செவ்வாய், 18 செப்டம்பர், 2012

மம்தா ஆதரவு வாபஸ்.. மன்மோகன் சிங் அரசின் 'உயிர்' முலாயம்-மாயாவதி கையில்!

டெல்லி: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸ் கட்சி மத்திய அரசுக்குக் கொடுத்து வரும் ஆதரவைத் திரும்பப் பெற்றுவிட்டாலும் கூட மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு எந்தப் பிரச்சனையும் வராது என்றே தெரிகிறது. காரணம் முலாயம் சிங் யாதவும், மாயாவதியும் கை கொடுத்து அரசைக் காப்பாற்றுவர் என்று தெரிகிறது.
திரினமூல் காங்கிரஸ் கட்சிக்கு தற்போது 19 எம்.பிக்கள் லோக்சபாவில் உள்ளனர். 272 எம்.பிக்கள் இருந்தால் மத்திய அரசுக்கு மெஜாரிட்டி கிடைக்கும். தற்போது மம்தா பானர்ஜி விலகுவதாக இருந்தால் 19 பேரின் ஆதரவு குறையும். ஆனால் மறுபக்கம் முலாயம் சிங் யாதவ் 22 எம்.பிக்களுடன் உள்ளார். அதேபோல பகுஜன் சமாஜ் கட்சி 21 எம்.பிக்களுடன் இருக்கிறார். இவர்கள் இருவரும் சேர்ந்தோ அல்லது முலாய் சிங் யாதவ் மட்டுமோ அல்லது மாயாவதி மட்டுமோ கூட ஆதரவு கொடுத்தால் போதுமானது, ஆட்சி தப்பி விடும்.
இவர்களை தாஜா செய்து அடுத்த லோக்சபா தேர்தல் வரைக்கும் எப்படியாவது ஓட்டி விடலாம். அதேசமயம், அதற்காக நிறைய செலவு செய்ய வேண்டியதிருக்கும்- அதாவது உ.பி. முதல்வராக உள்ள முலாயமின் மகன் அகிலேஷ் யாதவ் தனது மாநிலத்துக்கு கேட்கும் திட்டங்களை எல்லாம் மத்திய அரது கொடுத்தாக கொடுத்தாக வேண்டும்.

இதுவரை மேற்கு வங்கத்திற்கு அள்ளிக் கொடுத்ததைப் போல உ.பிக்கு இனி கொடுக்க வேண்டியிருக்கும். ஆனால் இதெல்லாம் எளிதில் சமாளிக்கக் கூடிய விஷயம் தான் என்று காங்கிரஸ் கருதுகிறது.
இதனால் தான் மம்தாவின் ஆதரவு வாபஸ் ஆகலாம் என்று தெரிந்தே அவரால் எதிர்க்கப்பட்ட டீசல் விலை உயர்வு, சமையஸ் கேஸுக்கு கட்டுப்பாடு, சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டுக்கு அனுமதி என்ற முடிவுகளை மத்திய அரசு எடுத்துள்ளது.
ஆனால், முலாயமும் மாயாவதியும் சேர்ந்து பிரச்சனை செய்தால் இந்த அரசை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது என்பதே உண்மை.

கருத்துகள் இல்லை: