புதன், 25 மே, 2011

சிறுநீரகங்கள் பாதிப்பு-5 முறை டயாலிசிஸ்: சிகிச்சைக்காக லண்டன் கொண்டு செல்லப்படும் ரஜினி

: சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் மேல் சிகிச்சைக்காக நடிகர் ரஜினி அடுத்த சில நாட்களில் லண்டன் கொண்டு செல்லப்படவுள்ளார்.

முன்னதாக அவரை அமெரிக்கா அழைத்துச் செல்ல திட்டமிட்டனர். பின்னர் அமெரிக்க டாக்டர் குழுவை சென்னைக்கு வரவழைக்கப்பட்டது. இந் நிலையில் அவரை லண்டனுக்கு கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 29ம் தேதி ராணா படப்பிடிப்பில் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு உடல் நிலை பாதிக்கப்பட்டது.ஆனால் அவருக்கு என்ன பிரச்சனை என்பதைச் சொல்லாமல் மூடி மறைத்தனர் அவரது குடும்பத்தினர்.

இதையடுத்து முதலில் இசபெல்லா மருத்துவமனையிலும் இப்போது ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையிலும் ரஜினி சிகிச்சை பெற்று வருகிறார். கிட்டத்தட்ட 1 மாத காலமாகவே ரஜினி உடல்நலக் குறைவுடன் உள்ளார்.

மூச்சுத்திணறல் ஏற்படுவதற்கு முன்பே, ரஜினிகாந்துக்கு உயர் ரத்த அழுத்தப் பிரச்சனை, ஆரம்ப நிலை சர்க்கரை நோய் ஆகியவை இருந்துள்ளன. இவற்றுக்கு உரிய சிகிச்சையை எடுக்காமல் இருந்ததால், சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டன.

சிறுநீரகச் செயல்பாடு பாதிப்பு காரணமாக அவருக்கு ஹீமோ-டயாலிஸிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுவரை அவருக்கு 5 முறை ஹீமோ-டயாலிஸிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

இந் நிலையில் சிறுநீரக பாதிப்புக்கு உயர் சிகிச்சை அளிக்க அவரை லண்டன் அழைத்துச் செல்ல திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்த வார இறுதியில் அல்லது அடுத்த வாரம் அவர் லண்டன் பயணமாவார் என ரஜினி குடும்பத்துக்கு வேண்டியவர்கள் தெரிவித்தனர். பயண ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

கருத்துகள் இல்லை: