சனி, 1 ஜனவரி, 2022

உதயநிதிக்கு அமைச்சர் பதவி? ... துணை முதல்வர் வரை கொண்டு போய்ட்டாங்க - உதயநிதி

 Giridharan N | Samayam Tamil  :  தமக்கு அமைச்சர் பதவியெல்லாம் எதுவும் வேண்டாம் என்று உதயநிதி ஸ்டாலின் சொல்லி வருவது கட்சியில் உள்ள சீனியர்களை சரிகட்டுவதற்கான உதார் தான் என்றும், அவரை அமைச்சராக்குவதற்கான நாள், நேரம் வரை துர்கா ஸ்டாலின் குறித்துவிட்டதாகவும் அறிவாலய வட்டாரத்தில் தகவல் கசிந்துள்ளது. அமைச்சர் பதவியை தொடர்ந்து அப்படியே அவரை துணை முதல்வராக்கவும் மெகா திட்டம் தீட்டப்பட்டு வருவதாகவும் சொல்கின்றனர் விவரமறிந்த உடம்பிறப்புகள்.
கொளுத்திப் போட்ட அன்பில்: திமுக இளைஞரணி செயலாளராகவும், சென்னை திருவல்லிக்கேணி தொகுதி எம்எல்ஏவாகவும் வலம் வந்துக் கொண்டிருக்கும் உதயநிதி ல்டாலின் அமைச்சராக வர வேண்டும் என்று சில மாதங்களுக்கு முன் கொளுத்திப் போட்டிருந்தார் அவரின் நெருக்கிய நண்பரும், பள்ளிக் கல்வித் துறை அமைச்சருமான அன்பில் மகேஷ்.

நட்பின் மிகுதியால் அவர் இவ்வாறு சொல்லியிருக்கலாம் என்றுதான் பொதுவாக எண்ணத் தோன்றும். ஆனால், உதயநிதியை அமைச்சராக வேண்டும் என்ற அன்பில் மகேஷுன் வாய்ஸுக்கு பின்னால் துர்கா ஸ்டாலின் இருக்கிறார் என்பதுதான் உண்மை என்கிறார்கள் ஸ்டாலின் குடும்பத்துடன் நெருங்கிய தொடர்பில் இருக்கும் விவரமறிந்த உடம்பிறப்புகள் சிலர்.

காரணம் என்ன?: தமது 68 ஆவது வயதில் முதல்வராகியுள்ள ஸ்டாலின், கட்சி, ஆட்சி என இரண்டையும தொடர்ந்து தோய்வின்றி கவனிப்பது சற்று சிரமமான விஷயம் என்ற யதார்த்தம்தான், உதயநிதியை விரைவில் அமைச்சராக்க வேண்டும் என்று துர்கா ஸ்டாலின் தூபம் போடுவதற்கு முக்கிய காரணமாம். அத்துடன் கருணாநிதி முதல்வராக இருந்தபோது, கட்சியிலும், ஆட்சியிலும் ஸ்டாலினுக்கு பதவி, பொறுப்புகள் வழங்கப்பட்டபோது குடும்பத்துக்குள்ளும் கட்சிக்குள்ளும் ஏகப்பட்ட நெருக்கடியை கருணாநிதியும், ஸ்டாலினும் சந்தித்தை கண்கூடாக பார்த்திருப்பவர் என்ற முறையில், கணவருக்கு நேர்ந்த கஷ்டம் தமது மகனுக்கும் நேரகூடாது என்பதில் மிகவும் தீர்மானமாக இருக்கிறாராம் துர்கா ஸ்டாலின்..

என்ன சிக்கல்?: சரி... ராஜவீட்டு கன்னுக்குட்டியான உதயநிதி அமைச்சராவதே துர்கா மேடத்தின் விருப்பம் என்றால், அதனை நிறைவேற்றுவது முதல்வராகிய ஸ்டாலினுக்கு அவ்வளவு பெரிய விஷயமா என்ன என்று பார்த்தால், அங்கேதான் சிக்கல் இருப்பதாக கூறுகின்றன அறிவாலய வட்டாரங்கள்.

கட்சியின் சீனியர்களில் ஒருவரான டி.ஆர்.பாலு, மூன்று முறை மன்னார்குடி எம்எல்ஏவாக உள்ள தமது மகன் ராஜாவுக்கு இந்த முறை அமைச்சரவையில் இடமளிக்க வேண்டுமென கேட்டாராம். ஆனால் கட்சியில் பொருளாளர் பதவி, நாடாளுமன்ற திமுக எம்பிக்கள் குழுத் தலைவர் என்று இரண்டு முக்கிய பொறுப்புகளில் நீங்கள் இருக்கும்போது, உங்கள் மகனுக்கும் அமைச்சர் என்றால் சரியாக இருக்காது என்று அவரது கோரிக்கையை கட்சித் தலைமை நிராகரித்துவிட்டதாம். இதனால் பாலு செம அப்செட்டில் இருக்கிறாராம்.

2021 சட்டமன்றத் தேர்தலில், தமிழக அளவில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றவர் ஐ.பெரியசாமி. திண்டுக்கல் தொகுதியில் சாதனை வெற்றியை நிகழ்த்திவிட்டு, கூட்டுறவுத் துறை அமைச்சராக உள்ள அவர், கேபினேட்டில் தமக்கு இன்னும் வெயிட்டான போஸ்டிங் வேண்டுமென அடம்பிடித்து வருகிறாராம். இவருடைய விருப்பத்துக்கும் கட்சி மேலிடம் நோ சொல்லிவிட்டதாம்.

இப்படி அமைச்சரலை விஷயத்தில் அதிருப்தியில் இருக்கும் டி.ஆர்.பாலு, ஐ.பெரியசாமி போன்ற சீனியர்களின் வரிசையில் கட்சியின் பொதுச் செயலாளருமான துரைமுருகனும் இருக்கிறாராம். அதிருப்தியில் இருக்கும் சீனியர்களை சமாதானப்படுத்தி, உதயநிதியை அமைச்சராக்குவதுதான் துர்கா ஸ்டாலினின் அல்டிமேட் பிளானாம்.


சீனியர்களை சமாதானப்படுத்தும் நோக்கத்தில்தான், தமக்கு அமைச்சர் பொறுப்பெல்லாம் வேண்டாம் என்று கோவையில் அண்மையில் உதயநிதி ஸ்டாலின் உதார் விட்டுள்ளாராம். இதேபோன்றுதான், 'கட்சியில் எனக்கு எந்த பொறுப்பும் வேண்டாம்; தலைவரின் தொண்டனாகவே திமுகவில் இருப்பேன்' என்று மூன்று ஆண்டுகளுக்கு முன்பு உதயநிதி உதார்விட்டார். ஆனால், அடுத்த சில மாதங்களிலேயே திமுக இளைஞரணி செயலாளர் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டது. அதேபோன்றுதான் தற்போது அவரை அமைச்சர் ஆக்கும் விஷயத்திலும் நடக்கும் என்கிறது அறிவாலய வட்டாரங்கள்.

நாள் குறித்த துர்கா ஸ்டாலின்: கட்சி சீனியர்களின் அதிருப்தி, கனிமொழி, மு.க.அழகிரி ஆதரவாளர்களின் புகைச்சல் என எது எப்படியிருந்தாலும், உதயநிதியை அமைச்சராக்கி அழகு பார்க்க, துர்கா ஸ்டாலின் நாள் குறித்து விட்டதாகவே தெரிகிறது. நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தை முடித்த கையோடு, மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கவிருக்கும் படத்தின் ஷுட்டிங் மே மாதம் நிறைவடைய உள்ளது. திமுக ஆட்சிக்கு வந்து ஓராண்டு நிறைவடையும் அந்த நேரத்தில்தான் தமது மகன் அமைச்சராக முடிசூட்ட நாள் குறித்துள்ளாராம் துர்கா மேடம். அப்படியே அவரை துணை முதல்வரை கொண்டு செல்லும் பக்கா பிளானும் அவரிடம் உள்ளதாம்.


பலி ஆடு யார்?: ஸ்டாலின் தலைமையிலான திமுக அமைச்சரவையில் தற்போது மொத்தம் 34 அமைச்சர்கள் உள்ளனர். கட்சியின் மொத்த எம்எல்ஏக்களில் எண்ணிக்கையில் 15% பேர்தான் அமைச்சராக முடியும் .இந்த நிபந்தனையின்படி, உதயநிதி அமைச்சராக வேண்டுமென்றால் யாரேனும் ஒரு சிட்டிங் அமைச்சர் பதவி விலக வேண்டும். அந்த பலி ஆடு யார்? என்பதுதான் திமுகவில் தற்போது மில்லியன் டாலர் கேள்வியாக எழுந்துள்ளது.

கருத்துகள் இல்லை: