திங்கள், 23 மே, 2011

கொசுக்கடி, புழுக்கம், டாய்லெட் பிரச்சினை-திஹார் சிறையில் தவிக்கும் கனிமொழி


டெல்லி: சுதந்திரப் பறவையாக டெல்லிக்கும், சென்னைக்குமாக வந்து போய்க் கொண்டிருந்த கனிமொழி இன்று புழுக்கத்தில், தவிப்பில் திஹார் சிறையில் வாடிக் கொண்டிருக்கிறார்.

சென்னையில் உள்ள தனது வீட்டில் எவ்வளவு வசதியாக இருந்தாரோ அதற்கு அப்படியே தலை கீழாக மாறிப் போயுள்ளது கனிமொழியின் வாழ்க்கை. திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர் குட்டியூண்டு அறைக்குள் சுருண்டு போய்க் கிடக்கிறார்.

இரவில் சரிவர தூக்கம் வராமல் தவிக்கிறார். ஒருபக்கம் கொசுக்கடி, மறுபக்கம் புழுக்கம், இன்னொரு பக்கமோ டாய்லெட்டுக்குப் பக்கத்திலேயே படுக்க வேண்டிய நிலை என்று தவித்து வருகிறார் கனிமொழி.

வெள்ளிக்கிழமை இரவு தனது முதல் நாளை திஹார் சிறையில் மிகவும் நெருக்கடியுடன் சமாளித்த கனிமொழிக்கு நேற்றும் நரகமாகவே அது கழிந்துள்ளது.

நேற்று காலை ஐந்தரை மணியளவில் தன்னை எழுப்ப வந்த சிறை வார்டனிடம், தயவு செய்து என்னை தொந்தரவு செய்யாதீர்கள். ராத்திரி சரியாக தூங்க முடியாமல் தவித்து இப்போதுதான் தூங்கினேன் என்று கூறினாராம் கனிமொழி. இருப்பினும் சிறை விதிப்படி நீண்ட நேரம் தூங்க முடியாது என்று வார்டன் சற்று கண்டிப்புடன் கனிமொழியிடம் கூறினாராம். இதையடுத்து எழுந்துள்ளார் கனிமொழி.

தனது சிறை அறைக்குள்ளேயே பெரும்பாலான நேரத்தைக் கழிக்கிறார் கனிமொழி. அறைக்குள் மிகவும் புழுக்கமாக இருக்கிறதாம். கொசுத் தொல்லை தாங்க முடியவில்லையாம். கொசுக்களிடமிருந்து தப்பிக்க கொசுவர்த்தி கொடுத்தால் தேவலாம் என்று சிறைக் கண்காணிப்பாளரிடம் கோரிக்கை வைத்துள்ளாராம் கனிமொழி. ஆனால் அது கிடைத்ததா என்பது தெரியவில்லை.

காலையில் எழுந்ததும் அவர் இரண்டு துண்டு பிரெட், சப்ஜி, காபி குடித்தார். நேற்று காலையில் எழுந்து காலை உணவைச் சாப்பிட்டு முடித்ததும் தான் அடைக்கப்பட்டுள்ள சிறைப் பகுதியை சுற்றிப் பார்த்தாராம் கனிமொழி. அங்கு அடைக்கப்பட்டுள்ள தமிழ்ப் பெண் கைதிகளிடமும் அவர் பேசினாராம்.

கனிமொழி அடைக்கப்பட்டுள்ள சிறை அறையில் டாய்லெட்வசதி சரியாக இல்லையாம். இதை சிபிஐ கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டபோது நீதிபதியிடமே கூறினார் கனிமொழி.

நேற்று மாலை கோர்ட்டிலிருந்து சிறைக்குத் திரும்பியதும் அங்கிருந்த தமிழகத்தைச் சேர்ந்த சிறப்புகா காவல் படை போலீஸாரிடம் சிறிது நேரம் பேசினார். பின்னர் தனது அறையில் அமர்ந்து சில புத்தகங்களைப் படித்துள்ளார்.

இன்று ஞாயிற்றுக்கிழமை கோர்ட் விடுமுறை என்பதால் சிறைக்குள்ளேயே இன்றைய பொழுதைக் கழித்து வருகிறார் கனிமொழி. டிவி பார்ப்பதிலும், புத்தகம் படிப்பதிலும் தனது பொழுதைப் போக்கிக் கொண்டிருக்கிறார்.

கருத்துகள் இல்லை: