புதன், 29 செப்டம்பர், 2010

www.Thenee.com.யாழ்ப்பாணத்தில் நடந்தது கல்வியியல் புத்தகக் கண்காட்சி

யாழ்ப்பாணம் மறக்கமுடியாத ஊர்.
இலங்கைப் பயணம்
 - ஹரன்பிரசன்னா
சென்ற ஆண்டே கொழும்பு பன்னாட்டுப் புத்தகக் கண்காட்சிக்குச் சென்றிருக்க வேண்டியது. எனது பாஸ்போர்ட் புதுப்பிக்கப்பட்டிருக்காததால் என்னால் செல்ல இயலவில்லை. இந்த முறை இலங்கைக்குச் சென்றேன். கொழும்பு பன்னாட்டுப் புத்தகக் கண்காட்சி நடக்கும் அதே தினத்தில், யாழ்ப்பாணத்திலும் யாழ்ப்பாணக் கல்வியியல் கண்காட்சியும் நடைபெற்றது. அதிலும் பங்குபெற எண்ணி, இந்தமுறை கொழும்போடு யாழ்ப்பாணமும் (ஜாஃப்னா) சேர்ந்துகொண்டது எங்கள் திட்டத்தில். நான், பத்ரி, சத்ய நாராயண், மணிவண்ணன் (விற்பனை மேலாளர்), மணிகண்டன் (மார்க்கெடிங் டிசைனர்), சிவகுமார் (மண்டல விற்பனை பிரதிநிதி) என ஆறு பேர் மூன்று குழுக்களாக வேறு வேறு தினங்களில் இலங்கை சென்றோம்.
ஆய்புவன் என்ற பதாகைகளோடு வரவேற்றது கொழும்பு பன்னாட்டு விமான முனையம். எல்லா முக்கியமான இடங்களிலும் தமிழிலும் அறிவிப்பு வைத்திருந்தார்கள். சில அழகான தமிழ்ப் பயன்பாடுகளோடு, சமிஸ்கிருத பயன்பாடும் கலந்த தமிழாக இருந்தது அது. இது தரிப்பிடம் அல்ல (இது நிற்குமிடமல்ல) எனத் தொடங்கியது எங்களுக்கான இலங்கைத் தமிழ். டியூக் மோகன் எங்களை வந்து அழைத்துக்கொண்டு சென்றார். போன் பேசுவது, குறிப்பு எழுதுவது, சாலையைத் தவிர மற்ற இடங்களைப் பார்ப்பது, எங்களுடன் பேசுவது என்ற வேலைகளுக்கு இடையே, சாலையையும் பார்த்துக்கொண்டு வண்டி ஓட்டுவார். முதல் விமானப் பயணம் என்பதால் லேசாகப் பயந்தோம் என்று சொல்லிக்கொண்டு வந்த மணிகண்டன் முகத்தில் டியூக் வேன் ஓட்டுவதைக் கண்டு லேசான கலவரம் தெரிந்ததைப் பார்த்தேன். என் கண்ணிலும் அவர் அதைக் கண்டிருக்கக்கூடும்!
டியூக்குடன் பேசுவது மிக எளிது. காரணம் நீங்கள் எதுவுமே பேசவேண்டியிருக்காது. நமக்கான விஷயங்களையும் சேர்த்து அவரே பேசிவிடுவார். அவரது தமிழ் மெல்ல விளங்கத் தொடங்கியதும், இலங்கைத் தமிழில் ஒரு மணி நேரத்தில் கரை கண்டுவிட்டோமே என நினைத்துக்கொண்டேன் - யாழ்ப்பாணத்து நாதனைச் சந்திக்கும் வரை. நாதன் ஒரு சுவாரஸ்யமான மனிதர். அவருக்கு எப்படியும் 34 வயது இருக்கும் என நினைத்துக்கொண்டிருந்தபோது, தனக்கு 44 வயது எனச் சொல்லி அதிர வைத்தார். நாங்கள் நாதனைச் சந்தித்தது யாழ்ப்பாணத்தில். கொழும்பிலிருந்து ராணுவ விமானத்தில் யாழ்ப்பாணம் சென்றோம். இதனை ஒரு சாகசப் பயணம் என்றே சொல்லவேண்டும். 15 பேர் மட்டுமே அமரமுடியும் ஓர் சிறிய விமானம். ஒப்பீட்டளவில் ஸ்டார் சிட்டி பைக்கைவிடக் கொஞ்சம் பெரியது என்று சொல்லலாம்! இரண்டாம் விமானப் பயணமே இப்படி உயிரைப் பிடித்துக்கொண்டு போகக்கூடியதாக இருக்கும் என மணிகண்டன் நினைத்திருக்க வாய்ப்பில்லை. நான் ஏற்கெனவே துபாயிலிருந்து கிஷ் தீவுக்கு இதுபோன்ற ஒரு விமானத்தில் சென்றிருந்ததால் எனக்கு அதிகப் பயம் ஏற்படவில்லை. ஆனால் இதற்கும் சேர்த்து வரும்போது கலங்கிவிட்டேன் என்றே சொல்லவேண்டும். கிட்டத்தட்ட ஒன்றேகால் மணி நேரப் பயணம். பெரும்பாலும் கடல் மீது. அங்கங்கே சிறிது சிறிதாகத் தீவுகள். புங்குடுத் தீவு, நயினாதீவு எனப் பல தீவுகள். மரத்தடி இணையக் குழுமத்தில் மதி கந்தசாமி அவரது சொந்த ஊரான புங்குடுத் தீவு குறித்து எழுதிய மிகச் சிறந்த கட்டுரை நினைவுக்கு வந்தது. சமீபத்தில் யாழ்ப்பாணத்து ராஜா தியேட்டர் பற்றி கானா பிரபா எழுதிய இடுகையும் நினைவுக்கு வந்தது. இரண்டையுமே பார்க்க நேரமில்லாமல் போய்விட்டது. யாழ்ப்பாண ராணுவ மையத்திலிருந்து பேருந்து நிலையத்துக்கு பேருந்தில் வந்தோம். வழியில் திருநெல்வேலி எல்லாம் வந்தது. பாதையெங்கும் பெரிய பெரிய வீடுகள், தோட்டங்கள், ராணுவ பதுங்கு குழிகள், செல்லால் கடுமையாகத் தாக்கப்பட்டு இடிந்து கிடந்த வீடுகள் என, எங்களுக்கு, புதிய தோற்றங்கள்.
நாதன் யாழ்ப்பாணத்துத் தமிழில் பேசினார். திடீரென்று ஓ என்றும் ஓய் என்றும் சத்தங்கள் எழுப்பினார். அது ஆமாம் என்பதற்கு இணையான வார்த்தைப் புழக்கம் என்பது எங்களுக்கு மெல்லப் புரிந்தது. டியூக்கின் தமிழ் புரிந்தது பெரிய காரியமில்லை, யாழ்ப்பாணத்துத் தமிழ்தான் உண்மையான சவால் என்றும் புரிந்தது. அவர் பேசிய பல வார்த்தைகள் விளங்கவில்லை, ஓ, ஓய் தவிர. நன்கு பழகிய பின்பு, நாங்கள் அவரை ஓ என்று கிண்டல் செய்ய, அவர் ஆமாம் ஆமாம் என்று கிண்டல் செய்து பழி தீர்த்துக்கொண்டார். யாழ்ப்பாணத்து பேருந்து நிலையத்திலிருந்து நாங்கள் தங்குமிடத்துக்கு வேனில் சென்றோம். இனி அனுபவங்களை சில பகுப்புகளாக எழுதிவிடலாம் என நினைக்கிறேன். சென்றதன் முதன்மை நோக்கம் புத்தகக் கண்காட்சி என்பதால் அதிலிருந்தே தொடங்குவதான் நாம் செய்யும் தொழிலுக்கு மரியாதை!
யாழ்ப்பாணத்தில் நடந்தது கல்வியியல் புத்தகக் கண்காட்சி

கருத்துகள் இல்லை: