புதன், 29 செப்டம்பர், 2010

15வருட போராட்டம்;உண்மை வென்றது: வைகோ

ஸ்டெர்லைட் தாமிர ஆ‌லை கழிவுகளால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுவதாக சென்னை ஐகோர்ட்டில் மதிமுக பொதுச்செயலாளர் வை‌கோ , மற்றும் தூத்துக்குடி மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி  சார்பில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.


இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் தர்மாராவ் , பால் வசந்தகுமார் அடங்கிய பெஞ்ச் ஆலையை உடனடியாக மூட உத்தரவிட்டது.

 மேலும் ஸ்டெர்லைட் ஆலையில் பணியாற்றிய தொழிலாளர்கள் நலன் பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

’’தூத்துக்குடி நகரிலும், சுற்று வட்டாரங்களிலும் நாசம் விளைவித்துக் கொண்டிருந்த ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட வேண்டும் என்று, 15 ஆண்டுகளாக, மதிமுக போராடி வந்தது. தொடர் போராட்டங்கள் பலவற்றில் கைது செய்யப்பட்டோம். 
 
உலகின் பல நாடுகளில், இப்படிப்பட்ட ஆலைகள் மூடப்பட்டுவிட்டன.

மராட்டிய மாநிலத்தில், ஆலையை அமைக்க அனுமதிக்காமல் அந்த அரசு விரட்டியபிறகு, தமிழ்நாட்டுக்கு இந்த ஆலை வந்தது. விவசாயிகள், மீனவர்கள், அந்தப் பகுதியில் வாழும் அனைத்துத் தரப்பு மக்களுக்கும், பெருங்கேடு விளைவித்து வந்தது இந்த ஸ்டெர்லைட் ஆலை.

விளைநிலங்கள் பாழாகும்; கடல்வாழ் உயிர் இனங்கள் அழியும்; மக்களின் உடல்நலத்துக்குப் பெருங்கேடு நேரும் என்பதால், இந்த ஆலை மூடப்பட வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் வழக்குத்தொடுத்து நானே வாதாடினேன்.

துளியும் சமரசத்துக்கு இடம் இன்றி, ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து நாங்கள் போராடி வந்தோம். இந்த ஆலையை மூட வேண்டும் என்று தேர்தல் பிரகடனத்திலும் தெரிவித்தோம். இப்போது, உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.

உண்மை ஒருநாள் வெல்லும்; நீதி நிலைக்கும் என்பதற்கு உதாரணமாகி விட்டது. எங்கெல்லாம் பாதிக்கப்படுகிறார்களோ, அவர்கள் அநீதியை எதிர்த்துப் போராடி வெல்ல முடியும் என்ற நம்பிக்கையை, இந்தத் தீர்ப்பு வழங்கி உள்ளது’’என்று தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: