திங்கள், 23 மே, 2011

பயங்கரவாத தடைச்சட்டத்தை மீளாய்வது குறித்து அரசாங்கம் ஆலோசனை: சட்டமா அதிபர்

பயங்கரவாத தடைச் சட்டம் மற்றும் அவசரகால சட்டத்தை மீளாய்வு செய்வது தொடர்பாக அரசாங்கம் தீவிரமாக ஆலோசித்து வருவதாக சட்டமா அதிபர் மொஹான் பீரிஸ் நேற்று டெய்லி மிரருக்குத் தெரிவித்தார். இது தொடர்பாக எவ்வித இறுதித் தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என அவர் கூறினார். அவசரகாலச் சட்டத்தின் எந்த சரத்துக்களை நீக்கலாம் எவற்றை மேலும் தக்க வைத்திருக்கலாம் என்பது குறித்து நாம் ஆராய்கிறோம் என அவர் கூறினார். வசரகாலச் சட்டத்தை நீக்குமாறு இலங்கை அரசாங்கத்தை இந்தியா கடந்த 16 ஆம் திகதி கோரியமை குறிப்பிடத்தக்கது. பயங்கரவாத தடைச்சட்டம் 1978 ஆம் ஆண்டு தற்காலிக ஏற்பாடாக அறிமுகப்படுத்தப்பட்டது. 6 மாதத்திற்கு ஒரு தடவை அது நாடாளுமன்றத்தால் நீடிக்கப்பட்டது. எனினும 1982 ஆம் ஆண்டு இந்த நீடிப்பை கோரும் சரத்து நீக்கப்பட்டு நிரந்தர சட்டமாக ஏற்படுத்தப்பட்டது. பயங்கரவாத செயல்களுடன் தொடர்புடையவர்ளென சந்தேகிக்கப்படுவர்களை கைது செய்வதற்கு அரசாங்கம் இதை பயன்படுத்தியது. இதேவேளை, 2005 ஆம் ஆண்டு அப்போதைய வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் படுகொலை செய்யப்பட்டதையடுத்து அவசரகால நிலையை அரசாங்கம் மீண்டும் கொண்டுவந்தது. அப்போதிருந்து அவசரகால நிலை, நாடாளுமன்றத்தால் மாதாந்தம் நீடிக்கப்படுகிறது. கடந்த வருடம் அதன் சில விதிகளை அரசாங்கம் தளர்த்தியது. யுத்த காலத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு மாத்திரம் அவசரகாலநிலை நீடிப்பு எதிராக வாக்களித்தது. யுத்தம் முடிந்தபின் ஐ.தே.க. மற்றும் ஜே.வி.பியும் எதிர்த்து வாக்களித்து வருகின்றன.

கருத்துகள் இல்லை: