புதன், 21 ஜூலை, 2010

ஒரு கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள் மன்னார் பொலிஸாரால் மீட்பு!

-மன்னார் நிருபர்
இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட 1 கிலோ கிராம் எடையுடைய ஹெரோயின் போதைப்பொருளை மன்னார் பொலிஸார் மீட்டுள்ளனர். இந்தியாவில் இருந்து சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட மேற்படி ஹெரோயின் போதை பொருளை கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 8:15 மணியளவில் மன்னார் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

மன்னார் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த மன்னார் பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி துஸார தலுவத்த தலைமையிலான பொலிஸ் குழுவினரே போதை பொருளை கைப்பற்றியதோடு அதனை வைத்திருந்த நபரையும் கைது செய்துள்ளனர். ஒரு கிலோ கிராம் எடையை கொண்ட மேற்படி போதைப்பொருள் ஒரு கோடி ரூபா பெறுமதியானவை என்றும் மன்னார் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரை நேற்றையதினம் (20.07.2010) மன்னார் பொலிஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது குறித்த சந்தேகநபரை எதிர்வரும் 27ம் திகதிவரை பொலிஸ் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்யுமாறும் நீதிபதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: