புதன், 14 ஜூலை, 2010

வடக்கு, கிழக்கு இணைந்த மாகாண சபை தொடர்ந்து செயற்பட முடியாத நிலையைத் தோற்றுவித்ததில்

இணைப்புக் கோரிக்கை தீர்வைச் சிக்கலாக்கும்
வடக்கு, கிழக்கு மாகாணங்களின் இணைப்பை வலி யுறுத்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்கள் இவ்விரு மாகாணங்களினதும் இணைப்பு நீக்கப் பட்டதில் தங்களுக்கும் பங்கு உண்டு என்பதை வசதி யாக மறந்துவிடுகின்றனர். வடக்கு, கிழக்கு இணைந்த மாகாண சபை தொடர்ந்து செயற்பட முடியாத நிலையைத் தோற்றுவித்ததில் தங்களுக்கு எவ்வித பங்கும் இல்லையென்று கூட்டமைப்புத் தலைவர்கள் கூற முடியாது.
வடக்கு, கிழக்கு மாகாணங்கள் ஒன்றாக இணைய வேண்டுமா அல்லது தனித்தனியாக இயங்க வேண்டுமா என்ற பிரச்சினை மீண்டும் தலை தூக்கியிருக்கின்றது. அம்பாறை மாவட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் ஹரிஸ் இரண்டு மாகாணங்களும் இணைவதைத் தனது கட்சி எதிர்ப் பதாகப் பாராளுமன்றத்தில் பேசியிருக்கின்றார். அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் சார்பில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் அதே கருத் துப்பட அறிக்கை வெளியிட்டிருக்கின்றார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் குழு இந்தியத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின் னரே இங்கு இப்பிரச்சினை மீண்டும் தலைதூக்கியிருக் கின்றது. வடக்கும் கிழக்கும் இணைந்த தீர்வே தேவை என்று கூட்டமைப்புத் தலைவர்கள் இந்தியாவில் அறிவித்ததன் எதிரொலியாகவே இணைப்புக்கு எதி ரான குரல் இங்கு மீண்டும் ஒலிக்கத் தொடங்கி யிருக்கின்றது.

வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை நியாயமானதா இல்லையா என்ப திலும் பார்க்க இன்றைய நிலையில் அக்கோரிக்கையை வலியுறுத்துவது சரியானதா என்ற கேள்வியே முக்கிய மானது. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நீண்ட காலமாக வாழ்ந்து வருகின்ற தமிழ், முஸ்லிம் மக்கள் மத்தியில் இவ்விடயத்தில் ஒருமித்த கருத்து இல்லை. இந்த நிலையில் இணைப்பை வலியுறுத்துவது இனப் பிரச்சினையின் தீர்வுக்குக் குந்தகமான நிலையையே தோற்றுவிக்கும்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களின் இணைப்பை வலி யுறுத்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்கள் இவ்விரு மாகாணங்களினதும் இணைப்பு நீக்கப் பட்டதில் தங்களுக்கும் பங்கு உண்டு என்பதை வசதி யாக மறந்துவிடுகின்றனர். வடக்கு, கிழக்கு இணைந்த மாகாண சபை தொடர்ந்து செயற்பட முடியாத நிலையைத் தோற்றுவித்ததில் தங்களுக்கு எவ்வித பங்கும் இல்லையென்று கூட்டமைப்புத் தலைவர்கள் கூற முடியாது. இரு மாகாணங்களையும் வரலாற்று ரீதியான வாழ்புலங்களாகக் கொண்ட தமிழ், முஸ்லிம் மக்களின் நன்மதிப்பைப் பெறும் வகையில் அந்த மாகாண சபை தொடர்ந்து செயற்பட்டிருந்தால் தற்கா லிக இணைப்பு இதுவரையில் ஒருவேளை நிரந்தர மானதாக மாறியிருக்கலாம்.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் பிரகாரம் இரண்டு மாகாணங் களும் இப்போது தனித்தனியாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இதுதான் இன்றைய யதார்த்தம். எனவே, இந்த நேரத்தில் இரண்டு மாகாணங்களினதும் இணைப்பை வலியுறுத்துவது பலன் தரக்கூடிய அணுகுமுறை யாகாது. யதார்த்தத்துக்கு முரணான கோரிக்கைகளை வலியுறுத்தியமையே தமிழ் மக்களினது இன்றைய துயர நிலையின் நதிமூலம் என்பதை நாம் மறந்து விடலாகாது. ஆட்சியாளரினால் முன்வைக்கப்பட்ட தீர்வுத் திட்டங்களையெல்லாம் அவற்றிலும் பார்க்கக் கூடுதலான தீர்வை வலியுறுத்தித் தமிழ்த் தலைமைகள் நிராகரித்துவிட்டன. இதனால் தமிழ் மக்களின் துன்பங் கள் காலத்துக்குக் காலம் அதிகரித்தனவேயொழியக் குறையவில்லை.

கடந்த கால அனுபவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும். வட மாகாணத்துக்கு மாகாண சபையைப் பெறுவது தான் இப்போது உடனடியாகச் செய்ய வேண் டியது. அதிலிருந்து முழுமையான அரசியல் தீர்வை அடைவதற்கான முயற்சியை முன்னெடுக்க வேண்டும். அதைவிட்டு, இரண்டு மாகாணங்களினதும் இணைப்பை இந்த நேரத்தில் வலியுறுத்துவது நந்தவன ஆண்டி போட்டுடைத்த கதை போல் ஆகிவிடும்.
- தினகரன் தலையங்கம் -

கருத்துகள் இல்லை: