புதன், 25 செப்டம்பர், 2019

மாணவர் உதித் சூர்யா கைது! நீட் ஆள்மாறாட்ட குற்றச்சாட்டுக்கு ஆளானவர்

நீட் ஆள்மாறாட்ட புகார்- மாணவர் உதித் சூர்யா கைதுமாலைமலர் : நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த புகாரில் தேடப்பட்டு வந்த மாணவர் உதித் சூர்யா திருப்பதி மலை அடிவாரத்தில் கைது செய்யப்பட்டார். சென்னை: சென்னை தேனாம்பேட்டையை சேர்ந்த டாக்டர் வெங்கடேசனின் மகன் உதித் சூர்யா,
மும்பையில் நடந்த நீட் தேர்வில் வெற்றி பெற்று, அதன்மூலம் கலந்தாய்வில் பங்கேற்று தேனி மருத்துவ கல்லூரியில் சேர்ந்து படித்து வந்தார்.  ஆனால், அவர் ஆள்மாறாட்டம் மூலமாக டாக்டர் படிப்பில் சேர்ந்துள்ளதாக தேனி மருத்துவ கல்லூரி நிர்வாகத்துக்கு இ-மெயிலில் புகார் வந்துள்ளது. இதனை தொடர்ந்து உதித் சூர்யாவை அழைத்து கல்லூரி நிர்வாகம் விசாரணை நடத்தியது.
விசாரணைக்குப் பிறகு மாணவர் உதித் சூர்யா கல்லூரிக்கு வரவில்லை. அதேசமயம் அவர் மீதான ஆள்மாறாட்ட புகார் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் கல்லூரி நிர்வாகம் சார்பில் தேனி போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

இதுபற்றி உயர் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய தேனி போலீசார், மாணவர் உதித்சூர்யா மற்றும் அவருக்காக தேர்வு எழுதிய நபர் ஆகியோர் மீது கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். அவரை பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டது. பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.

இதையடுத்து மாணவர் உதித் சூர்யா முன்ஜாமீன் கேட்டு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.  அவரை போலீசில் ஆஜராகும்படி அறிவுரை கூறிய நீதிமன்றம், முன்ஜாமீன் மனு மீதான விசாரணையை ஒத்திவைத்துள்ளது.

இந்நிலையில், மாணவர் உதித் சூர்யாவை போலீசார் இன்று கைது செய்தனர். அவரது குடும்பத்தினரும் கைது செய்யப்பட்டுள்ளனர். திருப்பதி மலை அடிவாரத்தில் தங்கியிருந்த போது சிபிசிஐடி போலீசார் அவரை கைது செய்து விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்

கருத்துகள் இல்லை: