வெள்ளி, 11 மே, 2012

எல்லா தேசத்திலும் பார்வையாளர்களை உலுக்கி எடுத்திருக்கிறது வழக்கு எண் 18/2


களி மண்ணை பிசைந்து    கலைவண்ணம் படைத்திருக்கிறார்    பாலாஜி சக்திவேல் என்பதை நேற்றுதான் இன்னும் நன்றாக புரிந்து கொள்ள முடிந்தது. வழக்கு எண் படத்தில் வரும் ரோசியக்கா, ‘நான் சூளையில பூ வித்துகிட்டு இருந்தேங்க. சாருதான் என்னைய செலக்ட் பண்ணி நடிக்க வச்சு அல்லாரையும் என்னை பாராட்டுற மாதிரி ஆக்கிட்டாரு’ என்றார்.
நான் ரெட்ஹில்சுல வீட்டு வேலை செஞ்சுட்டு இருந்தனுங்க. ரெண்டு பொம்பள புள்ளைங்க எனக்கு. நடிக்கிறீயான்னு கேட்டு இட்டுட்டு போனாங்க. அங்க சாரு சொல்லிக் கொடுத்ததை செஞ்சேன். இன்னைக்கு ஊரு உலகமெல்லாம் என்னை பாராட்டுறாங்க. என் குடும்பத்துக்கே விளக்கேத்தி வச்சுட்டாருங்க அவரு என்று கூறுகிற பார்வதியம்மா, படத்தின் ஹீரோயின் ஜோதிக்கு அம்மா.
கரும்பு வெட்டிகிட்டு இருந்தேங்க. அங்க கார்ல வந்தாருங்க டைரக்டரு. வேறொரு ஆளை கூப்பிட்டு வசனத்தை சொல்லி நடிக்க சொன்னாங்க.
அவரு தடுமாறுனாரு. நான் இப்படி பேசு. அப்படி பேசுன்னு சொன்னேன். நீ நல்லா பேசுற, நீயே நடியேன்னுட்டாங்க. சாரோட ‘காதல்’ படத்தை பல முறை பார்த்துருக்கேன். அவரு படத்திலேயே நான் நடிப்பேன்னு நினைக்கலீங்க. – இது ஸ்ரீ யின் அப்பாவாக நடித்திருக்கும் ஒரு நிஜக் கூலித்தொழிலாளியின் குரல்.
ஊர் ஊரா போயி கூத்துல ஆடுறதுதான் என் தொழில். நானெல்லாம் சினிமாவில் நடிப்பேன்னு கனவுல கூட நினைக்கல. என்னை உலகத்துக்கே காட்டிட்டாரு சார். -நிஜக்கூத்துக் கலைஞன் சின்னச்சாமியின் நெகிழ்ச்சியான குரல் இது.
வழக்கு எண் 18/2 படத்தின் சக்ஸஸ் மீட்டில் (Vazhakku enn 18/9 Movie Press Meet) இப்படி அத்தனை பேரையும் நம் முன்பாக பேசச்சொல்லி நேற்றைய நாளின் சில மணி நேரங்களை மிக முக்கியமானதாக்கியிருந்தார் பாலாஜி சக்திவேல்.
செய்தி மற்றும் ஊடகங்களில் மட்டுமல்ல, படம் வெளியான எல்லா தேசத்திலும் பார்வையாளர்களை உலுக்கி எடுத்திருக்கிறது இப்படம். இதை முறையாக மக்களிடம் கொண்டு சேர்த்த மீடியாவுக்கு நன்றி சொல்ல நினைத்த பாலாஜி சக்திவேல், நன்றிங்கிற ஒரு வார்த்தை ரொம்ப ஃபார்மலா இருக்கும். அதனால… என்று கூறி சற்று இடைவெளி விட்டுவிட்டு அப்படியே மீடியாக்காரர்களின் முன்பு சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்தார்.
இந்த அதிர்ச்சியை தாங்கிக் கொள்ள முடியாத பத்திரிகையாளர்களும், பாலாஜி சக்திவேலின் சக கலைஞர்களும் ஏதோ ஒன்று தொண்டையை அடைக்க செய்வதறியாது நின்றிருந்தார்கள்.
ம்ஹும், பாலாஜி சக்திவேல் என்ற மிக அற்புதமான இயக்குனரை தமிழ் கூறும் நல்லுலகம்தான் காலில் விழுந்து வணங்கியிருக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை: