புதன், 25 ஜூன், 2014

கங்கையில் மூழ்கினால் 'கேன்சர்'... கும்பமேளா நீரை சோதித்த ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி!

ஹைதராபாத்: கங்கை நீரில் மூழ்கி எழுந்தால் புற்றுநோய் தாக்கும் அபாயம் இருப்பதாக எச்சரித்துள்ளனர் ஹைதராபாத்தில் உள்ள அணுசக்தி தேசிய மைய ஆராய்ச்சியாளர்கள். கடந்த 2013ம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற கும்பமேளா திருவிழாவின் போது சேகரிக்கப் பட்ட கங்கை நீரின் மாதிரிகளை ஆய்வு செய்தது ஹைதராபாத்தில் உள்ள அணுசக்தி தேசிய மையத்தின் பொருட்கள் இயைபு குணநலப்படுத்துதல் மையம். அந்த ஆய்வு முடிவுகளின் படி, கங்கை நீரில் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய கதிர்வீச்சு தாக்கம் இருப்பதாக அவர்கள் கண்டறிந்துள்ளனர்.
கங்கையில் மூழ்கிக் குளித்தால் நாம் செய்த பாவங்கள் எல்லாம் நீங்கி விடும் என்ற நம்பிக்கை பெரும்பாலான மக்களின் மனதில் உள்ளது. ஆனால், அந்நீரில் புற்றுநோயை உண்டாக்கும் முக்கிய தாது அதிகளவில் கலந்திருப்பது தெரிய வந்துள்ளது. இதன் மூலம் கங்கையில் மூழ்கிக் குளிப்பவர்களுக்கு புற்றுநோய் உண்டாகலாம் என ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.
குரோமியம் 6.... பக்தர்கள் பூஜைக்காக சேகரித்த தண்ணீரில் குரோமியம் 6 கலந்திருந்ததாக சோதனை மையத்தின் அறிக்கை தெரிவித்துள்ளது. குரோமியம் அத்தியாவசியமானது மட்டுமில்லாமல் நச்சுத்தன்மையும் கொண்டதாகும். நச்சுத்தன்மை நிறைந்த குரோமிய வகை இந்தத் தண்ணீரில் அனுமதிக்கப்பட்ட அளவிற்கு மேல் 50 மடங்கு அதிகமாக இருந்தது என்று என்சிசிஎம் தலைவரான டாக்டர் சுனில் ஜெய்குமார் தெரிவித்துள்ளார்.
புற்றுநோய் அபாயம்... அதிகரித்த அளவில் காணப்படும் இந்த நச்சுத்தன்மையானது புற்றுநோய் உட்பட பல உடல்நலக் கோளாறுகளை ஏற்படுத்தக்கூடிய தன்மை கொண்டது என ஜெய்குமார் குறிப்பிடுகின்றார்.
தோல் பதனிடும் தொழிற்சாலைக் கழிவுகள்... கங்கை இவ்வாறு அசுத்தமானதற்கு முக்கியக் காரணம், கான்பூரில் செயல்படும் தோல் பதனிடும் தொழிற்சாலைக் கழிவுகளே எனக் குற்றம் சாட்டப் படுகிறது. எனவே இத்தகைய அசுத்தங்களையும் நீக்கக்கூடிய அளவில் சுத்திகரிப்பு தொழில்நுட்பம் கங்கையில் பயன்படுத்தப்படவேண்டும் என்றும் ஜெய்குமார் கூறுகிறார்
இதுமட்டுமின்றி நீரில் உள்ள ஃபுளோரைட் தன்மையைக் கண்டறிய உதவும் சோதனைக் கருவிகளும் இந்த ஆய்வு மையத்தில் தயாரிக்கப்பட்டு குறைந்த விலையில் விற்பனைக்கும் கிடைப்பது குறிப்பிடத்தக்கது
tamil.oneindia.in/

கருத்துகள் இல்லை: