சனி, 28 ஜூன், 2014

இராக்கில் உள்ள இந்தியர்களை மீட்க இரு போர்க்கப்பல்கள் விரைவு !

புதுடெல்லி,ஈராக்கில் ஷியா ஆதரவு அரசுக்கு எதிராக ஐ.எஸ்.ஐ.எஸ். என்ற தீவிரவாதிகள் கடந்த 3 மாதங்களாக தீவிர சண்டையில் ஈடுபட்டு வருகிறார்கள். பல முக்கிய நகரங்களை அவர்கள் கைப்பற்றி விட்டனர். மேலும் தீவிரவாதிகள் பாக்தாத் நகரை நோக்கி முன்னேறி வருகிறார்கள்.
உள்நாட்டு போர் தீவிரமடைந்துள்ள சூழலில் ஈராக்கில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் வசித்து வருகிறார்கள். இவர்கள் அனைவருக்குமே பாதிப்பு இல்லை என்றாலும் சண்டை நடக்கும் பகுதிகளில் சில நூறு இந்தியர்கள் சிக்கிக் கொண்டு உள்ளனர். இதுவரை நாடு திரும்ப விரும்பிய 36 இந்தியர்கள் மட்டுமே அங்கிருந்து மீட்கப்பட்டு உள்ளனர்.


இந்த நிலையில் ஈராக்கை விட்டு வெளியேற விரும்பும் மற்ற இந்தியர்களை மீட்பது தொடர்பான நெருக்கடி மேலாண்மை குழுவின் ஆலோசனை கூட்டம் அமைச்சரக செயலாளர் தலைமையில் நேற்று டெல்லியில் நடந்தது.
அப்போது, இவர்களை மீட்பதற்கு வசதியாக பாரசீக வளைகுடா கடல் பகுதிக்கும், ஏடன் கடல் பகுதிக்கும் இந்திய போர்க்கப்பல்களை அனுப்பி வைப்பதென முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து ஐ.என்.எஸ். மைசூர் என்ற போர்க்கப்பலும், ஐ.என்.எஸ். தார்கீஷ் என்ற போர்க்கப்பலும், உடனடியாக பாரசீக வளைகுடா கடல் பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது என்று கடற்படை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
மறு உத்தரவு வரும் வரை இந்த 2 கப்பல்களும் அங்கேயே நிறுத்தி வைத்திருக்கும்படி உத்தரவிடப்பட்டு இருக்கிறது. தேவைப்பட்டால் இந்த 2 போர்க்கப்பல்களும் இந்தியர்களை மீட்டுவரும் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படும் என்றும் இந்திய கடற்படை வட்டாரங்கள் தெரிவித்தன.
இதேபோல், மீட்பு பணிக்காக இந்திய விமானப்படையும் தனது சி17 மற்றும் சி-130 ஜே சூப்பர் ஹெர்குலிஸ் விமானங்களை தயார்நிலையில் வைத்து இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் பாக்தாத் நகரை பாதுகாக்கும் விதமாக ஆயுதங்கள் நிரப்பிய ஆளில்லாத குட்டி விமானங்களை அந்த நகருக்கு மேலாக அமெரிக்கா பறக்கவிட்டுள்ளதுdailythanthi.com

கருத்துகள் இல்லை: