புதன், 25 மே, 2011

தொல்காப்பியம், உலகத்தில் எந்த ஒரு மொழிக்கும் இலக்கண நூல் கிடையாது

தொல்காப்பியம் குறித்த ஆய்வு கட்டுரை எழுத அடிகளாசிரியருக்கு ரூ. 2.50 லட்சம் வழங்கல்

ஆத்தூர்: மத்திய அரசின் உயரிய விருதான, "தொல்காப்பியர்' விருது பெற்ற அடிகளாசிரியரின் தமிழ் ஆர்வத்துக்கு மேலும் ஒரு மணி மகுடமாக, மத்திய செம்மொழி தமிழ் ஆய்வு மையம், "தொல்காப்பியம்' குறித்த ஆய்வு கட்டுரை எழுத, 2.50 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளது.
கடந்த, 2005-06ம் ஆண்டுக்கான, "தொல்காப்பியர்' தேசிய விருதுக்கு, ஆத்தூர் அடுத்த தலைவாசல், கூகையூரில் வசிக்கும், 102 வயது பேராசிரியர் அடிகளாசிரியர் தேர்வு செய்யப்பட்டார். கடந்த, 6ம் தேதி, டில்லியில் ஜனாதிபதி பிரதிபா பாட்டீல், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில்சிபல் ஆகியோர் அவ்விருதை வழங்கினர்.
அடிகளாசிரியரின், 102வது பிறந்த நாள் விழாவை, குடும்பத்தினர், உறவினர்கள் மட்டுமின்றி கூகையூர் கிராம மக்கள் நேற்று(மே-11)விழா எடுத்து கொண்டாடி மகிழ்ந்தனர். அதில், ஆத்தூர், தலைவாசல் பகுதி தமிழ் அறிஞர்கள், ஆசிரியர்கள், சமூக ஆர்வலர்களும் கலந்து கொண்டு அடிகளாசிரியரிடம் ஆசீர்வாதம் பெற்றனர்.
தொடர்ந்து, அடிகளாசிரியரின் தமிழ் ஆர்வத்துக்கு மேலும் ஒரு மணி மகுடமாக, மத்திய செம்மொழி தமிழ் ஆய்வு மையம், "தொல்காப்பியம்' குறித்து எளிதான முறையில் ஆய்வு கட்டுரை எழுதுவதற்கு, 2.50 லட்சம் ரூபாய் வழங்கி கவுரவித்துள்ளது.
இதுகுறித்து, "தொல்காப்பியர்' தேசிய விருது பெற்ற அடிகளாசிரியர் கூறியதாவது:
உலகத்தில் தமிழ் மொழியை தவிர வேறு எந்த ஒரு மொழிக்கும் இலக்கண நூல் கிடையாது. எந்த மொழிக்கும் கிடைக்காத இலக்கண நூல், தமிழ் மொழிக்கு தொல்காப்பியம் கிடைத்துள்ளதாக வெளிநாட்டு மொழி அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
தொல்காப்பிய இலக்கண நூலை ஆய்வு செய்து, எளிமையான முறையில் கட்டுரைகள் எழுதி கொடுக்கும்படி, மத்திய உயர்கல்வி மற்றும் மனிதவள மேட்டுத்துறையின் கீழ் சென்னையில் அமைந்துள்ள மத்திய செம்மொழி தமிழ் ஆய்வு மையம் தெரிவித்தது. வரும் டிசம்பர் மாதத்துக்குள் தொல்காப்பியம் குறித்த ஆய்வு கட்டுரை பணிகளைமுடித்துகொடுக்க உள்ளேன்.
இவ்வாறு அடிகளாசிரியர் கூறினார்.

கருத்துகள் இல்லை: