூரு அரண்மனையில், நான்காம் கிருஷ்ணராஜ உடையார் மன்னராக இருந்த போது, அரண்மனை வைத்தியராக இருந்துள்ளதாக தெரிவித்தனர்.ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில், கணக்கில் காட்டப்பட்ட நகைகளில், சில நகைகள், என் தாயார் திருமணத்தின்போது, கிருஷ்ணராஜ உடையார் அன்பளிப்பாக கொடுத்தது. நாங்கள், வறுமையில் வாடுவது அவருக்கு தெரியும்.நாங்கள், ஜெயலலிதாவின், உறவினர்கள் என்பது பத்திரிகை மூலம் வெளியில் தெரிந்தபோது, எங்கள் மீது, மானநஷ்ட வழக்கு ஒன்றை, சென்னை செஷன்ஸ் கோர்ட்டில் தொடர்ந்ததால், மேற்கொண்டு எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை.என் மகன் விபத்து ஒன்றில் இறந்ததையடுத்து, என் மனைவியும் இறந்து விட்டார். தற்போது, கிராம மக்கள் உதவியுடன் தனிமையில் வசிக்கிறேன். கர்நாடகா அரசு, மாதந்தோறும் அளிக்கும், 400 ரூபாய் பென்ஷனில் காலம் தள்ளி வருகிறேன்.  சொந்த அண்ணன் அவர்களுக்கு ஏதும் செய்யாமல் தத்து பிள்ளை உடன் பிறவா சகோதரி மற்றும் அவரின் அருவடிகள் எல்லாம் உங்களின் பலனை அனுபவித்ததை நினைத்தால் கொடுமையா இருக்கிறது...என்னதான் தாய் வேறு ஒருவராக இருப்பினும் அவரும் உங்கள் ரத்தத்தின் ரத்தம் தான்...உணர்வீராக  ஜெயாவுக்கு ஒரு சொந்த தஙகை இருக்கிறார் அவரின்  விபரங்களுக்கு  namathu.blogspot.com/2014/07/blog-post_150.html
எங்கள் மீது மானநஷ்ட வழக்கு தொடர்ந்து, எங்களை ஜெயலலிதா புறக்கணித்தாலும், சொத்து குவிப்பு வழக்கில், அவருக்கு, நான்கு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை கேட்டதும், அதிர்ச்சியாக இருந்தது.தமிழகத்தில் 'அம்மா' என்ற பெயருடன் பிரபலமாக விளங்கினாலும், சட்டம் என்பது அனைவருக்கும் ஒன்று தான். அவரது அரசியல் வாழ்க்கையில் நிச்சயமாக, பின்னடைவு தான். இருந்தாலும், அவரை சிறையில் அடைத்ததை, நாங்கள் விரும்பவில்லை.இவ்வாறு, அவர் கூறினார். dinamalar.com

கடந்த ஒரு வாரமாக கர்நாடக மாநிலத்தில் எந்த கன்னட டி.வி சேனல்களைத் திருப்பினாலும், சைலஜா என்ற பெண்ணின் பேட்டி ஒளிபரப்பப்பட்டு வருகிறது. ‘தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் தங்கை நான்’ என்று இவர் சொல்லிக்கொள்வதுதான், நம்மையும் கவனிக்க வைத்தது!
ஜெயராமன் – சந்தியா தம்பதியருக்கு ஜெயக்குமார் என்ற மகனும் ஜெயலலிதா என்ற மகளும்தான் என்பது இதுவரை வெளியில் தெரிந்த வரலாறு. ஆனால், சைலஜா புதிதாகச் சொல்கிறாரே என்று அவரைத் தொடர்புகொண்டோம். நம்மை பெங்களூரு ரேஸ்கோர்ஸ் அருகே உள்ள சாம்ராஜ் ஹோட்டலுக்கு வரச் சொன்னார்.
அங்கு சென்றதும் முதலில் நம்மை சாப்பிடச் சொன்னார். நாம் மறுத்தோம். ”எங்க அக்கா ஊருக்கே உணவகம் திறந்து உணவளிக்கிறார். நீங்கள் சாப்பிட்டால்தான் பேட்டி கொடுப்பேன்” என்றபடி ஒரு மசால் தோசை ஆர்டர் செய்தார். தனது மகள் அமிர்தாவை அருகில் வைத்துக்கொண்டு நம்மிடம் பேச ஆரம்பித்தார். அதில் இருந்து…
”உண்மையில் நீங்கள் யார்… உங்களின் பின்புலம் என்ன?”

”என் பேரு சைலஜா. தமிழக முதல்வராக இருக்கும் ஜெயலலிதாவின் தங்கை நான். எங்க அப்பா பேரு ஜெயராமன். அம்மா பேரு வேதம்மாள் என்கிற சந்தியா. இவர்களுக்குப் பிறந்தவர்கள் அண்ணன் ஜெயக்குமார், அடுத்து அக்கா ஜெயலலிதா. கடைசியாக பிறந்தவள்தான் நான்.
எங்களுக்கெல்லாம் மூத்தவர் அப்பாவின் முதல் தாரத்துப் பையன் வாசுதேவன். அவரும் பெங்களூரில்தான் இருக்கிறார்.
நான் எங்க அம்மா வயிற்றில் மூன்று மாத கருவாக இருக்கும்போது, அப்பா ஜெயராமன் இறந்துவிட்டார். நான் பிறந்து மூன்று மாதத்திலேயே என் அம்மா அன்றைய சினிமா துறையில் புகழ்பெற்ற ஆர்ட் டைரக்டர் பி.தாமோதரப் பிள்ளையிடம் என்னை வளர்க்கக் கொடுத்துவிட்டார்.
‘மலைக்கள்ளன்’, ‘மரகதம்’, ‘பெட்டத கண்ணா’ என பல கன்னட, தமிழ் சினிமாக்களில் ஆர்ட் டைரக்டராக பணியாற்றியவர்தான் பி.தாமோதரப்பிள்ளை. என்னை தாமோதரப் பிள்ளை செல்வச் செழிப்பாக வளர்த்தார்.
அப்பா தாமோதரப் பிள்ளை கோவையில்  உள்ள பட்சிராஜா ஸ்டுடியோவில்   வேலைபார்த்துக்கொண்டிருந்ததால் என் ஐந்து வயது வரை கோயம்புத்தூரில் உள்ள ராமநாதபுரம் ஏரியாவில் குடியிருந்தோம். அதன் பிறகு அப்பா தாமோதரப் பிள்ளையுடன் நாங்கள் பெங்களூரு வந்துவிட்டோம். இங்கே களாசிபாளையத்தில் குடியிருந்தோம்.
தமிழ் மீடியத்தில் படித்துக்கொண்டிருந்த என்னை, என் அம்மா சந்தியா பெங்களூரில் உள்ள மகிளா சிவ சமாஜ் என்ற ஆங்கில மீடியத்தில் சேர்த்துப் படிக்கவைக்க அழைத்துக்கொண்டு போனார். ஆனால், தாமோதரப் பிள்ளை அதனை ஏற்கவில்லை.
‘உன் பிள்ளையை இங்கிலீஷ் மீடியத்திலேயே படிக்க வைக்கிறேன்’ என்று சொல்லி வுமன் பிசி லீக் என்ற ஆங்கிலப் பள்ளியில் என்னைச் சேர்த்தார். டி.எஸ்.பட்டு என்பவரிடம் பரதநாட்டியம், குச்சிபிடி, கதகளி கிளாஸிகலும் பயில என் அம்மா சேர்த்துவிட்டார்.
வாரம் ரெண்டு, மூன்று முறை என்னை அம்மா வந்து பார்ப்பார். வெளியில் கூட்டிக்கொண்டு போய் சாக்லேட் வாங்கித் தருவார். பிறகு கிளம்பும்போது தங்க நகைகளும் அணியவைத்து மகிழ்வார்.
ஒருமுறை, ‘உங்க அக்கா நடித்த படத்தைக் காட்டுகிறேன்’ என்று பெங்களூரு ஜே.சி ரோட்டில் உள்ள சிவாஜி தியேட்டருக்குக் கூட்டிட்டுப் போனார். அந்த தியேட்டரில், எம்.ஜி.ஆர் அங்கிள்கூட அக்கா நடித்த ‘காவல்காரன்’ படம் ஓடியது. இடைவேளை நேரத்தில் என் வளர்ப்பு தந்தை தாமோதரப் பிள்ளை வந்து என்னை கூட்டிக்கொண்டு வந்துவிட்டார். இதெல்லாம் இன்றும் என் நினைவுகளில் பசுமையாக உள்ளது.”
p4
”நீங்கள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் தங்கைதான் என்பதற்கு என்ன ஆதாரம் இருக்​கிறது?”

”எங்க அம்மா சந்தியா என்னை கட்டிப் பிடித்துக்கொண்டு இருப்பதுபோல ஒரு போட்டோவை ரொம்ப நாளாக வைத்திருந்தேன். அது எப்படியோ தொலைந்துவிட்டது. ஜெயலலிதாதான் என் அக்கா என்று நிரூபிக்க என்னிடம் எந்த ஆதாரமும் இப்போது கிடையாது.
ஆனால், நான் இருக்கிறேன். என்னை டி.என்.ஏ டெஸ்ட் எடுத்துப் பார்த்தால், உண்மைகள் தெரியும். எனக்கு 16 வயது இருக்கும்போது என் வளர்ப்புத் தந்தை தாமோதரப் பிள்ளை, அப்போதைய கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார் அங்கிளிடம் அழைத்துக்கொண்டு போனார். என்னைப் பார்த்ததும் ராஜ்குமார் அங்கிள் என் அப்பாவிடம், ‘இது சந்தியா பொண்ணா?’ என்று கேட்டார். அதற்கு அப்பா ‘ஆமாம்’ என்று சொன்னது இப்பவும் ஞாபகத்தில் இருக்கிறது.”
”உங்களைப் பற்றி தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு தெரிந்திருக்க வாய்ப்பு இருக்கிறதா? அவரைச் சந்தித்து இருக்​கிறீர்களா?”
”அக்காவுக்கு நிச்சயமாகத் தெரிந்திருக்கும். அக்காவைப் பார்க்க பலமுறை முயற்சி செய்திருக்கிறேன். சந்திக்க முடியவில்லை. அவர் மிகப்பெரிய இடத்தில் இருக்கிறார். நான் சாதாரணமாக இருக்கிறேன். ஆட்டோவில் போய், ‘முதல்வர்தான் என் அக்கா’ என்று சொன்னால் யார் நம்புவார்கள்? ஆனால், என் மகள் அமிர்தா, முதல்வரைப் பார்த்திருக்கிறார். ஆனால் பேச வாய்ப்பு கிடைக்கவில்லை.
நான் 6-ம் வகுப்பு படித்துக்கொண்டு இருக்கும்போது, அம்மா என்னை மைசூரில் உள்ள ஒரு ஸ்கூலுக்குக் கூட்டிட்டுப் போனார். அங்கே அக்கா பேட்மிண்டன் ஆடிட்டு இருந்தார்.. அக்காவுக்குத் தெரியாமல் அம்மா என்னிடம் அக்காவைக் காட்டி, ‘இதுதான் உங்க அக்கா’ என்று சொன்னார்.
அம்மா உயிரோடு இருக்கும்வரை சென்னைக்குச் சென்று தேனாம்பேட்டையில் உள்ள ஒரு கோயிலில் சந்திப்போம். என்னை அண்ணன் ஜெயக்குமார் வீட்டுக்கும் அழைத்துப் போயிருக்கிறார். அண்ணன் ஜெயக்குமார், ‘இனி இவளை இங்கு கூட்டிட்டு வந்தால், நடப்பதே வேறு’ என்று திட்டுவார்.
ஆனால், அக்கா சினிமா துறையில் பிஸியாக இருந்ததால், அவரைச் சந்திக்க முடியவில்லை. அண்ணன் ஜெயக்குமாரையும் அண்ணி விஜயலட்சுமியையும் பலமுறை சந்திக்கச் சென்றிருக்கிறேன். ஆனால், அண்ணன் என்னைத் திட்டி அனுப்புவார். நான் அழுதுகொண்டே வந்துவிடுவேன்.
என் அண்ணன் ஜெயக்குமார் இறந்ததுகூட எனக்குத் தெரியாது. அவர் இறப்புக்குப் பிறகு சென்றபோது, அண்ணன் மகள் தீபா, ‘எங்க அப்பா செத்ததுக்கே வரலை. அப்புறம் என்ன உங்ககூட உறவு வைத்துக்கொள்ள இருக்கு?’ என்று சொல்லி அனுப்பிவிட்டார். தீபா வெளியில் சென்ற பிறகு, அண்ணியைச் சந்தித்துப் பேசிவிட்டுதான் வந்தேன்.”
”இதுநாள் வரை ஏன் வெளியில் சொல்லாமல் இருந்தீர்கள்?”
”அதைச் சொல்வதற்கு சந்தர்ப்பம் வரவில்லை. இப்போதுகூட நானாக வெளியுலகத்துக்கு இந்தத் தகவல்களை சொல்லவில்லை. திடீரென கன்னட சேனல்கள் சிலவற்றில் இருந்து வந்தார்கள். அவர்களுக்கு இந்த உண்மைகள் எப்படி தெரிந்ததோ தெரியவில்லை.
என்னிடம் இதுபற்றி துருவித் துருவி கேட்டார்கள். நான் எல்லா உண்மைகளையும் சொல்லிவிட்டேன். ஒருபோதும் அக்காவின் பெயருக்குக் களங்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்று கனவில்கூட நான் நினைத்தது இல்லை. அக்கா என்னை தங்கையாக ஏற்றுக்கொண்டாலும் சரி, இல்லை என்றாலும் சரி, நான்தான் அவரது தங்கை என்பது நிச்சயம் உண்மை.”

”முதல்வரிடம் எதிர்பார்ப்பது என்ன?”
”நான் மிகுந்த வறுமையில் இருந்தபோதுகூட, அக்காவிடம் உதவிக்காகச் சென்றது இல்லை. இப்போது கடவுளின் அருளால் ஓரளவுக்கு நன்றாக இருக்கிறேன். அதனால், அவரின் சொத்துகளுக்கோ, அதிகாரத்துக்கோ ஆசைப்பட்டது இல்லை. அக்காகிட்ட நான் கேட்கிறதெல்லாம் ஒன்று மட்டுதான். எனக்கும் என் ஒரே மகள் மஞ்சு என்கிற அமிர்தாவுக்கும் அக்காவின் அன்பு கிடைத்தால் போதும்!” என்று உருகுகிறார் சைலஜா.
- வீ.கே.ரமேஷ்  .vikatan.com

கருத்துகள் இல்லை: