புதன், 29 டிசம்பர், 2021

குடிசை மாற்று வாரிய 24 குடும்பங்களின் உயிரைக் காப்பாற்றிய தி.மு.க வட்டச் செயலாளர் தனியரசு! ஸ்டாலின், கனிமொழி பாராட்டு

tamil.indianexpress.com  : 24 குடும்பங்கள் உயிரைக் காப்பாற்றிய தி.மு.க வட்டச் செயலாளர்: ஸ்டாலின், கனிமொழி பாராட்டு
திமுக வட்ட செயலாளரின் வீரமான செயல் குறித்து கேட்டறிந்த முதல்வர் மு.க ஸ்டாலின் அவரை நேரில் அழைத்து பாராட்டினார்.
சென்னை திருவொற்றியூர் அருகே உள்ள அரிவாக்குளம் பகுதியில் குடிசை மாற்று வாரியம் சார்பில் 1993-ம் ஆண்டு கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு ,இரண்டு நாட்களுக்கு முன் தரைமட்டமாக இடிந்து விழுந்தது. முதலில் லேசான விரிசல் ஏற்பட்ட நிலையில் திங்கள் கிழமை காலை மொத்தமாக கட்டிடம் இடிந்துள்ளது. இந்த விபத்தில் உயிர் சேதம் ஏற்படவில்லை. கட்டிடம் விழுவதற்கு முன்பு அனைத்து மக்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.
மக்களை சரியான நேரத்தில் வெளியேற்றி 24 குடும்பங்களின் உயிரை காப்பாற்றியது திமுக வட்ட செயலாளர் தனியரசு என்பவர் தான்.

கட்டிதத்தில் விரிசல் ஏற்பட்டவுடன், திமுக வட்ட செயலாளர் தனியரசுவை பொதுமக்கள் அழைத்து காட்டியுள்ளனர். தனியரசு அந்தப்பகுதியை சுற்றி பார்வையிட்டுள்ளார் அப்போது லேசான சத்தத்துடன் கீழ்ப்பகுதியில் விரிசல் அதிகரிப்பதை கவனித்து தனியரசு, உடனடியாக பொதுமக்களை வீட்டைவிட்டு வெளியே கூறியுள்ளனர்.

வீடு இடிய போகிறது என கூறினால் மக்கள் பதற்றம் அடைந்து உள்ளே இருக்கும் பொருட்களை எடுக்க ஆர்வம் காட்டுவார்கள் என்பதால் முதலில் எல்லோரும் கீழே வாருங்கள் என்று வீடு வீடாக சென்று கூறியுள்ளார். வரமறுத்த மக்களை, கட்டாயப்படுத்தி வெளியே அழைத்து வந்துள்ளார்.

மக்கள் அனைவரும் வீட்டில் இருந்து வெளியேறிய சில நிமிடங்களில் வீடு இடிந்து விழுந்து தரைமட்டமானது. வீடு இடிந்து விழுந்ததை கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். மக்கள் வெளியேற்றப்பட்டதால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. இதனால் தங்களை காப்பாற்றியது தனியரசு என்று அப்பகுதியில் வசிக்கும் மக்கள் அவரை பாராட்டி வருகின்றனர்.

இதையறிந்த திமுக எம்.பி கனிமொழி, தனது ட்விட்டர் பக்கத்தில் தனியரசுக்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். அதில், “திருவொற்றியூரில், தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு வாரியக் குடியிருப்புகள் இடிந்து விழுந்த துயரமிக்க சம்பவத்தின் போது, வீடுகள் விழுவதற்கு முன் சுதாரிப்பாக, மக்களை அங்கிருந்து துரிதமாக வெளியேற்றி, உயிரிழப்புகளைத் தடுத்த தனியரசுக்கு எனது வாழ்த்துகள்” என பதிவிட்டிருந்தார்.

மேலும், திமுக வட்ட செயலாளரின் வீரமான செயல் குறித்து கேட்டறிந்த முதல்வர் மு.க ஸ்டாலின் அவரை நேரில் அழைத்து பாராட்டினார். அதோடு முதல்வர் ஸ்டாலின் தனியரசுவிற்கு திருக்குறள் புத்தகத்தையும் பரிசாக வழங்கினார்.

கருத்துகள் இல்லை: