வெள்ளி, 11 மே, 2012

ராசாவுக்கு ஜாமீன் வழங்க சி.பி.ஐ. கடும் எதிர்ப்பு:

டெல்லி:  2ஜி ஊழல் வழக்கில் கைதான முன்னாள் தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசாவின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு வரும் 15ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
கடந்த 15 மாதங்களாக திகார் சிறையில் உள்ள கோரி முதன் முறையாக மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீது இன்று விசாரணை நடந்தது. அப்போது ராசாவுக்கு ஜாமீன் வழங்க சிபிஐ கடும் எதிர்ப்புத் தெரிவித்தது.
2ஜி ஊழல் வழக்கில் முன்னாள் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இநத் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட திமுக எம்.பி. கனிமொழி உள்பட 14 பேர் கைது செய்யப்பட்டு திகாரில் அடைக்கப்பட்டனர். அவர்களில் 12 பேர் ஜாமீனில் விடுதலையாகி வெளியே உள்ளனர்.

இந்த வழக்கில் கைதான முன்னாள் தொலைத்தொடர்புத் துறை செயலாளர் சித்தார்த் பெகுரா ஜாமீன் கோரி கடந்த டிசம்பர் மாதம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால் உயர் நீதிமன்றம் அவரது மனுவை தள்ளுபடி செய்தது. இதையடுத்து அவர் உச்ச நீதிமன்றத்தை அணுகினார். அவரது வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் நேற்று முன்தினம் அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

பெகுராவுக்கு ஜாமீ்ன் கிடைத்ததையடுத்து தனக்கும் ஜாமீன் கோரி டெல்லி பாட்டியாலா சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார் ராசா. அந்த மனுவில், நான் நிரபராதி, என் மீது பொய்யான வழக்கை சிபிஐ பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அனைவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுவிட்டதால், என்னையும் விடுதலை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார் ராஜா.

இந்த மனு இன்று நீதிபதி ஓ.பி.சைனி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த ஜாமீன் மனுவை எதிர்த்து சிபிஐ தனது மனுவை தாக்கல் செய்தது.

ராசா தரப்பில் வழக்கறிஞர் ரமேஷ் குப்தாவும், சி.பி.ஐ. தரப்பில் வழக்கறிஞர் பி.பி.சிங்கும் வாதிட்டனர். ராசா தரப்பில், வழக்கின் விசாரணை நடைபெற்று வரும் நிலையில் விசாரணைக் காலம் முழுவதும் ஒருவர் சிறையில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று வாதிடப்பட்டது. ஆனால் ராசா முதல் குற்றவாளி என்று சுட்டிக்காட்டி சி.பி.ஐ. ஜாமீன் வழங்க எதிர்ப்புத் தெரிவித்தது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி தீர்ப்பை மே 15ம் தேதிக்கு ஒத்திவைத்தார். இதனால் ராசா தொடர்ந்து சிறையிலேயே இருந்தாக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

ராசாவுக்கு ஜாமீன் கிடைத்து விடும் என்று பெரும் எதிர்பார்ப்பில் இன்று நீதிமன்றத்தில் குவிந்திருந்த அவரது உறவினர்கள் பெரும் ஏமாற்றமடைந்தனர்.

கருத்துகள் இல்லை: