செவ்வாய், 28 செப்டம்பர், 2010

ஏழில் ஒரு அமெரிக்கர் வறுமையில் வாடுகிறார் : அதிர்ச்சி தகவல்


வாஷிங்டன் : "அமெரிக்கர்களில் ஏழில் ஒருவர் வறுமையில் வாடுகிறார்' என, அந்நாட்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலகம் வெளியிட்ட புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகின் பணக்கார நாடாக அமெரிக்கா கருதப்படுகிறது. அங்கு சமீபத்தில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில், 14.3 சதவீத மக்கள் வறுமையில் வாழ்வதாகவும், இது 2008ல் இருந்த அளவான 13.2 சதவீதத்தை விட அதிகம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட புள்ளி விவரம்: சமீபத்திய கணக்கெடுப்பின்படி, அமெரிக்காவில் 4.36 கோடி மக்கள் வறுமையில் வாழ்கின்றனர். அதாவது, ஏழில் ஒரு அமெரிக்கர் வறுமையில் வாடுகிறார். கடந்த 2008ல் நடந்த கணக்கெடுப்பில் 3.98 கோடி பேர் வறுமையில் வாழ்ந்தனர். தற்போது எண்ணிக்கை உயர்ந்துள்ளது. ஒபாமா அதிபராக பதவியேற்ற காலக்கட்டத்தில், பொருளாதார நெருக்கடி காரணமாக, மாதந்தோறும் 7 லட்சம் பேர் வேலை இழந்தனர். இவர்களில் பெரும்பான்மையோர் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இதனால், அவர்கள் தங்கள் வீடுகளை விற்றுவிட்டு, கூடாரங்கள் அமைத்து தங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இவ்வாறு புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: