புதன், 25 ஜூன், 2014

காரைக்காலில் நமிதா வராததால் ரசிகர்கள் அடிதடி கலவரம் ! இதுக்கு போயி ஏன்தான் இந்த போராட்டமோ ?

காரைக்காலில் நடிகை நமீதா பங்கேற்கவுள்ளதாக அழைப்புவிடுக்கப்பட்ட நடன நிகழ்ச்சியில் அவர் பங்கேற்காததால், பார்வையாளர்கள் நாற்காலிகளை வீசி பிரச்னையில் ஈடுபட்டனர். இதில் பல லட்சம் ரூபாய் மோசடி நடந்துள்ளதாக பார்வையாளர் தரப்பில் புகார் கூறப்படுகிறது.
காரைக்காலில் தனியார் அமைப்பு ஒன்றின் சார்பில் காரைக்கால் நகராட்சித் திடலில் ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு உங்களில் யார் லாரன்ஸ் என்ற தலைப்பில் சிறப்பு நடன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக கடந்த 2 மாதங்களாக தனியார் நிர்வாகம், நமீதா உள்ளிட்டோர் படங்களுடன் நிகழ்ச்சிக்கான  அனுமதி கூப்பன் தயார் செய்து, விளம்பரதாரர்களின் விளம்பரங்களுடன் விநியோகம் செய்தது. இதில் கட்டணம் குறித்த எந்த விவரமும் இல்லாத நிலையில், தொகை வாங்கிக்கொண்டு கூப்பன் அளித்ததாக கூறப்படுகிறது. நமீதா உள்ளிட்ட கலைஞர்கள் பங்கேற்கும் நடன நிகழ்ச்சி என காரைக்கால் மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களிலில் விளம்பரம் செய்யப்பட்டது.
நிகழ்ச்சி நாளான ஞாயிற்றுக்கிழமை மாலை திடலில் மேடை அமைக்கப்பட்டிருந்தது. அதற்கு முன்பாக ஏராளமான நாற்காலிகள் போடப்பட்டிருந்தது. கூப்பன் வாங்கியவர்கள் கூப்பனுடன் நுழைவு வாயிலின் வழியே சென்று திடலில் அமர்ந்தனர்.

உள்ளூர் கலைஞர்கள், மதுரை முத்துவின் மிமிக்ரி நிகழ்ச்சி நடந்தது. அப்போது நமீதா வராதது குறித்த அறிவிப்பு செய்யப்பட்டது.  இதனால் ஆத்திரமடைந்த அனுமதி கூப்பனுடன் வந்தவர்கள், நாற்காலிகளை வீசி பிரச்னையில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து காரைக்கால் நகரக் காவல்நிலைய போலீஸார் சென்று பிரச்னை மேலும் வளராமல் கட்டுப்படுத்தினர்.
இதுகுறித்து பார்வையாளராக வந்தவர்கள் கூறும்போது, ரூ.200 முதல் பணம் கொடுத்து அனுமதி கூப்பன் வாங்கி வந்தோம். நமீதா வரவில்லையென கூறப்பட்டது. பணத்தையும் உரிய நிறுவனத்தினர் திருப்பித்தரவில்லை. நாங்கள் ஏமாற்றப்பட்டுள்ளோம் என்றனர்.
இதுகுறித்து காவல்நிலைய உதவி ஆய்வாளர் ராஜசேகரனிடம் கேட்டபோது, நாற்காலிகள் வீசி பிரச்னை செய்ததாக தகவல் வந்து சென்றோம். பிரச்னை மேலும் தொடராமல் கட்டுப்படுத்திவிட்டோம். இதுகுறித்து யாரும் புகார் தராததால் நடவடிக்க்கை எடுக்க முடியவில்லை என்றார்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (பொ) பழனிவேலு கூறும்போது, புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். நகராட்சி ஆணையர் கே.ரேவதி கூறும்போது, கேளிக்கை நிகழ்ச்சி நடத்துவதாக திடலை தருமாறு அனுமதி கோரினார்கள் தந்தோம். கட்டணம் வசூலிக்கப்பட்டிருந்தால் கேளிக்கை வரி 40 சதவீதம் நிகழ்ச்சி நடத்தியோரிடம் வசூலிக்கப்படும் என்றார்.
மாவட்ட ஆட்சியர் லெ.முகம்மது மன்சூரிடம் கேட்டபோது, இப்பிரச்னை குறித்து தகவல்கள் வந்துள்ளது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
நமீதா வருவதான நிகழ்ச்சியில் சுமார் ஆயிரம் பேர் பங்கேற்றிருந்தனர். உள்ளூர் கலைஞர்கள் நிகழ்ச்சியுடன் பிரச்னையில் இது முடிந்தது. பணம் கொடுத்து கூப்பன் வாங்கியதாகவும், தாங்கள் ஏமாற்றப்பட்டதாகவும் பார்வையாளர்கள் தரப்பில் புகார்  கூறப்பட்டது. இதுபோன்றோருக்கு நிகழ்ச்சி நடத்த அனுமதி தரமுன்வரும்போது, நகராட்சி, காவல் துறையினர், கலைஞர்கள் வருவதற்கான ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறதா, நிகழ்ச்சி வருவாய் விவரங்கள் போன்றவற்றை கேட்டறிந்திருக்கவேண்டும்.
பாதுகாப்பு தொடர்பாக காவல்துறை நிகழ்ச்சி அமைப்பாளரை அழைத்து பேசியிருக்கவேண்டும். இதில் எதுவுமே அரசுத் துறைகள் செய்யாமல் விட்டுவிட்டது துறை அதிகாரிகளிடம் பேசியபோது தெரியவருகிறது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், இதுபோன்று பொருளீட்டும் குற்றச் செயலில் செய்வோர் காரைக்காலை தளமாக்கிக்கொள்ள வாய்ப்பாகிவிடுமென நடுநிலையாளர்கள் கருத்து கூறுகின்றனர் dinamani.com

கருத்துகள் இல்லை: