வியாழன், 22 ஜூலை, 2010

புலம்பெயர் தமிழர் மனமாற்றம் இலங்கையில் அபிவிருத்தி;

்கட்டுமானத்தில் பங்கேற்க விருப்பம்
புலம்பெயர்ந்து அமெரிக்காவில் வாழும் இலங்கையர்களைச் சந்தித்ததாகக் கூறும் அமெரிக்க உதவி ராஜாங்கச் செயலர் ரொபேர்ட் ஒபிளேக், இலங்கையின் அபிவிருத்தியில் அவர்களைப் பங்கெடுக்குமாறும் முதலீடு செய்யுமாறும் கேட்டுக் கொண்டதாகக் கூறினார். புலம்பெயர்ந்து வெளிநாடுகளுக்கு சென்றுள்ள இலங்கை தமிழர்களிடையே தற்போது மாற்றம் ஏற்பட்டுள்ளது. இலங்கையில் தற்போது இடம்பெற்றுவரும் பொருளாதார அபிவிருத்தி, மீள் கட்டமைப்பு மற்றும் மீள் இணக்க நடவடிக்கைகளில் பங்கேற்க அவர்கள் விரும்புகின்றனர் என்று அவர் மேலும் கூறினார். கொழும்பில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் இதனைத் தெரிவித்தார்.
கடந்த வருடம் புலிப் பயங்கரவாதிகள் தோற்கடிக்கப்பட்டதை அமெரிக்கா வரவேற்கிறது. அமெரிக்கா நீண்ட காலமாகவே இலங்கையின் நண்பனாக இருந்து வந்துள்ளது. அந்த நட்புறவை மேலும் கட்டியெழுப்புவதற்கு அமெரிக்கா எதிர்பார்த்துள்ளது.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு கிடைத்த பெருவெற்றி மற்றும் அவரது கட்சிக்கு கிடைத்த அதே போன்ற பாராளுமன்ற தேர்தல் வெற்றி ஆகியவை மூலம் இலங்கை இப்போது மூன்று தசாப்தகால யுத்தத்தின் பின் நிலையான சமாதானத்தையும் சுபீட்சத்தையும் ஏற்படுத்தும் அரிய வாய்ப்பை பெற்றுள்ளது. இவ்வாறான சமாதான நிலையில் நல்லிணக்கத்தை பெற்றுக் கொள்வது முக்கிய காரணியாக அமைகிறது என்றும் குறிப்பிட்டார். ஊடகவியலாளர்களிடையே அவர் மேலும் கூறியதாவது,
இடம்பெயர்ந்த மக்களுக்கான மனிதாபிமான உதவிகளை வழங்குவதில் முன்னணி உதவி வழங்குநராக அமெரிக்கா தொடர்ந்தும் இருந்து வருகிறது. கண்ணிவெடி அகழ்வு, மீண்டும் தமது சொந்த இடங்களுக்கு குடியேறும் இடம்பெயர்ந்தவர்களுக்கு தொழில் வாய்ப்புகளை வழங்கும் திட்டங்களை வரைதல், மற்றும்புதிய பொருளாதார வாய்ப்புகளை வடக்கில் ஏற்படுத்துவதற்கான தனியார் துறை முதலீடுகளை பகுப்பாய்வு செய்தல் ஆகியவற்றில் அமெரிக்கா தொடர்ந்தும் உதவும்.
கடந்த இரண்டு வருடங்களில் அமெரிக்கா இலங்கைக்கு 140 மில்லியன் அமெரிக்க டொலர்களை உதவியாக வழங்கியுள்ளது என்று ரொபர்ட் பிளேக் கூறினார்.
இலங்கைக்கான தனது விஜயத்தைப் பற்றிக் குறிப்பிட்ட அவர், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் மற்றும் அரசாங்க அமைச்சர்கள், வர்த்தக சமூகம், எதிர்க்கட்சியினர் மற்றும் சிவில் சமூகத்தினரையும் சந்தித்துப் பேசியதாக கூறினார்.
ஜனாதிபதியுடனான தனது பேச்சுவார்த்தை மிகவும் பயனுள்ளதாக இருந்ததாகவும் நல்லிணக்கம், ஆளுமை மற்றும் சாத்தியமான அரசியலமைப்பு மாற்றங்கள் உள்ளிட்ட பல விடயங்களைப் பற்றி பேசியதாக குறிப்பிட்டார்.
இடம்பெயர்ந்தவர்களின் மீள்குடியேற்றம் திருப்தியளிப்பதாகவும் இரண்டு லட்சத்து 80 ஆயிரத்தில் இருந்து குறுகிய காலத்தில் அகதிகளின் எண்ணிக்கையை 37 ஆயிரமாக குறைக்க முடிந்தமை திருப்தியானது என்று பிளேக் கூறினார்.
பாடங்கள் படித்தமை மற்றும் நல்லிணக்க ஆணைக் குழு சாத்தியப்படுமென ராஜாங்க செயலாளர் ஹிலரி கிளின்டன் வெளியுறவு அலுவல்கள் அமைச்சர் ஜீ. எல். பீரிஸிடம் கூறியுள்ளார். அந்த கூற்று உண்மையாகும் என்று நாம் எதிர்பார்ப்போம், நம்புவோம் என்று அவர் கூறினார். ஐ. நா. குழு தொடர்பாக ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த ரொபர்ட் பிளேக் அது ஆலோசனை கூறும் குழு மட்டுமே. அதற்கு மேலாக அது செயற்பட மாட்டாது என்று குறிப்பிட்டதுடன் அனைத்து விடயங்களிலும் அமெரிக்கா தொடர்ந்தும் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கும் என்று கூறினார்

கருத்துகள் இல்லை: