புதன், 25 ஜூன், 2014

மோடி அரசு ஒரு மாதத்திற்குள் 1½ லட்சம் பழைய கோப்புகள் அழிப்பு !

மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் புதிய அரசு பொறுப்பேற்றதும் பல சீர்திருத்த நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன. அதில் ஒன்று, தேங்கிக்கிடக்கும் பல ஆண்டுகால கோப்புகளை அழிப்பது. அதன்படி ஆட்சி பொறுப்பேற்று ஒரு மாதத்திற்குள் உள்துறை அமைச்சகம் மட்டும் 1½ லட்சம் கோப்புகளை அழித்துள்ளது. வடக்கு பகுதி அலுவலகத்தில் உள்ள இரும்பு பீரோக்களில் இருந்த இந்த குப்பைகளுக்கு இடையே சில வரலாற்று புதையல்களும் கிடைத்தன.
அதில் ஒரு கோப்பு, முதல் கவர்னர் ஜெனரல் மவுண்ட்பேட்டன் பிரபு தனது நாட்டுக்கு (இங்கிலாந்து) செல்வதற்காக பயணப்படி மற்றும் அகவிலைப்படியாக ரூ.64 ஆயிரம் ஜனாதிபதி அனுமதி அளித்ததற்கான ஆவணம். இந்த ரூ.64 ஆயிரத்தின் இன்றைய மதிப்பு பல கோடி. மற்றொரு பொக்கிஷம், இந்தியாவின் முதல் ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத் தனக்கு ஓய்வூதியம் தேவையில்லை என்று கூறியதற்கான ஆவணமும், அந்த தொகை அரசின் பேரிடர் நிவாரணத்துக்கு வழங்கப்பட்டதுமாகும்.

அதேபோல பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி தனக்கு சம்பளம் வேண்டாம் என்றதால் அந்த தொகையும் அரசின் பேரிடர் நிவாரணத்துக்கு வழங்கப்பட்டது தொடர்பான ஆவணமும் இருந்தது. மகாத்மா காந்தி இறப்புக்கு முன்னர் நடந்த மந்திரிசபை கூட்டம் தொடர்பான ஆவணம் உள்பட பல வரலாற்று புதையல்களும் இருந்தன.

தேவையில்லாத பழைய கோப்புகள் துண்டுகளாக கிழிக்கப்பட்டு, குப்பைக்கு அனுப்பப்பட்டது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கோப்புகள் தேசிய ஆவண காப்பகத்துக்கு அனுப்பப்பட்டன. பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டதன் பேரிலேயே இந்த தூய்மைப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இனி 6 மாதத்துக்கு ஒரு முறை கோப்புகளை ஆய்வு செய்து தேவையில்லாதவை அழிக்கப்படும் என்றும் அவர் கூறினார். கோப்புகள் மட்டுமின்றி உடைந்த மேஜை, நாற்காலி, பீரோ போன்றவைகளும் அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றன. dailythanthi .com

கருத்துகள் இல்லை: