வெள்ளி, 1 அக்டோபர், 2010

தமிழில் 11 நூல்களுக்கு சிறந்த இலக்கிய விருது

மும்மொழிகளையும் சேர்ந்த 35 நூல்களுக்கு 2010 ஆம் ஆண்டுக்கான அரச இலக்கிய விருதுகள் நேற்று மாலையில் கொழும்பில் வழங்கப்பட்டன.
இவ்விருதுகளை 11 தமிழ்மொழி நூல்களும், 18 சிங்கள மொழி நூல்களும், 06 ஆங்கில மொழி நூல்களும் பெற்றுக்கொண்டன.
அதேநேரம் சிங்களம், தமிழ், ஆங்கில மொழி இலக்கியத் துறைக்கு நீண்ட காலம் பங்களிப்பு செய்த மூவர் “சாஹித்தியரத்ன” விருது வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.
கலாபூஷணம் ஏ. முஹம்மது சமீம், பேராசிரியர் டப்ளியு.எஸ். கருணாதிலக்க, கலாநிதி லக்ஷ்மி டி சில்வா ஆகிய மூவருக்கும் இவ்விருதுகள் வழங்கப்பட்டன. 2010 ஆம் ஆண்டுக்கான அரச இலக்கிய விருது வழங்கல் வைபவம் அலரிமாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நேற்று மாலை நடைபெற்றது.
இவ்வைபவத்தின் போதே மேற்படி விருதுகள் வழங்கப்பட்டன.
தேசிய மரபுரிமைகள் மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு, கலாசார அலுவல்கள் திணைக்களம், இலங்கை கலைக்கழகம், அரச இலக்கிய குழு என்பன இணைந்து 2010 ஆம் ஆண்டுக்கான அரச இலக்கிய விருது வழங்கும் வைபவத்தை அலரிமாளிகையில் நேற்று ஒழுங்கு செய்திருந்தன.
2009 ஆம் ஆண்டில் நாட்டில் 1332 புத்தகங்கள் அச்சிடப்பட்டு வெளியிடப் பட்டுள்ளன. அவற்றில் 77 நூல்கள் அரச இலக்கிய விருதுக்காக சிபாரிசு செய்யப்பட்டிருந்தன அவற்றில் மும்மொழிகளையும் சேர்ந்த 35 நூல்களே அரச இலக்கிய விருதுகளை பெற்றுக்கொண்டன.
தமிழ் மொழியில் சிறந்த சிறுவர் இலக்கியத்திற்கான விருதை ஒ.கே. குணநாதன் எழுதிய குறும்புக்கார ஆமையார் என்ற நூலும் சிறந்த சிறுவர் மொழி பெயர்ப்பு இலக்கியத்திற்கான விருதை சரோஜினி அருணாசலம் எழுதிய ‘என்றும் உங்கள்’ என்ற நூலும், சிறந்த நாடக இலக்கியத்திற்கான விருதை கலையார்வன் எழுதிய ‘கூத்துக்கள் ஐந்து’ என்ற நூலும் பெற்றுக் கொண்டன.
இதேநேரம் மொழி பெயர்ப்பு இலக்கியத்தி ற்கான விருதை, மடுல்கிரியே விஜேரத்ன எழுதிய ‘தீச்சுடர்’ என்ற நூலும், திக்குவல்லை கமால் எழுதிய ‘தொடரும் உறவுகள்’ நூலும், கெக்கிராவ ஸ¥லைஹா எழுதிய ‘பட்டுப்பூச்சியின் பின்னுகை போலும்’ என்ற நூலும் ஆய்வு இலக்கியத்திற்கான விருதை கலாநிதி எஸ். ஜெபநேசன் எழுதிய “இலங்கைத் தமிழர் சிந்தனை வளர்ச்சியில் அமெரிக்க மிஷன்” என்ற நூலும், கவிதை இலக்கியத்திற்கான விருதை மு.பொ.
எழுதிய ‘கவிதையில் துடிக்கும் காலம்’ என்ற நூலும் பெற்றுக்கொண்டன. அறிவியல் இலக்கியத்திற்கான விருதை ச. அருளானந்தம் எழுதிய ‘அற்புதமான வானம்’ என்ற நூலும், சிறுகதை இலக்கியத்திற்கான விருதை சுதாராஜ் எழுதிய ‘மனைவி மகாத்மியம்’ என்ற நூலும் சிறந்த நாவல் இலக்கியத்திற்கான விருதை நீ.பி. அருளானந்தம் எழுதிய ‘துயரம் சுமப்பவர்கள்’ என்ற நூலும் பெற்றுக்கொண்டன.
இவ்விருதுக்கான இறுதிச் சுற்றுக்குத் தெரிவான சகல நூல்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படுமென அரச இலக்கியக் குழுத் தலைவர் கூறினார்.
இந்நிகழ்வில் அமைச்சர்கள் பவித்ராதேவி வன்னியாராச்சி, ஏ.எச்.எம். பெளஸி, மேல் மாகாண ஆளுநர் எஸ். அலவி மெளலானா, பிரதியமைச்சர்கள் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா, விநாயகமூர்த்தி முரளிதரன், மற்றும் எம்.பிக்களான பிரபா கணேஷன், திகாம்பரம் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டார்கள்.

கருத்துகள் இல்லை: