சனி, 22 செப்டம்பர், 2012

Iran:எங்களிடம் வாலாட்டினால் பதிலடி கொடுப்போம்'

டெஹ்ரான்:""எங்கள் விஷயத்தில், அமெரிக்கா, இஸ்ரேல் அத்துமீறி நடந்தால், தக்க பதிலடி கொடுக்கப்படும்,'' என, ஈரான் அதிபர், முகமது அகமதினிஜாத் ஆவேசமாக கூறியுள்ளார்.
ஈரான் - ஈராக் இடையே, 1980-1988ம் ஆண்டுகளில் நடந்த போர் நினைவு நாள், நேற்று, ஈரானில் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, தலைநகர் டெஹ்ரானில் ராணுவ அணிவகுப்பு நடந்தது. ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள் கலந்து கொண்ட அணிவகுப்பில், நூற்றுக்கணக்கான ராணுவ பீரங்கிகளும், ஏவுகணைகளும் இடம்பெற்றன.
அப்போது, தொலைக்காட்சியில் <உரை நிகழ்த்திய, அதிபர் முகமது அகமதினிஜாத் கூறியதாவது:
ஈரான் - ஈராக் இடையே போர் நடந்த போது, நமது வீரர்கள் காட்டிய, அதே வீர உணர்வுடன், நம்பிக்கையுடன், உலக சக்திகளிடம் இருந்து, தற்போது எழுந்துள்ள அச்சுறுத்தல்களையும், நாம் எதிர்கொண்டு வருகிறோம். ஈரான் விஷயத்தில், அத்து மீறி நடந்தால், இஸ்ரேல், அமெரிக்காவுக்கு, தக்க பதிலடி கொடுப்போம்.இவ்வாறு அகமதினிஜாத் கூறினார்.

இதற்கிடையில், ஈரான் ராணுவ தளபதி, அதோல்லா செலேகி, செய்தி நிறுவனம் ஒன்றுக்கு, நேற்று அளித்த பேட்டியில், ""ஈரானிடம் வாலாட்டினால், இஸ்ரேலை இல்லாமல் செய்து விடுவோம். எங்களது பலத்தை காட்டும் வகையில், அணி வகுப்பு நடந்தது. யாரையும் மிரட்டும் நோக்கம் எங்களுக்கு இல்லை,'' என்றார்.

ஈரானில் மேற்கொள்ளப்பட்டு வரும், அணு ஆயுத திட்டங்கள் தொடர்பாக, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில், கடும் ஆட்சேபம் தெரிவித்து வருகிறது. இது தொடர்பாக, ஈரான் - ஐ.நா., அமைப்பு இடையே, அடிக்கடி அறிக்கை போர் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: