புதன், 25 செப்டம்பர், 2019

ராஜீவ் காந்தி கொலை .. சுப்பிரமணியம் சாமி மட்டுமல்லாது ஜெயலலிதாவும் கூட முன்பே அறிந்திருந்தார்?

வளன்பிச்சைவளன் : பதிவு - 139 ;
ஈழப்போரும் தமிழக ஈழத்தமிழர்களின் பொறுப்பும் கடமையும் : 
நிகழ்ச்சிகளை முன் கூட்டியே ரத்துசெய்தசுப்ரமண்யசாமி
ராஜீவ்கூட்டத்தை ரத்து செய்த ஜெயலலிதா.
ஜெயின் கமிஷனால் கொலைக்கு தொடர்பு உள்ளவர் என அடையாளம் காட்டப் பட்டவர்
 தேர்தல் பிரச்சார உச்ச கட்ட நேரம் மே 21 மதுரையில் பொதுக் கூட்டம் மாலை நாளேடுகளில் பெரிய விளம்பரம் கொடுத்து இருந்தார்கள் இந்த கூட்டத்திற்கு வருவதற்கு சுப்பிரமணியன் சுவாமி விமான டிக்கெட் கூட முன் பதிவு செய்ய வில்லை அவருக்கு கொலைத்திட்டம் தெரிந்திருந்தது
மே 20 சேலத்தில் சுப்பிரமணியன் சுவாமி சேலம் ஆத்தூர் பொதுக் கூட்டம். கூட்டம் முடிந்த உடன் அவசர வேலை டெல்லிக்கு போக வேண்டும் என்று சென்னைக்கு பறந்தார். அவருக்கு பின்னால் வந்த நிர்வாகிகள் கார் அச்சிறுப்பாக்கம் அருகே விபத்தில் சிக்கியது முன்னாள் எம் எல் ஏ குருமூர்த்தி சேலம் மாவட்ட ரத்தினவேல் காஞ்சிபுரம் ஏகாம்பரம் ஆகியோருக்கு படுகாயம் சுவாமி அதைக் கூட பொருட்படுத்தாமல் சென்னைக்கு ஓடினார்
அப்போது அவர் மத்திய அமைச்சர் சென்னையில் "ட்ரைடன்ட்" ஓட்டலில் தங்கி இருந்தாக ஜெயின் கமிஷனில் சாட்சி சொல்லப் பட்டது.
சந்திராசாமி பிரபலமான அப்பலோ ஹாஸ்பிடல் குழுவினரின் "சிந்தூரி" யில் பதிவு எதுவும் செய்யாமல் ரகசியமாக தங்கியிருந்தார்.

கொலைச் சம்பவம் நடந்த இரவன்று சுப்பிரமணியன் சுவாமி, சந்திராசாமி இருவரும் கார் மூலம் - திருப்பெரும்புதூர் - வழியாக பெங்களூர் சென்று மறுநாள் காலையில் டெல்லிக்கு விமானம் மூலம் சென்றனர்.
படுகொலை நிகழும் வரை சுப்பிரமணியன் சுவாமியுடன் ஓரு ஈழத்து பெண் காணப்பட்டார். கொலைக்கு பிறகு அவரை காணவில்லை.
#ஜெயலலிதாகூட்டம்ரத்து
மே 21 ராஜீவ் காந்தியுடன் ஜெயலலிதாவும் திருப்பெரும்புதூர் கூட்டத்தில் பேசுவதாக அறிவிக்கப் பட்டு இருந்தது ஆனால் ஜெயலலிதா கடைசி நேரத்தில் தன் திருப்பெரும்புதூர் ராஜீவுடன் இணைந்து பேசும் கூட்டத்தை ரத்து செய்தார். நான்கு மாதங்களுக்கு முன் திமுக ஆட்சி கலைப்பில் சுப்பிரமணியன் சுவாமி ஜெயலலிதா நட்பு நல்ல நிலையில் இருந்தது.
சுப்பிரமணியன் சுவாமியும், ஜெயலலிதாவும் கொலைக்கு முன் கூட்டியே ரத்து செய்தது இன்றும் விளங்காத மர்மங்களில் ஒன்று.
#ஜெயின்கமிஷனில்சுப்ரமண்யன்
#சுவாமி
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முக்கியமாக விசாரிக்கப்பட வேண்டியவராக ஜெயின் கமிஷனால் அடையாளம் காட்டப்பட்டவரான சுப்பிரமணியன் சுவாமி நீதிபதி ஜெயின் முன்பு பிதற்றியவைகளை தற்போது உள்ள சூழலில் மக்கள் முன் கொண்டுவருவது காலத்தின் கட்டாயமாகிறது.
நீதிபதி கேள்விகளை கேட்கக் கேட்க சுப்ரமணிசாமியின் பதில்கள் இப்படி வருகிறது.
“எதிரே இருக்ககூடிய நபர் வேலுசாமியை (திருச்சி வேலுச்சாமி) தெரியுமா?”
[ஏளனமாக] “இவரை யார் என்றே எனக்குத் தெரியாது.”
“தெரியாதா? உங்கள் கட்சியில்தானே அகில இந்திய செயலராக இருந்தார்?”
என்கட்சியில் லட்சக்கணக்கான நபர்கள் இருக்கிறார்கள். நிறைய பேருக்கு பொறுப்பு கொடுத்திருந்தேன். அதில் இவர் யார் என்று எப்படி அடையாளம் வைத்துக்கொள்ள முடியும் தெரியலையே.”
சாமிக்கு ஏதோ ஒரு 200 எம்.பி.க்கள் இருப்பதைப் போலவும் கட்சிக்குப் பல செயலர்களை வைத்திருப்பதை போலவும் ஒரு நினைப்பு. அலட்சியம்.
நீதிபதி தொடர்ந்தார்.
“சரி, உங்கள் கட்சி சார்பாக நீங்கள் மேற்கொண்ட தேர்தல் சுற்றுப்பயண விவரம் இருக்கிறதா, சொல்லமுடியுமா?”
“எனக்கு அதுவெல்லாம் நினைவில்லை.”
“உங்கள் கட்சி அலுவலகத்தில் சுற்றுப்பயண விவரம் இருக்குமே. அதைப்பார்த்து சொல்லலாமே?”
“இந்த கேள்வியை கேட்டவுடன் ஏதோ சாமர்த்தியமாக சொல்வதாக நினைத்து வகையாக மாட்டினார் சாமி.
“அந்தத் தேர்தல் சுற்றுப்பயண விவரம் எல்லாம் கட்சி அலுவலகத்தில் இருந்தது தான். இதோ இருக்கிறாரே வேலுச்சாமி, இவர் கட்சியைவிட்டு போகும்போது அந்த பைலை எல்லாம் திருடிக்கொண்டு ஓடிவிட்டார்” என்று கூறியதும் நீதிபதிக்கு முகம் சுருங்கியது.
“என்ன மிஸ்டர். இப்போதுதானே அந்த வேலுச்சாமியை யார் என்றே தெரியாது என்றீர்கள். உடனே எப்படி அவர்தான் அந்த பைலை திருடிக்கொண்டார் என்கிறீர்கள். உண்மையை சொல்லுங்கள். [வேலுச்சாமியை] அவரை உங்களுக்கு தெரியுமா தெரியாதா?" என்றார் முறைத்துப் பார்த்தபடி.
அப்போதுதான் சாமிக்கு தான் மாட்டிகொண்டோம் என்பது தெரிந்தது. அப்படியே முழித்தார்.
“சரியாக சொல்லுங்கள் மிஸ்டர். இது நீதிமன்றம். நீங்கள் விளையாடுவதற்கான இடம் இல்லை. அவரை உங்களுக்கு முன்னமே தெரியுமா? தெரியாதா?” என்றார். சுப்ரமணியசாமியிடமிருந்து பதிலேதும் இல்லை. திணறினார். அதன் பிறகு கேட்ட கேள்விகளுக்கு எல்லாம் மிக நிதானமாக யோசித்து நினைவில்லை தெரியாது என்றபடியே பதிலளிக்கத் தொடங்கினார்.
“சரி மே மாதம் 21ம் தேதி சென்னையில் இருந்து டெல்லிக்கு எப்படி வந்தீர்கள். விமானத்திலா, ரயிலிலா?”
இந்த கேள்விக்கு பதில் ஏதும் சொல்லாமல் தலைகுனிந்தபடியே நின்றார் சாமி.
“21ம் தேதி காலையிலிருந்து மாலைவரை நீங்கள் டெல்லியில் இல்லை. வேறு எங்கோ ரகசியமாக இருந்தீர்கள் என்பதற்கு என்ன பதில்?”
“இல்லை நான் டெல்லியில் தான் இருந்தேன்.”
“சரி டெல்லியில்தான் இருந்தீர்கள் என்றால் அதற்கு என்ன ஆதாரம். மத்திய அமைச்சர்களின் மூவ்மென்ட் ரிப்போர்ட் பைல் இருக்குமே. இருக்கிறதா?” என்ற கேள்விக்கு “அது தொலைந்துபோய்விட்டதாக மத்திய அரசு பதில் அளித்திருக்கிறது” என்றார் அரசு தரப்பு வழக்கறிஞர்.
அடுத்து சாமியை பார்த்து “நீங்கள் 21ம் தேதி டெல்லியில்தான் இருந்தீர்கள் என்பதற்கு ஆதாரம் ஏதாவது இருக்கிறதா?” என்றார்.
“ஓ இருக்கிறதே” என்ற சாமி ஆங்கில நாளேட்டில் வந்திருந்த இரண்டு துண்டு செய்தியை எடுத்துக் கொடுத்தார். அதை வாங்கிப் பார்த்த நீதிபதி ஜெயினுக்கு முகம் சுருங்கியது. சாமி சரியாகத்தான் சொல்கிறார். நாங்கள்தான் ஏதோ தவறாக புகர் செய்திருக்கிறோம் என்பதாக அது பட்டது. உடனே அதை கொடுக்கும்படி நான் கேட்டேன். எனது வழக்கறிஞரிடம் அதைக் கொடுத்தார். அதைப் பார்த்த எனது வழக்கறிஞர் “ஆமாம் வேலுசாமி, சாமி சரியாகத்தான் சொல்கிறார். அன்றைய தினம் பகல் முழுக்க அவர் டெல்லியிலேதான் இருந்திருக்கிறார்” என்றார். அவருக்கும் பிடிப்பு விட்டுப்போனது. எனக்கு பெரியகுழப்பம். அந்த செய்தித்தாள் பகுதியை கொடுங்கள் என்று வாங்கிப்பார்த்தேன். அன்றைய தினம் சாமி டெல்லியில் செய்தியாளர்களைப் பார்த்து ஒரு செய்தி கொடுத்திருப்பதாக பதிவாகியிருந்தது.
எனக்கும் குழப்பம். அதிர்ச்சி. ஒன்றும் புரியாமல் இது எப்படி சாத்தியம் என்று பார்க்கிறேன். அப்படியே நீதிபதியையும் பார்த்தேன். நாங்கள் எதோ தவறான புகாரை கொடுத்த நபர்கள். சாமி சரியானவர்தான் என்ற பார்வை தெரிந்தது. இதையெல்லாம் கவனித்தபடி இருந்த பிரியங்கா காந்தி முகத்திலும் குழப்பம்.
நான் மீண்டும் அந்த செய்தித்தாள் பத்திகளைப் பார்த்தேன். சிங்கள் கால செய்தி, அதன் கீழே கடைசியாக பி.டி.ஐ., பி.டி.ஐ என்று இரண்டிலுமே இருந்தன. இருந்துகொண்டிருந்த என் முகத்தில் மின்னல் வெளிச்சம். உடனே நீதிபதியைப் பார்த்து “இது பொய், சாமி திட்டமிட்டு நீதிமன்றத்தை ஏமாற்றியிருந்தார். அவரது ஏமாற்று புத்தியை இங்கேயும் காட்டியிருக்கிறார்.” என்றேன். அங்கிருந்தவர்கள் எல்லோருக்கும் குழப்பம். நீதிபதி என்னைப் பார்த்து “எப்படிக் கூறுகிறீர்கள்?” என்றார்.
“சார், சுப்ரமணியசாமி கொடுத்த அந்த இரண்டு செய்திகளின் கிழேயும் பி.டி.ஐ என்றிருக்கிறது. இவர் நேரடியாக செய்தியாளர்களை சந்தித்து பேட்டி கொடுத்திருந்தால் அப்படி வந்திருக்காது. பி.டி.ஐ என்பது ஒரு செய்தி நிறுவனம். ஒருவர் உலகத்தின் எந்த மூலையில் இருந்தும் பி.டி.ஐ நிருவனத்தில் உள்ள ஒருவரைப் பிடித்து செய்தியைக் கொடுக்கலாம். சாமியும் அப்படித்தான் கொடுத்திருக்கிறார். அதனால்தான் செய்தியின் கிழே பி.டி.ஐ என்று போட்டிருக்கிறார்கள். பொய்யான ஆவணங்களைக் காட்டி நீதிமன்ற விசாரணையை திசைதிருப்புகிறார் சாமி. அவர் செய்தியாளர்களை சந்தித்திருந்தால் எங்கே சந்தித்தார். அதில் யாராவது ஒரு செய்தியாளரை அடையாளம் கூற முடியுமா?” என்று கேட்டதும் நீதிபதிக்கு மட்டுமல்ல பிரியங்காவின் முகத்திலும் ஒரு திருப்பம்.
நீதிபதியும் சாமியைப் பார்த்து என் கேள்விக்கு பதில் என்ன என்று கேட்கிறார். சாமியிடம் இருந்து ஒரு பதிலும் இல்லை. அவருக்கு வேர்க்கத் தொடங்கியது. தடுமாறுகிறார் என்பதும் புரிந்தது. எல்லோரும் இதைக் கூர்ந்து கவனித்தபடி இருந்தார்கள்.
அடுத்த கேள்வி. “மே மாதம் 22ம் தேதி மற்றும் 23ம் தேதி ஆகிய இரண்டு நாட்கள் உங்களுக்கு மதுரையிலும் திருச்சியிலும் பொதுக்கூட்டநிகழ்ச்சி இருந்தது. கட்சியின் தேர்தல் பிரச்சாரம். தெரியுமா?”
திணறினார். யோசித்தார். “தெரியவில்லை. சரியாக நினைவில்லை” என்றார்.
“யோசித்து சரியாக கூறுங்கள்?” என்றார் நீதிபதி.
“இல்லை, எமக்கு அப்படி ஒரு நிகழ்ச்சி இருந்ததாக நினைவில்லை” என்றார்.
அப்போதுதான் நான் வைத்திருந்த 1991 மே மாதம் 21ம் தேதி வந்திருந்த மாலைமலர், மதுரைமணி ஆகிய இரண்டு மாலை நாளேட்டை எடுத்தேன். இரண்டும் மதுரை பதிப்பு. அந்த இரண்டு நாளேட்டிலும் சுப்ரமணியசாமி 22ம் தேதி மாலை மதுரையில் பொதுகூட்டத்தில் கலந்து கொள்கிறார் என்ற விளம்பரமும் செய்தியும் வந்திருந்தது. அதில் சுப்ரமணிய சாமியோடு நானும் மதுரை மாவட்ட ஜனதா கட்சி தலைவரும் கலந்துகொள்வதாக இருந்தது. கட்சி சார்பான விளம்பரம் செய்தி அறிக்கைதான் அது. அதை சாமியிடம் காட்டினேன். இப்போதாவது நினைவிருக்கிறதா, தெரிகிறதா என்றேன். அதை வாங்கிப் பார்த்தவர் ஒன்றும் சொ‌ல்ல முடியாதவராக ஒரு மாதிரியாக தலையாட்டி பிறகு ஆமாம் நினைவிருக்கிறது என்றார்.
“ஆக 22ம் தேதி மதுரையிலும் 23ம் தேதி திருச்சியிலும் நீங்கள் பொதுகூட்டத்தில் கலந்துகொண்டு பேச இருந்தீர்கள். சரிதானே? அடுத்த கேள்வி.
யோசித்தபடியே “ஆமாம்” என்றார்.
“அது தேர்தல் பிரச்சார காலகட்டம். 22ம் தேதி மதுரை பொதுகூட்டத்திற்கு நீங்கள் முன்கூட்டியே விமான டிக்கெட் முன்பதிவு செய்திருக்க வேண்டும். இல்லையா? அப்படியென்றால் அந்த விமான டிக்கெட் எங்கே?” என்ற கேள்வியை கேட்டதும் சாமிக்கு மேலும் வியர்வை கொட்டத்தொடங்கியது.
“22ம் தேதி மதுரைக்கு செல்லவேண்டும் என்றால் நீங்கள் அன்றைய தினம் காலை டெல்லியில் இருந்து 6 மணி விமானத்திற்குதான் புறப்பட்டுச் செல்லவேண்டும். அதற்கு நேராக பேருந்துக்குச் சென்று டிக்கெட்டை வாங்குவதுப் போல் வாங்கமுடியாது. ஆக முன்கூட்டியே பதிவு செய்திருக்க வேண்டும். எங்கே அந்தப் பயணச்சீட்டு?” மீண்டும் எனது கேள்வி.
சாமியிடம் இருந்து பதில் இல்லை. முழித்தார். ஏதோ சொல்லவருகிறார். ஆனால் முடியவில்லை. நீதிபதியும் எங்கே அந்தப் பயணச்சீட்டு விவரம் என்ற கேள்வியை கேட்கிறார்.
பட்டென்ற பதில் இல்லை. நன்றாக முழித்துவிட்டு கடைசியாக “நான் அந்த புரோகிராமை கேன்சல் செய்துவிட்டேன். அதனால் டிக்கெட்டையும் கேன்சல் செய்துவிட்டேன்” என்றார். அப்படி சொன்னதும் அங்கே இருந்த மொத்த பார்வையாளர்களும் அதிர்ச்சியோடு நிமிர்ந்து பார்க்கிறார்கள். அவர்கள் அனைவரும் முக்கியமானவர்கள். மெத்த படித்தவர்கள். ஒரு நிமிடம் மௌனமாக செல்கிறது நேரம்.
சரி டிக்கெட்டை கேன்சல் செய்தீர்கள் என்றால் அதற்கான படிவம், அத்தாட்சி எங்கே?” என்றேன். இந்த நேரத்தில் சாமிக்கு மேலும் வியர்த்தபடி இருந்தது. கிட்டத்தட்ட சட்டை முழுவதும் நனைந்திருந்தது.
பிறகு மிக தயங்கித் தயங்கி “நான் விமான டிக்கெட்டே எடுக்கவில்லை” என்றார்.
“முதலில் விமான டிக்கெட்டை கேன்சல் செய்துவிட்டேன் என்றீர்கள். பிறகு டிக்கெட்டே எடுக்கவில்லை என்கிறீர்கள். சரி, ஏன் எடுக்கவில்லை? அதற்கு ஏதாவது முக்கிய காரணம் இருக்கவேண்டுமில்லையா? அது என்ன காரணம் கடைசிகட்ட தேர்தல் பிரச்சாரத்தையே கேன்சல் செய்துவிடும் அளவிற்கு என்ன முக்கிய வேலை. என்ன காரணத்திற்க்காக மதுரை பயணத்தை உறுதி செய்யவில்லை? கேன்சல் செய்தீர்கள்? என்ற அடுக்கடுக்கான கேள்விக்கு சாமியிடம் இருந்து ஒரு பதிலும் இல்லை. நிற்க தடுமாறினார். நிற்க முடியாமல் விசாரணை கூண்டின் கைப்பிடியை பிடித்துக்கொண்டார். உடல் முழுவதும் நனைந்துவிட்டது.
அப்போதுதான் நான் என் வழக்கறிஞர் பாலகிருஷ்ணனிடம் அதை மெதுவாக சொன்னேன். அதை கேட்ட அவர் புத்துணர்ச்சி பெற்றவராக சத்தம் போட்டு “Yes My lord, the whole world changed their program after the assasination, but our gentleman Dr.swamy changed his program before assasination" [மொத்த உலகமும் இந்த ராஜீவ்காந்தி படுகொலைக்குப் பிறகுதான் தமது திட்டத்தை மாற்றிகொண்டது. ஆனால் சுப்ரமணியசாமி மட்டுமே படுகொலைக்கு முன்பாக தனது பயணத்திட்டத்தை மாற்றியிருக்கிறார். அது ஏன்? முக்கியமாக தேர்தல் பிரச்சாரத்தைவிட்டு எங்கோ ரகசியமாக தங்கியிருக்க காரணம் என்ன?” என்று கேட்டபோது,
யாரிடமும் எந்த சத்தமும் இல்லை. “இந்த கேள்விக்கு பதிலை சொல்லுங்கள் மிஸ்டர்” என்றார் நீதிபதி. சாமியிடம் இருந்து பதில் இல்லாதது மட்டுமல்ல, தலைகுனிந்தபடி நிற்கிறார். இப்போது நனைந்த உடலில் இருந்து வியர்வை அவரது கைவிரல் வழியாக சொட்டியபடியே இருக்கிறது. எல்லோரும் அந்தக் கோலத்தைப் பார்க்கிறார்கள். எனக்கு ஏதோ இனம்புரியாத இன்ப அதிர்ச்சி உடலுக்குள்ளாக பாய்கிறது. யார் குற்றவாளி என்பது அம்பலபட்டதாக திருப்தி.
எனக்கே இப்படி இருக்கிறது என்றால் தந்தை ராஜீவ்காந்தியை பறிகொடுத்துவிட்டு தவிக்கும் மக்கள் பிரியங்காவிற்கு எப்படி இருக்கும் என்று அவரைப் பார்க்கிறேன். அவரது முகம்... ஆத்திரத்திலும் கோபத்திலும் அப்படியே தீ ஜுவாலையாக முகமெல்லாம் சிவந்து கண்கள் சுப்ரமணிசாமியின் மீது ஆவேசப் பார்வையோடு நிலைகுத்தி நின்றிருந்தது. அதை எப்படி விவரிப்பது என்று தெரியவில்லை. கோவலனை பறிகொடுத்த கண்ணகி பாண்டிய மன்னனின் அரசவை மண்டபத்திற்குள் தலைவிரி கோலமாக நுழைந்ததை இளங்கோவடிகள் கூறுவதை படித்த ஞாபகம்தான் சட்டென்று நினைவுக்கு வந்தது.
தலைகுனிந்தபடியே நின்ற சாமி எந்தப் பக்கமும் திரும்பவில்லை. நீதிபதி ஜெயினோ சுப்ரமணியசாமியை உற்றுப் பார்த்தவர் அப்படியே பார்த்தபடியே இருக்கிறார். பார்வையாளர்கள் மத்தியிலும் ஒரே நிசப்தம். அடுத்து நீதிபதி என்ன சொல்லப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு. ஆனால் ஜெயின் கன்னத்தில் கைவைத்தபடியே சாமியை பார்த்தபடியே இருக்கிறார். இரண்டு நிமிடங்கள் அப்படியே ஓடுகிறது. பேனாவை மூடி மேஜை மேல் வைத்தார். பிறகு கண்ணாடியை கழற்றி மேசைமீது வைத்தபடி அப்படியே எழுந்தார். வழக்கமாக “கோர்ட் இஸ் அட்ஜர்ன்ட்” என்று சொல்வதைக்கூட மறந்து சாமியை மேலும் முறைத்துப் பார்த்தபடியே அவரது அறைக்குள் சென்றார். பிறகு சாமியும் விசாரணைக் கூண்டிலிருந்து இறங்கினார். பார்வையாளர்களும் எழுந்து அங்குமிங்கும் நகர்ந்தார்கள்.
சாமி பிரியங்காவை கடக்கும் போது தலைகுனிந்து நடந்தார். அந்த நேரத்தில் நான் பிரியங்காவை பார்க்கிறேன். சுப்ரமணியசாமியை அப்படியே சுட்டெரித்துவிடுவதைப் போல் பார்க்கிறார். முகத்தில் ஆதங்கம். ஆத்திரம் எல்லாம் ஒன்றுகூட கண்கள் சிவந்து கலங்கியிருந்தன. ‘நீதானா அந்தக் குற்றவாளி?’ என்ற முறைப்பு அது. அப்படியே என்னையும் பார்க்கிறார். ஒருவித ஏக்கம், இயலாமை எல்லாம் கலந்த சாந்தமான பார்வையோடு தலைசாய்த்து இமைமூடினார். அதை நன்றி என் எடுத்துகொள்வதா? தெரியவில்லை. அடுத்த நொடி அங்கிருந்து வேக வேகமாக வெளியேறினார்
அவர் சென்றவுடனேயே அங்கு இருந்த மூத்த வழக்கறிஞரான தத்தா ஓடிவந்து என் கைகளைப் பற்றினார். “இந்த வழக்கு இவ்வளவு நாளும் இருட்டில் இருந்தது. இன்றுதான் அதன்மீது ஒரு வெளிச்சக்கீற்று மின்னலாய் பாய்ந்திருக்கிறது. இவ்வளவு நாளும் திக்குத் தெரியாத நிலையில் இருந்தது. மிகவும் நன்றி” என்று தட்டிகொடுத்தார். அதே போன்று காங்கிரஸ் கட்சி சார்பாக வாதாடிய மூத்த வழக்கறிஞரான மிட்டலும் ஓடிவந்து கட்டிபிடித்துக்கொண்டார். “என்னால் எப்படி விவரிப்பதென்று தெரியவில்லை. சாமி அந்த இரண்டு பத்திரிக்கை செய்திகளையும் காட்டியபோது இத்தோடு எல்லாம் முடிந்தது என்று நினைத்துவிட்டேன். ஆனால் நீங்கள்..? வாய்மை வென்றிருக்கிறது. பரவாயில்லை” என்றார். அது என் கடமை என்பதால் பாராட்டாக எடுத்து கொள்ள முடியவில்லை.
அதேபோன்று தமிழகத்தை சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினரானா விடியல் சேகர் ஓடிவந்து “அண்ணே இந்த நாளை வாழ்கையில் மறக்க முடியாதண்ணே. உங்கள் மூலமாக இன்னைக்கு இந்த வழக்கில் ஒரு வெளிச்சம் கிடைத்திருக்கிறதண்னே” என்றார். முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன், எனக்கு பரிச்சயமில்லை என்றாலும் விடியல் சேகரோடு சேர்ந்து கைகொடுத்துப் பாராட்டினார். இதேல்லாம் சொல்ல காரணம் இருக்கிறது.
இப்படி வழக்கிற்கு சம்பந்தமே இல்லாத பலரும் என்னை அங்கே அங்கீகரித்தார்கள், பாராட்டினார்கள். கட்டிபிடித்து உருகினார்கள். ஆனால் ஒருவர் மட்டும் என்னை கோபமாக முறைத்தது முறைத்தபடியே இருந்தார். என்னை வெறுப்பாக பார்த்தபடி எழுந்து விறுவிறுவென வெளியேறினார். அவர்தான் சி.பி.ஐ சிறப்பு புலனாய்வுக் குழுவின் தலைவரான கார்த்திகேயன். பரவாயில்லை நாங்கள் புலனாய்வு செய்யாததைக்கூட நீங்கள் செய்திருக்கிறீர்கள் என்று பாராட்ட வேண்டாம்.
ஹலோ என்று ஒரு வார்த்தையாவது பேசியிருக்கலாம். ஆனால் இல்லை. ஏதோ அவரை விசாரணைக் கூண்டில் நிறுத்தி அவர்தான் இந்தப் படுகொலையின் சூத்திரதாரி என் நான் வாதடியதைப் போன்று முறைத்துக்கொண்டே சென்றார். அதுதான் வேடிக்கையாக இருந்தது.
சரி போகட்டும். அதன் பிறகு நான் வழக்கறிஞரோடு அவரது அலுவலகம் சென்று மற்ற வேலைகளை முடித்துக்கொண்டு அவசர அவசரமாக விமானம் ஏறினேன். அந்த விமானத்தில் வலதுபக்கம் மூன்று இருக்கைகள். இடது பக்கம் இரண்டு இருக்கைகள். நுழைவு வாசல் ஓரத்தில் இருந்த மூன்று இருக்கையில் திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணியும், அவரது நண்பர் வழக்கறிஞர் வீரசேகரனும் அமர்ந்திருந்தார்கள். அவர்கள் பக்கத்தில் நான் அமர்ந்துகொண்டேன்.
என்னைப் பார்த்த கி.வீரமணி “வாழ்த்துகள் வேலுச்சாமி. இன்னைக்கு பிரமாதமாக ஆர்க்யுமென்ட் செய்தீர்களாமே. நடந்ததை எல்லாம் கேள்விப்பட்டேன். பரவாயில்லை சதிகாரர்கள் யார் என்பது ஓரளவு வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது” என்று பாராட்டினார். நானும் சிரித்தபடியே “ஆமாம்” என்றேன். இதற்குள் விமானம் புறப்படத் தயார் நிலைக்கு வந்தது. அந்த கடைசி நிமிடத்தில் அவசர அவசரமாக ஒருவர் உள்ளே நுழைந்தார். என்னை கண்டதும் நெருப்பை மிதித்திவிட்டதைப் போன்று முகம் மாறினார். அப்படியே முகத்தை திருப்பிக்கொண்டு எனக்குப் பக்கத்தில் இரண்டுபேர் அமரக்கூடிய இருக்கையில், என்பக்கமாக உட்கார்ந்தார்.
சும்மா அப்படி திரும்பினாலே என்முகத்தைப் பார்த்துவிடலாம். அப்படியிருந்தும் டெல்லி முதல் சென்னைவரை சுமார் இரண்டரை மணிநேரம் அந்த முகத்தை என்பக்கம் திருப்பவே இல்லை. கழுத்தில் சுளுக்கு விழுந்தவரை போன்று அந்தபக்கமே முகத்தை திருப்பிகொண்டார். யார் அந்த பெரிய மனிதர் என்று திரும்பவும் கேட்டுவிடாதீர்கள். சி.பி.ஐ அதிகாரி கார்த்திகேயனே தான். அவருக்கு ஏன் என்மீது இவ்வளவு காழ்‌ப்புணர்ச்சி என்று யோசிக்கும்போதே அவர் புலன்விசாரணை செய்த கோணமும் லட்சணமும் நினைவுக்கு வந்து தொலைத்தது. அதிகாரம் வைத்திருப்பவர்கள் சொல்வதே தீர்ப்பாகிவிடுகிறது என்ன செய்வது.
“தன்நெஞ்சறிவது பொய்யற்க பொய்த்த பின்
தன்நெஞ்சே தன்னைச் சுடும்”
என்ற குரலை கார்த்திகேயன் படித்திருக்க மாட்டாரோ?
- திருச்சி வேலுச்சாமி, “ராஜீவ் படுகொலை: தூக்கு கயிற்றில் நிஜம்” என்ற நூலில் இருந்து...
தொடரும்...............

கருத்துகள் இல்லை: