செவ்வாய், 24 மே, 2011

ரஜினிக்கு சிறப்பு சிகிச்சை: அமெரிக்க மருத்துவர் குழு சென்னை வந்தது!


சென்னை: ரஜினியின் உடல் நிலை நன்கு முன்னேற் வருகிறது. அவருக்கான சிகிச்சை குறித்து இதுவரை வீடியோ கான்பரன்சிங் முறையில் அமெரிக்காவிலிருந்து ஆலோசனைகள் கூறி வந்த டாக்டர்கள் குழு, நேற்று சென்னை ராமச்சந்திரா மருத்துவமனைக்கே வந்தது.

ரஜினியின் உடல்நிலை பற்றி நேரில் ஆய்வு செய்து, தேவைப்படும் சிகிச்சைகளைச் செய்ய இவர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், தான் நலமாக உள்ளதை ரசிகர்களுக்குத் தெரிவிக்கவும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தோன்றி பேசும் வீடியோ, விரைவில் வெளிவர உள்ளது.

மூச்சுக்குழாய் தொற்று மற்றும் குடல் நோய் காரணமாக கடந்த சில நாட்களாக சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ரஜினி சிகிச்சைப் பெற்று வருகிறார்.

அவருடைய உடல்நிலையை டாக்டர்கள் முழுமையாக பரிசோதனை செய்து, நுரையீரலில் இருந்த நீர்க்கோர்ப்பை அகற்றினார்கள். சிறுநீரகத்திலும் பாதிப்பு இருந்ததால், அவருக்கு `டயாலிசிஸ்' செய்யப்பட்டது.

இதற்காக, கடந்த 18-ந் தேதி நள்ளிரவில் தனி வார்டில் இருந்து தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். இதனால் ரஜினி பற்றி மோசமான வதந்திகளைப் பரப்பினர் விஷமிகள். ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். கர்நாடகம் உள்ளிட்ட வெளிமாநிலங்கள் மற்றும் வெளியூர்களிலிருந்து ரஜினி ரசிகர்கள் போரூர் மருத்துவமனை எதிரில் திரண்டனர்.

தமிழ்நாடு முழுவதும் ரஜினி ரசிகர்கள், கோவில்களில் விசேஷ பூஜைகளும், பிரார்த்தனைகளும் நடத்தப்பட்டு வருகின்றன. பல ரசிகர்கள் கோவிலில் அங்கபிரதட்சணம் செய்தார்கள். அக்கினி குண்டம் வளர்த்து தீ மிதித்தார்கள்.

கூட்டுப் பிரார்த்தனை

நேற்று சென்னை பாரிமுனையில் உள்ள கச்சாலீஸ்வரர் கோவிலில், ரஜினிகாந்த் பூரண குணம் அடைய வேண்டி, அவருடைய ரசிகர்கள் விசேஷ பிரார்த்தனை நடத்தி, 500 பேர்களுக்கு அன்னதானம் வழங்கினார்கள்.

ரஜினிகாந்த் உடல் நலம் பெற வேண்டி திரைப்பட இயக்குனர்கள் 500 பேர்களும், உதவி இயக்குனர்கள் 1000 பேரும் சென்னையில் நேற்று கூட்டு பிரார்த்தனை நடத்தினார்கள். இந்த கூட்டு பிரார்த்தனைக்கு இயக்குநர் பாரதிராஜா தலைமை தாங்கினார். இயக்குநர்கள் பாலுமகேந்திரா, எஸ்.ஏ.சந்திரசேகரன், ஆர்.கே.செல்வமணி உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.

ரஜினிகாந்த் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து, நேற்று முன்தினம் இரவு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து மீண்டும் வார்டுக்கு மாற்றப்பட்டார். தொடர்ந்து அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

அமெரிக்க டாக்டர்கள் வருகை

இந்த நிலையில் ரஜினிகாந்துக்கு சிகிச்சை அளிப்பதற்காக, அமெரிக்காவில் இருந்து 4 டாக்டர்கள் அடங்கிய குழு, நேற்று சென்னை வந்தார்கள். விமான நிலையத்தில் இருந்து அவர்கள் நேராக போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு சென்றார்கள். ரஜினிகாந்த் உடல்நிலை பற்றிய மருத்துவ அறிக்கைகள், அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பற்றிய குறிப்புகளை பார்த்தார்கள்.

அமெரிக்க டாக்டர்கள் சென்னையில் 3 நாட்கள் தங்கியிருந்து, ரஜினிகாந்துக்கு சிகிச்சை அளிக்கிறார்கள். அதில் ஏற்படும் முன்னேற்றத்தை பார்த்த பிறகே அவர்கள் அமெரிக்கா திரும்ப இருக்கிறார்கள்.

ரசிகர்களுக்காக வெளிவருகிறது 'ரஜினி வீடியோ'!

இதற்கிடையில், ரஜினிகாந்த் பற்றி அடிக்கடி வதந்திகள் பரவுவதால், அதை தவிர்க்கவும், ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்கவும் ரஜினியே தோன்றிப் பேசும் வீடியோ படத்தை வெளியிட அவர் குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர். இன்னும் மூன்று நாட்களுக்குள் அந்த வீடியோ வெளியாகும் என தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

English summary
A team of medical experts arrived Chennai to study the health condition of Rajini and give necessary treatment to him. Meanwhile, to avoid rumours, Rajini family arranged for a video shoot in which Rajini himself appears and speaks with the fans.

கருத்துகள் இல்லை: