புதன், 25 மே, 2011

உலக வங்கியிடம் உதவி கோருகிறார் இமெல்டா

வலி.வடக்கில் மக்கள் மீள்குடியமர்த்தப்பட்ட பகுதிகளில் 130 கிலோமீற்றர் நீளமான வீதிகள் முழுமையாகத் திருத்தப்பட வேண்டியுள்ளது. இதற்கு உலக வங்கி உதவவேண்டும் என யாழ்.மாவட்ட அரச அதிபர் இமெல்டா சுகுமார் உலக வங்கிக் குழுவினரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அண்மையில் வலி.வடக்குப் பகுதிக்குச் சென்ற உலக வங்கிக்குழு அங்கு மேற்கொள்ளவுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து ஆராய்ந்தது. இதன்போது யாழ்.அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார், வலி.வடக்குப் பிரதேச செயலாளர் எஸ்.முரளிதரன் ஆகியோரும் அங்கு பிரசன்னமாயிருந்தனர்.

அப்போது வலி.வடக்கு வீதிகளின் மோசமான நிலையை அரச அதிபர் உலக வங்கிக் குழுவிடம் தெளிவாக விளக்கினார். வலி.வடக்கில் 130 கிலோ மீற்றர் நீளமான வீதிகள் புனரமைக்கப்பட வேண்டும். பிரதான வீதிகள், உள்ளக வீதிகள் என அனைத்துமே முழுமையாகச் சேதமடைந்துள்ளன.

இவற்றைப் புனரமைக்கப் பல மில்லியன் ரூபா நிதி தேவைப்படுகின்றது. இதற்கு உலகவங்கி நிதியுதவிகளை வழங்கவேண்டும் என்று அரச அதிபர் உலக வங்கிக் குழுவிடம் கேட்டுக்கொண்டார். வீதிகளின் அபிவிருத்தி தொடர்பான திட்ட மதிப்பீடு அடங்கிய விவரங்களையும் அரச அதிபர் உலக வங்கிக் குழுவிடம் கையளித்தார்.

கருத்துகள் இல்லை: