புதன், 25 மே, 2011

துக்ளக் தர்பார் ஆரம்பம்,சமச்சீர் கல்வி Stop - ஜெயலலிதாவின் தான்தோன்றி தனம்

கருணாநிதியின் அனைத்துச் செயல்களையும் எப்படியேனும் மாற்றியே தீருவது என்ற முடிவுடன்தான் ஜெயலலிதா தேர்தலுக்கு முன்பிருந்தே இருந்தார். ஆனால் அவற்றைச் செயல்படுத்தும்போது பொதுமக்களுக்கு எந்தச் சிரமமும் ஏற்படாமல் பார்த்துக்கொள்வார் என்று யாரேனும் நினைத்திருந்தால், அந்த நினைப்பை மாற்றிக்கொள்ளுங்கள். பொதுமக்கள் எல்லாம் இந்த இடத்தில் collateral damage-தான்.

தலைமைச் செயலகமும் சட்டமன்றமும் இனி மீண்டும் கோட்டையில்தான் - என்பதில் தொடங்கியது இது. இதற்குச் சொன்ன காரணங்களை ஓரளவாவது ஏற்றுக்கொள்ளலாம். புதுக் கட்டடம் இன்னமும் கட்டி முடிக்கப்படவில்லை. சரி, கட்டி முடிப்பது தீவிரப்படுத்தப்படுமா? கட்டி முடித்தபின்னாவது தலைமைச் செயலகமும் சட்டமன்றக் கூட்டங்களும் ஓமாந்தூரார் மாளிகையின் புதுக் கட்டடத்துக்கு மாற்றப்படுமா? தெரியாது.

அடுத்து சமச்சீர் கல்வி. மூன்றாண்டுகள் கூட்டம் கூடி, தேவை என்று சொல்லி, கொண்டுவந்த புதிய பாடத்திட்டம். புதிய புத்தகங்கள். அவற்றை அச்சடிக்க 200 கோடி ரூபாய் செலவு. புத்தக விநியோகமே ஆரம்பித்தாயிற்று. முதலில் தமிழ் பாடப் புத்தகத்தை நிறுத்தி, அதில் செம்மொழி மாநாடு பற்றிய பகுதிகளை நீக்குவார்கள் என்று அறிவித்தது, அடுத்து சமச்சீர் கல்விக்கே தடா என்று முடிந்துள்ளது. இதனால் ஏற்கெனவே அச்சடிக்கப்பட்ட புத்தகங்கள் பாழ். புதிதாக அச்சடிக்க மேலும் 110 கோடி ரூபாய். பள்ளிகள் திறக்க 15 நாள்கள் தாமதம். ஏற்கெனவே 10-ம் வகுப்புப் பிள்ளைகளை படிக்கத் தொடங்கியிருப்பர்; அவர்களுக்கெல்லாம் திண்டாட்டம். இது தவிர, தனியார் பதிப்பகங்கள் பலவும் இந்த சமச்சீர் பாடப் புத்தகங்களுக்கு அச்சிட்டிருக்கும் கோனார் தமிழ் உரை, கைடுகள், நோட்ஸுகள் எல்லாம் பாழ். அரசுப் பணம் பாழ் என்பதே கொடுமை. இதில் தனியார் பணம் பாழாவது கடுமையான கண்டனத்துக்கு உரியது!

ஆனால் இரண்டு பிரச்னைகளிலும் கருணாநிதிமீதும் குற்றம் சாட்டவேண்டியுள்ளது.

புதிய கட்டடம் என்று தன் ஆட்சியின் முதல் நாளே தீர்மானித்திருக்கவேண்டும். இல்லாவிட்டால் பேசாமல் இருந்திருக்கவேண்டும். ஆட்சி எப்போதும் நிரந்தரம் என்று நினைத்துக்கொண்டு நான்காம் வருடம் ஆரம்பித்தால் இப்படித்தான் பொதுமக்கள் பணம் பாழ். ஏனெனில் தமிழ்நாட்டில் மட்டும்தான் புதுவிதமான மாநில ஆட்சி நடைபெறுகிறது. இங்குமட்டும்தான் இரண்டு தனி நபர் பகை, கொள்கையாகவும் திட்டங்களாகவும் மாற்றம் பெறுகிறது. எம்.ஜி.ஆருக்கு கருணாநிதியைப் பிடிக்கவில்லை என்றால் மேலவை கலைக்கப்படும். எனவே கருணாநிதி அதை மீண்டும் கொண்டுவருவார். எனவே ஜெயலலிதா அதை அழிப்பார்.

அடுத்து சமச்சீர் கல்வி. சமச்சீர் கல்வி வேண்டும் வேண்டும் என்று அலைந்தது ஒருசில தன்னார்வலர்கள். அவர்கள் எல்லாம் இன்று எங்கே? எந்தப் பள்ளிக்கூடமும் இதை வேண்டும் என்று கேட்கவில்லை. மெட்ரிக் பள்ளிகள் இதைக் கடுமையாக எதிர்த்தன. ஆனால் இதைக் கொள்கை முடிவாக ஆக்கி, சட்டத்திருத்தம் கொண்டுவந்து, நீதிமன்றங்களில் கடுமையாகப் போராடி, இறுதியில் நடைமுறைப்படுத்த வந்தபோது கருணாநிதிக்கு ஆட்சி போயிற்று. இந்தப் புத்தகங்களில் செம்மொழி பாடலைப் புகுத்தவேண்டுமென்று யார் அழுதார்கள்? அதுதானே இந்தப் புத்தகங்களைக் கிடப்பில் போட ஒரு உந்துதல் ஆயிற்று? மெட்ரிக் பள்ளிகளை அரவணைத்துச் சென்றிருக்கலாம் அல்லவா? ஆனால் அரசியல் ஈகோ களத்தில் அப்படியெல்லாம் செய்வது ஏற்கமுடியாததே? எனவே மெட்ரிக் பள்ளிகள் சங்கம் என்னவெல்லாம் செய்தார்களோ, இன்று சமச்சீர் திட்டம் காலி. ஏகப்பட்ட பணம் நஷ்டம்.

வலுவான எதிர்க்கட்சியாக கருணாநிதியின் திமுக இவற்றை எதிர்கொள்ளவேண்டும். ஆனால் அப்படிச் செய்யமுடியாமல், துக்கத்தில் இருக்கிறார் தலைவர். அவரது இன்றைய கவலை, தன் பெண்ணைச் சிறையிலிருந்து மீட்கவேண்டும் என்பதே. எனவே எந்தவிதமான whimpering protest கூட இல்லாமல், ஜெயலலிதா தான் விரும்பியதைச் செய்துமுடிப்பார்.

விரைவில் மேலவைக்கு முட்டுக்கட்டை போன்ற இன்னபிற மிக முக்கியமான, நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டுசெல்லக்கூடிய திட்டங்களை ஜெயலலிதா அறிவிப்பதை நாம் வரவேற்போம்.

[Disclaimer: சமச்சீர் கல்வி 10-ம் வகுப்பு பாடத் திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு NHM நிறுவனம் கைடுகளை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. ஆனால் இதுவரையில் எதையும் அச்சிட்டு கையைக் கடித்துக்கொள்ளவில்லை. சுரா புக்ஸ், பழனியப்பா பிரதர்ஸ் போன்ற பல நிறுவனங்கள் ஏற்கெனவே கைடுகளை அச்சிட்டு வெளியிட்டுள்ளனர். அவர்களுக்குக் கட்டாயம் நஷ்டம்தான்.]

கருத்துகள் இல்லை: