செவ்வாய், 13 ஜூலை, 2010

ஜேர்மன் புலிகளுக்கும் இலங்கை தூதரக அதிகாரிகளுக்குமிடையேயான சந்திப்பொன்று

ஜேர்மன் புலிகளுக்கும் இலங்கை தூதரக அதிகாரிகளுக்குமிடையேயான சந்திப்பொன்று எதிர்வரும் புதன் கிழமை ஜேர்மன் தூதரகத்தில் இடம்பெறவுள்ளதாக தெரியவருகின்றது. புலிகளின் தலைமை அழிக்கப்பட்டபின்னர் புலம்பெயர் புலிகளுக்கும் இலங்கை அரசிற்கும் இடையேயான பல சந்திப்புக்கள் தொடர்ந்து திரை மறைவில் இடம்பெற்று வருகின்றது. இச்சந்திப்புக்கள் தொடர்பாக கடந்த காலங்களில் புலிகளின் அராஜகங்களை உலகிற்கு வெளிக்காட்டும் நோக்கில் இலங்கை தூதரகங்களுடன் இணைந்து செயற்பட்டோர் அதிருப்தி அடைந்துள்ளதை அவதானிக்க முடிகின்றது.

புலிகளுக்கும் இலங்கை தூதரக அதிகாரிகளுக்குமிடையேயான சந்திப்புக்கள் மற்றும் செயற்பாடுகள் நாட்டுக்கோ அன்றில் மக்களுக்கோ எவ்விதத்திலும் பயன் தருவதாக அமையவில்லை எனவும் முற்றிலும் வியாபார நோக்குடையது எனவும் கூறப்படுகின்றது. புலிகளுக்கும் ஜேர்மனிலுள்ள இலங்கை தூதரக அதிகாரிகளுக்குமிடையேயான புரோக்கராக சிறிரெலோ வை சேர்ந்த ஒருவர் செயற்பட்டு வருவதாக ஜேர்மன் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பிட்ட நபர் புலிகள் பலமாக இருந்த காலத்தில் புலிகளுக்காக செயற்பட்டு வந்தவர் எனவும், அவ்வியக்கம் தோல்வியடையும் தருணத்தில் பிழைப்புக்காக புலி எதிர்ப்பை கையில் எடுத்தவர் எனவும் அத்தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றது. புலிகளின் பல உளவாளிகளை பணம்பெற்றுவிட்டு இவர் தூதரகத்தினுள் நுழைத்துள்ளதாக கூறப்படுகின்றது.

மேலும் ஜேர்மனிலுள்ள இலங்கைத் தூதரக வரவேற்பறையில் அங்கு செல்லும் மக்களுக்கு ஜிரிவி தொலைக்காட்சி சேவை ஒளிபரப்பட்டு வருகின்றது. ஜீரிவி யில் இலங்கைக்கு எதிரான பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. உதாரணத்திற்கு நேற்று ஜீரிவி யில் இடம்பெற்ற அரசியல் கலந்துரையாடல் ஒன்றில் கலந்து கொண்டு பேசிய நாடுகடந்த தமிழீழ அரசிற்கான சுவிற்சர்லாந்து பிரதிநிதியான பெண் ஒருவர் பேசுகையில் , மக்கள் உருத்திரகுமாரன் தலைமையிலான நாடுகடந்த தமிழீழத்திற்கு ஆதரவு வழங்க வேண்டும் எனவும் , புலம்பெயர் தமிழர் இலங்கை அவர்களது பயணம் இலங்கைக்கு பொருளாதார ரீதியாக உதவுவதாக அமையக்கூடாது என்பதில் கவனமாக இருக்கவேண்டும் எனவும் , குறிப்பாக மக்கள் சிறிலங்கன் ஏயார் லைன் போன்ற விமானங்களில் பயணிக்க கூடாது எனவும் வேண்டுகோள் விடுத்தார்.

இவ்விசமப் பிரச்சாரங்களை முறியடிக்கவேண்டிய இலங்கை தூதரகம் அதன் வரவேற்பறையில் இவற்றை ஒளிபரப்பும் செயலை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு அங்கீகரித்திருக்கின்றதா என்பது கேள்வி.

கருத்துகள் இல்லை: