திங்கள், 7 மே, 2012

மதுரை ஆதீனம், நித்தியானந்தாவுக்கு வழங்கிய சுப்ரீம் சிவில் ரைட்ஸ்!

Viruvirupu “நித்தியானந்தா தமது இளவலாகி விட்டதால், இந்திய குற்றவியல் சட்டங்களுக்கு எல்லாம் அப்பாற்பட்டவராகி விட்டார் என்கிறார். 
மதுரையில் இளைய ஆதீனமாக யாரை அறிவிக்க வேண்டும் என்ற அதிகாரம் எனக்கு மட்டும்தான் உள்ளது. அதைப் பற்றி யாரும் கேள்வி கேட்க முடியாது. யாருக்கும் அந்த உரிமை கிடையாது” என்று கூறியுள்ளார் மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் சுவாமிகள்.
அந்த அதிகாரத்தை வைத்து இவர் இளைய ஆதீனமாக அறிவித்த நித்தியானந்தா விவகாரமே தற்போது இடியாப்ப சிக்கலாகி உள்ளது. மதுரை ஆதீனத்தின் இந்தச் செயலுக்கு, தமிழகத்தில் உள்ள பல்வேறு மடங்களின் மடாதிபதிகளும், இந்து மதத்தின் பல அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அவர்கள் சட்ட நடவடிக்கை எடுப்போம் என்கிறார்கள்.

அவர்கள் எடுக்கப்போகும் சட்ட சடவடிக்கைகள் ஒருபுறமாக நெருக்க, மறுபுறமாக இந்திய சட்டத்துறைக்கு நெருக்கடி கொடுத்திருக்கிறார் மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் சுவாமிகள்.  அவர் என்ன சொல்கிறார் என்றால், நித்தியானந்தா தமது இளவலாகி விட்டதால், இந்திய குற்றவியல் சட்டங்களுக்கு எல்லாம் அப்பாற்பட்டவராகி விட்டார் என்கிறார்.
சாதாரண மனிதர்களுக்குதான் சட்டங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. நித்தியானந்தா இனி சாதாரண மனிதரல்ல. மதுரை இளைய ஆதீனமாகி விட்டதால், நித்தியானந்தா சட்டத்துக்கு பணிய வேண்டிய தேவை ஏதும் கிடையாது என்பது மூத்த ஆதீனத்தின் நிலைப்பாடு. “இளைய ஆதீனமாக உள்ள நித்தியானந்தா இனிமேல் கோர்ட், போலீஸ் நிலையங்களுக்கு வர மாட்டார். அவர்மீது உள்ள பாலியல் புகார் பற்றி யாரும் பேசக்கூடாது” என்று திருவாய் மலர்ந்தருளி உள்ளார் அவர்.
அதாவது நித்தியானந்தாவிடம் இனிமேல் கோர்ட் ஆர்டர், கேஸ் நோட்டீஸ் எதுவுமே செல்லுபடியாகாது என்கிறார் மூத்த சுவாமிகள். பாலியல் புகார் தொடர்பாக பப்ளிக் பிராசிகியூட்டரோ, நீதிபதியோகூட வாய்திறக்க முடியாது. சுவாமிகள் ஆர்டர் அப்படி.
மதுரை ஆதீனம் அருணகிரி நாதர் சுவாமிகளின் இந்த உத்தரவு, நித்தியானந்தா ஆதரவாளர்களை ஆனந்தக் கடலில் ஆழ்த்தியுள்ளது. இளைய சுவாமிகளுக்கும் மகிழ்ச்சிதான். ஆனால், இந்திய குற்றவியல் சட்டத்தில், இதற்கெல்லாம் இடம் இருப்பதாக தெரியவில்லை.
இளைய சுவாமிகளுக்கு சுப்ரீம் சிவில் ரைட்ஸ் உள்ளதாக மூத்த ஆதீனம் எங்கே தெரிந்து கொண்டார் என்று சரியாகத் தெரியவில்லை. ஆனால் சிக்கல் என்னவென்றால், இந்திய குற்றவியல் சட்டப்படி, கோர்ட்டுக்கோ, போலீஸ் நிலையத்துக்கோ வர முடியாது என்று மறுத்துவிட்டு இவர் மடத்தில் இருந்துவிட்டால், அவர்கள் மடத்துக்கு வந்துவிடுவார்கள், அழைப்பு ஓலை சகிதம்அழைத்துச் செல்வதற்காக!
அழைப்பு ஓலையை அவர்களது பாஷையில் அரஸ்டு வாரண்ட் என்கிறார்கள்.

கருத்துகள் இல்லை: