செவ்வாய், 8 மே, 2012

Kanimozhi:சென்னை சங்கமம்' தற்காலிகமாகத் தான் ஒதுக்கப்பட்டுள்ளது

கட்சிக்காரர்களின் ஆரவார வரவேற்பின்றி, புழல் மத்திய சிறைக்கு தனியே வந்த எம்.பி., கனிமொழி, கொலை வழக்கில் சிக்கிய முன்னாள் அமைச்சரை சந்தித்த பின், "எத்தனை வழக்குகள் போட்டாலும் தி.மு.க.,வை ஒடுக்கி விட முடியாது' என்று தெரிவித்தார்.

தி.மு.க., ஆட்சியின் போது, திருவொற்றியூரில் நடந்த மீனவர் கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் கே.பி.பி.சாமி, கடந்த 6 மாதங்களாக புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை, ராஜ்யசபா எம்.பி., கனிமொழி நேற்று சந்தித்தார்.

மொத்தம், 20 நிமிடங்கள் நடந்த சந்திப்புக்குப் பின், அவர் நிருபர்களிடம் கூறியதாவது:தி.மு.க.,வினர் மீது, அ.தி.மு.க., அரசு நியாயமற்ற வகையில், ஒவ்வொரு வழக்காகப் போட்டுக் கொண்டிருக்கிறது. இது பற்றி, வரும் 12ம் தேதி, தி.மு.க., தலைவர் கருணாநிதி தலைமையில், வழக்கறிஞர்கள் கலந்து கொள்ளும் கூட்டம், சென்னையில் நடக்க உள்ளது. அதில், வழக்குகளை எப்படி எதிர்கொள்வது என்பது பற்றி விவாதிக்கப்படும்.தொடர் வழக்குகளைப் போட்டு, தி.மு.க.,வை ஒடுக்கி விடலாம் என்பது தவறான கற்பனை. இன்னும் சொல்லப்போனால், எங்களுக்கு இப்போது தான் மன உறுதியும், நம்பிக்கையும் அதிகரித்துள்ளது. "சாமிக்கு துணையாக தி.மு.க., இருக்கிறது'. அதனால், சாமி மன உறுதியுடனும், உடல் நலத்துடனும் இருக்கிறார். தி.மு.க.,வை விட்டு விலகவும் அவர் நினைக்கவில்லை.

சங்கமம்: தமிழகத்தில் உள்ள பல நூறு நாட்டுப்புற கலைஞர்களுக்கு வாழ்வளித்த, "சென்னை சங்கமம்' தற்காலிகமாகத் தான் ஒதுக்கப்பட்டுள்ளது. மிக விரைவில் அது, புத்துணர்வுடன் மக்களை சந்திக்கும். அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

வரும் பார்லிமென்ட் தேர்தலில், தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி நீடிக்குமா அல்லது மாற்றம் வருமா? என்ற கேள்விக்கு, பதில் ஏதும் சொல்லாமல் நழுவினார்.

கடந்த ஜனவரி 12ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு, புழல் மத்திய சிறைக்கு வந்த கனிமொழியை வரவேற்க, கட்சியினர் அங்கு இல்லை. "மாஜி' அமைச்சர் சாமியை சந்திக்க, புழல் சிறைக்கு நேற்று கனிமொழி வந்த போதும், அதே நிலை தான் இருந்தது. முன்னாள் அமைச்சர் சாமி, அவரது தம்பி சங்கர் ஆகியோர் குடும்பத்தைச் சேர்ந்த சில பெண்கள் மட்டும், கனிமொழிக்கு சால்வை அணிவித்து, வாழ்க கோஷம் எழுப்பினர்.

-- நமது நிருபர் --

கருத்துகள் இல்லை: