வியாழன், 30 செப்டம்பர், 2010

8.5 கிலோ நகை கொள்ளை: நாடகமா?



சென்னையைச்சேர்ந்த வியாபாரிகள் நேற்று தூத்துக்குடியில் பேருந்து ஒன்றில் வந்தபோது 8.5 கிலோ தங்கம் மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டதாக எட்டையபுரம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.
போலீசார் விசாரணையில் புகார் கொடுத்தவர்கள் மீதே சந்தேகம் எழுந்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தைச்சேர்ந்தவர்கள் காந்திலால்(52), ஜெகன்சிங்(37), மகேந்திரசிங்(27). இவர்கள் மூவரும் சென்னை சவுகார்பேட்டை லட்சுமி ஜூவல்லர்சில் வேலைபார்த்து வருகிறார்கள். இவர்கள் தமிழ்நாடு முழுவதும் சென்று நகைகடைகளில் ஆர்டர் பிடித்து கொடுப்பது வழக்கம்.
நேற்று தூத்துக்குடியில் உள்ள நகைக்கடைகளில் ஆர்டர் பிடித்துவிட்டு எட்டரை கிலோ நகையுடன் மூன்று பேரும் மதுரைசெல்லும் அரசு பஸ்சில் ஏறினர்.
பஸ் அருப்புக்கோட்டை அருகே உள்ள வெம்பூர் பகுதியில் சென்றபோது திடீரென்று ஒரு சிகப்பு கலர் கார் பஸ்சை மறித்தது.

காரில் இருந்து இறங்கிய 3 பேர் பஸ்சிற்குள் புகுந்து நகையுடன் வந்த 3 பேரையும் கீழே இறக்கினர். அப்போது பஸ்சில் பயணம் செய்த மேலும் 3 பேர் காரில் வந்தவர்களுக்கு உதவியாக செயல்பட்டனர்.
நகைகடை ஊழியர்கள் வைத்திருந்த சூட்கேசை பறித்த அவர்கள் காரில் தப்பினர். அதன் மதிப்பு

1 கோடியே 53 லட்சமாகும். 5 நிமிடத்தில் மின்னல்வேகத்தில் நடந்து முடிந்து விட்ட இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து டிரைவர் எட்டையபுரம் போலீஸ் நிலையத்திற்கு பஸ்சை கொண்டு சென்றார். தகவல் அறிந்த தூத்துக்குடி எஸ்பி கபில்குமார் சரத்கர், மாசார்பட்டி இன்ஸ்பெக்டர் நடராஜன் உள்ளிட்டோர் எட்டையபுரம் வந்தனர். கொள்ளையர்கள் வந்த கார் நம்பர் அனைத்து போலீஸ் நிலையங்களும் தெரியப்படுத்தப்பட்டு உஷார் படுத்தப்பட்டன.
எஸ்பி கபில்குமார் சரத்கர் விடிய விடிய விசாரணை நடத்தினார். விசாரணையில் பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.
காரில் வந்த கொள்ளையர்கள் பஸ்சில் புகுந்து நகை பறித்த போது கையில் ஆயுதம் எதுவும் வைத்திருக்கவில்லை. நகைகடை ஊழியர்கள் கொள்ளையர்களிடமிருந்து தப்பிக்கவோ, கூச்சலிடவோ இல்லை. குறைந்த பட்சம் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.

கொள்ளையர்கள் சென்ற பிறகுதான் பெயரளவுக்கு சத்தம்போட்டுள்ளனர். நகையை பறிகொடுத்த பீதி அவர்களிடம் இல்லை. விசாரணையின்போது அவர்கள் பேச்சு முன்னுக்குப்பின் முரணாக இருந்தது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

காரில் வந்தவர்களும், ஏற்கனவே பஸ்சில் இவர்களுடன் பயணம் செய்த 3 பேரும் இவர்கள் ‘செட்டப்‘ செய்த நபர்களாக இருக்ககூடுமோ என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

 தற்போது நகை கடை ஊழியர்கள் மூவரையும் விளாத்திகுளம் போலீஸ்நிலையம் கொண்டு சென்று விசாரித்து வருகிறார்கள். உண்மையிலே நகை கொள்ளை போனதா அல்லது அவர்களே நாடகமாடுகிறார்களா? என்பது விசாரணையில் தெரியவரும்.

கருத்துகள் இல்லை: