திங்கள், 7 மே, 2012

துக்ளக் ராமசாமி..கலைஞர்..ஜெயலலிதா..இலங்கை

எதைக் கொண்டு; இதைப் பார்ப்பது?கலைஞர் கடிதம் (4.5.2012)

தி.மு.க. தலைவர் கலைஞர் முரசொலியில் உடன்பிறப்புகளுக்கு எழுதியுள்ள கடிதம் வருமாறு:-
உடன்பிறப்பே, துக்ளக் ராமசாமியார்; இலங்கைப் பிரச் சினையில்  தி.மு.க.வின் நிலை என்ன? என்ற ஒரு கேள்விக்கு 2-5-2012 தேதிய  இதழில்,  தி.மு.க.வின் இலங்கைப் பிரச்சினை நிலை கெலிடாஸ்கோப்  மாதிரி, ஒவ்வொரு அசைவுக்கும் நிறம் மாறும், டிசைன் மாறும் என்றெல்லாம் பதில் அளித்து,  அதற்கு  நமது விடுதலை நாளிதழில்  சிறப்பானதோர் பதிலை தலையங்கமாகவே தீட்டியிருக்கிறார்கள்.

ஈழத் தமிழர் பிரச்சினையில் தி.மு.க. வின் நிலைப் பாட்டை விமர்சிக்கக் கிளம்பியிருக்கும்  திருவாளர் சோ.ராமசாமி, ஈழத்தமிழர் பிரச்சினையிலும் சரி,  அ.இ.அ.தி.மு.க., அதன் பொதுச் செயலாளர்   ஜெயலலிதா  அவ்வப்போது  எடுத்து வந்திருக்கிற  முரண்பாடுகள் பற்றியும் ஒரே ஒரு வரிகூட எழுதா தது ஏன்?  முரண்பாடுகளைச் சுட்டிக்காட்டத் தயங்குவது ஏன்? அல்லது அஞ்சுவது ஏன்?  என்று கேட்டுள்ளது விடுதலை! 4-10-1990 தேதியிட்ட இந்தியன் எக்ஸ் பிரஸ்  ஆங்கில நாளேட்டுக்கு  ஜெயலலிதா அளித்த பேட்டியில் இலங்கைத் தமிழர் பிரச்சினை பற்றி ஜெயலலிதா  முதன் முதலாகக் கூறியது என்ன தெரியுமா?
சிங்கள ராணுவமும், காவல் துறையும்  இலங் கையில்  தமிழ் இனத்தை அழிப்பதில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
விடுதலைப் புலிகள் இயக்கம் துணிவான போராட்டத்தில் ஈடுபட்டு சிங்கள ராணுவத்தை எதிர்த்து  தீரத்துடன் போர்  நடத்தி வருகிறது. கடந்த இரு மாதங் களில்  தமிழ்நாட்டில் புகார் கூறும் அளவுக்கு எந்த விதமான நடவடிக்கை களிலும்  விடுதலைப் புலிகள் ஈடுபட வில்லை.   இப்போது  விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு நாட்டின் அரசாங்கத்தை எதிர்த்துப் போர் நடத்தி வருகின்றது.   இது ஒரு அதி தீரமான செயல்.  விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டால் இலங்கையில் உள்ள  தமிழினம் முழுவதும்  அழிந்து விடும் என்பதை  நாம் மனதில் நிறுத்த வேண்டும்.    விடுதலைப் புலிகளின் வெற்றி இலங்கைத் தமிழர் களின் வெற்றியாகும்.  அவர்களுக்கு உதவும் வகையில்  எதுவும் செய்வதற்குப் பதிலாக  தமிழக முதலமைச்சர் கருணாநிதி தன்னைப் பாதுகாத்துக் கொள்வதிலேயே  கவனம் செலுத்தி வருகிறார். அவருடைய அனைத்து சக்தி மற்றும் கவனம் முழுவதும்  முதலமைச்சரின் நாற்காலியைப் பாதுகாத்துக் கொள்வதற்கே  அர்ப்பணிக்கப்பட்டு வருகிறது.  கருணாநிதியின் மனோபாவம் இவ்வாறு இருந்தால்  இதற்கு மாறாக  வேறுவிதமாகச் செயல் படுவதை  வி.பி. சிங்கிடம் நாம் எதிர்பார்க்க முடி யாது.   மாறியுள்ள சூழ்நிலையில் ஒரே மருந்து  தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளை ஒட்டுமொத்தமாக ஆதரிப்பதுதான்.  தனது அதிகாரத்திற்கு உட்பட்ட இயன்ற அனைத்து உதவிகளையும் முதலமைச்சர் வழங்கவேண்டும்.   விடுதலைப் புலிகளை இந்திய அரசு நூற்றுக்கு நூறு  ஆதரிக்க வேண்டும்
இந்தப் பேட்டியில் ஜெயலலிதா கூறியபடி தான்  இலங்கைத் தமிழர் பிரச்சினையில் அவர்  நடந்து வருகிறாரா?  சோ. ராமசாமியாருக்கு மனச்சாட்சி இருக்கிறதா?  அவருக்கு உண்மை தெரியாதா?   விடு தலைப் புலிகளிடம் ஜெயலலிதா கொண்ட இதே பாசம் நீடித்ததா?   1990ஆம் ஆண்டு  அக்டோபரில்  செய்தியாளர்களிடம்;  நான் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக இல்லை என்று கூறிய அதே ஜெயல லிதாதான்,  30-12-1990 அன்று  அன்றைய குடியரசுத் தலைவராக இருந்த திரு. ஆர். வெங்கட்ராமன் அவர்களைச் சந்தித்து, தி.மு.க. அரசு விடுதலைப் புலிகளின் செயல்களுக்கு உடந்தையாக உள்ளது என்று புகார் மனு தயாரித்துக் கொடுத்தார்.
சோ.ராமசாமியாரின் ஆதரவுக்கு இன்று ஆளாகியுள்ள ஜெயலலிதா 1997ஆம் ஆண்டு  தி.மு. கழகம்  ஆட்சியிலே இருந்தபோது,  இலங்கைத் தமிழர் பிரச்சினை எழுந்த நேரத்தில்  என்ன சொன்னார்  தெரியுமா?
சட்டம் ஒழுங்கைச் சீர்குலைக்க கருணாநிதி முயல்கிறார் -  விடுதலைப் புலிகள்  தமிழகத்தில் மீண்டும் தலை தூக்கி விட்டார்கள்  என்று அறிக் கை  அல்லவோ  ஜெயலலிதா  விடுத்தார்.  இலங்கை விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை  உடனடியாக இலங்கை  அரசு கைது செய்து,  இந்திய அரசிடம் ஒப்படைப்ப தற்கு  மத்திய அரசு உடனடி நடவடிக்கையை  மேற் கொள்ள வேண்டும் என்று  இச்சட்டப்பேரவை வற்புறுத்துகிறது.  மேலும், தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் இயக்கத்தைச் சேர்ந்த  எந்த  ஒருவரையும் இந்தியத் திருநாட்டிற்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது என்றும்  மத்திய அரசை  இப்பேரவை வற்புறுத்து கிறது.   இலங்கை அரசின் அனுமதியைப் பெற்று  நமது  இந்திய இராணு வத்தை இலங்கைக்கு அனுப்பி பிரபாகரனை சிறை பிடித்துக் கொண்டுவர வேண்டும்.  என்று  தமிழகச் சட்டப் பேரவையில்  16-4-2002 அன்று  தீர்மானம் கொண்டு வந்து  நிறை வேற்றிய ஜெயலலிதா, இலங்கைப் பிரச்சினையில் ஒரே நிலையான கொள்கை உடைய வராக சோ.ராமசாமியாரின் கண்ணுக்குத் தெரிகிறாராம்.   அது மாத்திரமா?
இலங்கையில்  ராஜ பக்ஷேயின்  சிங்களப் படையினர்  அப்பாவித் தமிழர்களைக் கொன்று குவித்தபோது, அதனைக் கண்டித்து  தமிழகத்தில் ஊர்வலங்களும்,  பொதுக்கூட்டங்களும்,  ஆர்ப் பாட்டங்களும்  நடைபெற்ற போது, இலங்கைத் தமிழர்களைக் கொல்ல வேண்டுமென்று இலங்கை ராணுவம் எண்ணவில்லை.   ஒரு யுத்தம் - ஒரு போர் நடக்கும்போது அப்பாவி மக்கள் கொல்லப் படுவார்கள். இதில் எந்த நாடும் விதி விலக்கல்ல.   எங்கே யுத்தம் - போர் நடந் தாலும் அப்பாவி மக்கள் கொல்லப்படுகிறார்கள்.   ஆனால் இன்று இலங் கையில் என்ன நடக்கிறதென்றால், இலங்கைத் தமிழர்களை பாதுகாப்பான இடத்திற்குச் செல்லவிடாமல் விடுதலைப் புலிகள் அவர்களைப் பிடித்து வைத்துக் கொண்டு வலுக்கட்டாயமாக ராணுவத்தின் முன்னால் அவர்களை ஒரு கேடய மாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்று 17-1-2009 அன்று   அறிக்கை விடுத்த  ஜெயலலிதா,  இலங்கைத் தமிழர் பிரச்சினையில் ஒரே நிலையான கொள்கை உடையவராக சோ.ராமசாமியாரின் பேனாவுக்குத் தோன்று கிறாராம்.
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவுத் தலைவராக இருந்த தமிழ்ச் செல்வன் மறைந்தபோது  4-11-2007 தேதியிட்ட முரசொலியில்  நான் ஒரு இரங்கல் கவிதை எழுதினேன் என்பதற்காக, ஜெயலலிதா, வெளியிட்ட அறிக் கையில் புலிகளுடன்  கருணாநிதிக்கு  ரகசியத் தொடர்பு  இருக்கிறது என்பதற்கு இதுவே சான்று. அது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்று தெரிவித்த ஜெயலலிதா சோ.ராமசாமியாரின் பார்வையில் நிலை யான கொள்கை உடையவராகத் தெரிகிறாராம்,  நான்தான் முரண்பாடான கொள் கையை உடையவனாம்!
அது மட்டுமா?    இலங்கையில்  தமிழ்  இனப் படுகொலையைக் கண்டித்து, போர் நிறுத்தம் உடனே அறிவிக்கப்பட வேண்டுமென்று  தமிழகத் தில்  அனைத்துக் கட்சிக் கூட்டத்தில்  ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றிய போது  -   இதே ஜெயலலிதாதான்,  விடுதலைப் புலிகளுக்கு  ஆதர வாக  கருணாநிதி  செயல்படுகிறாரோ என்ற சந்தேகம்தான்  தமிழக மக்கள் மனதில் எழுந் துள்ளது.    இலங்கையில்  தற்போது நடக்கும் உள் நாட்டுப் போரை  நிறுத்துவதற்கான  அதிகாரம்  இந்திய  அரசிடம் இல்லை என்று கூறியதோடு -  இலங்கையில்  நடக்கும்  யுத்தம்  தடை செய்யப் பட்ட விடுதலைப் புலிகள்  என்னும்  பயங்கரவாத  இயக்கத்திற்கு எதிரான யுத்தம் என்றும்  -  அதனால் தான் விடுதலைப் புலிகள்  அமைப்பின்  தலைவர்கள் இறந்ததற்கு  கருணாநிதி  இரங்கற்பா  எழுதுகிறார்
என்றும்   அறிக்கை விடுத்து  -  அந்த அறிக் கையை; தமிழக ஏடுகள் எல்லாம் வெளியிட்டதை சோ. ராமசாமியார் வசதியாக மறந்து விட்டாரா?
இலங்கையில் வாழுகின்ற  ஈழத்  தமிழர்களின்  உரிமைகளுக்காகவும்  -  இரண்டாம் நிலை குடி மக்கள் என்று ஒதுக்கப்படுவதிலிருந்து  அந்த மக்கள்  இலங்கையில் -  எல்லா உரிமைகளையும்  பெற்று  சமத்துவமாகவும்,  சமநீதியும் பெற்று  வாழும் வகை வகுக்கப்பட வேண்டும் என்றும்,  அதற்காக  1956 முதல் ஆட்சியில் இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும் தொடர்ந்து  குரல்  கொடுத்து வரும்  தி.மு.கழகத்தையும்  -  அந்தக் கழகத்தின்  தலைவனாக இருக்கின்ற என்னையும்   இலங்கைத் தமிழர் பிரச்சினையிலே  குறை கூறு வதற்கு  சோ. ராமசாமியாரோ அல்லது அ.தி.மு.க. வோ தகுதி உடையவர்கள் தானா?
இந்தியாவிலிருந்து இலங்கைக்கு அனுப்பப் பட்ட அமைதிப்படை இலங்கைத் தமிழர்களையே கொன்று குவித்துவிட்டு இந்தியத் தாயகம் திரும்பிய நேரத்தில்  முதல் அமைச்ச ராக இருந்த நான் அவர்களை வரவேற்கச் செல்ல மறுத்துவிட்டேன். அதைப்பற்றி அப் போது  ஜெயலலிதா இலங் கைக்குச் சென்று விட்டு  நாடு திரும்பிய  இந்திய அமைதிப் படையை வரவேற்கச் செல்லாதவர்தான்  தி.மு.க. தலைவர் கருணாநிதி என்று விமர்சனம் செய்தது சோ.ராமசாமியாருக்கு நினை வில்லையா?
இலங்கையிலே இறுதிக்கட்டப் போர் என்று சொல்லத்தக்க அளவிற்கு 2008-2009ஆம் ஆண்டு களில் நடைபெற்ற போது 14-10-2008 அன்று அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தை முதலமைச்சர் என்ற முறையில் ஒவ்வொரு கட்சியின் தலைவருக்கும் நானே அழைப்புக் கடிதத்தில் கையெழுத்திட்டு அனுப்பினேன்.   ஆனால் அந்தக் கூட்டத்தை ஜெயலலிதா  கண் துடைப்பு நாடகம்  என்று கூறி புறக்கணிப்பு செய்தார்.   சோ. ராம சாமியாருக்கு இதுவும் தெரியுமெனக் கருதுகிறேன்.
இலங்கைத் தமிழர்களைக் காக்க வேண்டு மென்ற  பிரச்சினையில்  1956ஆம் ஆண்டிலிருந்து  நான் மேற்கொண்ட நடவடிக்கைகளையெல்லாம்   தேதிவாரியாக ஏற்கனவே நான் எழுதியிருக்கிறேன்.     நான் ஈடுபட்ட இந்த 55 ஆண்டுக்கால இலங்கைத் தமிழர் பிரச்சினையில்,  இலங்கைத் தமிழர்களின் நலன்கள் பொறுத்த விஷயத்தில்  நான் எந்த நேரத்திலும் யாருக்கும் விட்டுக் கொடுத்ததாகக் கூற முடியாது. ஆனால் ஜெயலலிதாவின் முரண்பாடு  பற்றி  எதைக் கொண்டு பார்ப்பது என்று  சோ. ராமசாமிதான் சொல்ல வேண்டும். அன்புள்ள,
மு.க.

கருத்துகள் இல்லை: