வெள்ளி, 27 செப்டம்பர், 2019

எனக்கு தொடர்பே இல்லை: கைவிரித்த கமல் தரப்பு!

மின்னம்பலம் : எனக்கு தொடர்பே இல்லை: கைவிரித்த கமல் தரப்பு!கமல்ஹாசன் நடித்த உத்தம வில்லன் பிரச்சினை தமிழ் சினிமாவில் தற்போது முக்கியத்துவம் பெற்றுள்ளது. கமல் ஏமாற்றுகிறார் என்று புகார் கொடுத்த ஞானவேல் ராஜாவுக்கும் தங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லையென்றும், சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பாக அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது.
உத்தம வில்லன் படத்துக்கு பிரச்சினை ஏற்பட்டபோது உதவ முன்வந்தவர் ஞானவேல் ராஜா. அவர் உதவிக்கு பிரதிபலனாக, ஒரு படம் நடித்துக்கொடுப்பது அல்லது வாங்கிய 10 கோடியை திருப்பிக் கொடுப்பது என கமல் உத்திரவாதம் கொடுப்பதாக ஞானவேல் ராஜாவின் புகாரில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், இப்போது அப்படியொரு ஒப்பந்தமே எங்களுக்குள் இல்லையென ராஜ்கமல் நிறுவனம் தடாலடியாக அறிவித்திருக்கிறது.

உத்தம வில்லன் படத்தினை, லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்துக்காக மட்டுமே முதல் பிரதி அடிப்படையில் ராஜ்கமல் நிறுவனம் எடுத்துக்கொடுத்ததாகவும், அதன்பிறகான பிரச்சினைகளுக்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என்று ராஜ்கமல் நிறுவனம் கைவிரித்துவிட்டது. படத்தின் பிரச்சினைகளை எதிர்கொண்டு, உதவிகள் பெற்று படத்தை ரிலீஸ் செய்த திருப்பதி பிரதர்ஸிடம் கேட்கவேண்டிய கேள்விகளை எங்களிடம் கேட்காதீர்கள் என்றும் கூறியிருக்கிறது.
இது தொடர்பாக ராஜ்கமல் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு...

உத்தம வில்லன் திரைப்படம் வெளியான நேரத்தில் திரு. ஞானவேல் ராஜா அவர்கள் திரு. கமல் ஹாசன் அவர்களுக்கு பத்து கோடி ரூபாய் கொடுத்ததாக பரப்பப்படும் வதந்திகளை ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் திட்டவட்டமாக மறுக்கிறது. உண்மைக்கு முற்றிலும் புறம்பான இவ்வதந்திகளை சொந்த காரணங்களுக்காக சிலர் பரப்புகின்றனர். திரு, ஞானவேல் ராஜா , திரு. கமல் ஹாசன் அவர்களுக்கு பணம் கொடுத்தார் என்பது அப்பட்டமான பொய். ஒரு ரூபாய் கூட அவர் கொடுக்கவில்லை என்பதே உண்மை. சுமார் பத்து நாட்களுக்கு முன்பு தயாரிப்பாளர் சங்கத்தின் தற்காலிக குழு உறுப்பினர் திரு. J.சதீஷ் குமார் அவர்கள், எங்கள் அலுவலகத்தை தொடர்புகொண்டார்.திருப்பதி பிரதர்ஸ் பிலிம் மீடியா (பி) லிமிட்டெட் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில், திரு. கமல் ஹாசன் அவர்களின் தேதிகள் தொடர்பாக எங்கள் நிறுவனம் அவர்களுக்கு 2015ல் அனுப்பிய கடிதம் ஒன்றின் தொடர்பாக பேச வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். 2015 மே மாதத்தில் திருப்பதி பிரதர்ஸ் பிலிம் மீடியா (பி) லிமிட்டெடுடன் கதை ஒன்று குறித்து ஆலோசனை செய்வதற்காக திரு.கமல்ஹாசன் அவர்களின் தேதிகளை ராஜ் கமல் பிலிம்ஸ் இண்டெர்னேஷனல் நிறுவனம் கொடுத்திருந்தது. ஆனால் அது குறித்து திருப்பதி பிரதர்ஸ் பிலிம் மீடியா (பி) லிமிட்டெட் இன்று வரை எங்கள் நிறுவனத்தை மேலும் தொடர்பு கொள்ளவில்லை.
ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனலுக்கும், திருப்பதி பிரதர்ஸ் பிலிம் மீடியா (பி) லிமிட்டெட்டுக்கும் இடையில் மட்டுமே உத்தம வில்லன் திரைப்படத்தை தயாரிப்பதற்கான ஒப்பந்தம் போடப்பட்டது. தங்கள் ஒப்பந்தத்தின் படி, ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், உத்தம வில்லன் திரைப்படத்தின் முதல் பதிவை, திருப்பதி பிரதர்ஸ் பிலிம் மீடியா (பி) லிமிட்டெடிடம் ஒப்படைத்துவிட்டது. திரு. ஞானவேல் ராஜா அவர்களுக்கும், திரு. கமல் ஹாசன் அவர்களுக்கும் தனிப்பட்ட வகையில் எந்த விதமான ஒப்பந்தமும் கிடையாது. எனவே, திரைப்படத்தை வெளியிடும் பொருட்டு, திரு. ஞானவேல் ராஜா அவர்கள் திரு. கமல் ஹாசன் அவர்களுக்கு பணம் கொடுத்தார் என்று கூறுவதில் எந்த முகாந்திரமும் இல்லை. திரு. கமல் ஹாசன் அவர்களின் மதிப்பைக் கெடுப்பதற்காகவே இவ்வதந்திகள் பரப்பப்படுகின்றன. திரு. கமல் ஹாசன் அவர்களின் மதிப்பை கெடுக்கும் முயற்சியில் ஈடுபடுபவர்களை சட்ட ரீதியாக எதிர்கொள்ள ராஜ் கமல் இன்டர்நேஷனல் தயாராகி வருகிறது.
N.V.நாராயணன்.
CEO- ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல்

கருத்துகள் இல்லை: