வியாழன், 20 செப்டம்பர், 2012

விநாயகர் சிலைகளை கடலில் கரைப்பது சட்டம் ஒழுங்கு பிரச்னை

திருக்கழுக்குன்றம்: விநாயகர் சிலை ஊர்வலத்தை அமைதியான முறையில் நடத்த வேண்டும் என்று இந்து அமைப்பினர், பொதுமக்களிடம் அதிகாரிகள் கேட்டு கொண்டனர். விநாயகர் சதுர்த்தி பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. திருக்கழுக்குன்றம் ஒன்றியத்தில் பல்வேறு கிராமங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபட்டு, பின்னர் குறிப்பிட்ட நாளில் அந்த சிலைகளை ஊர்வலமாக கொண்டு சென்று மாமல்லபுரம், கல்பாக்கம் பகுதி கடலில் கரைப்பது வழக்கம். அப்படி ஊர்வலமாக செல்லும்போது சில இடங்களில் ஊர்வலம் செல்பவர்களுக்கும், இதர தரப்பினருக்கும் இடையில் தகராறு ஏற்படும். சில நேரங்களில் அதுவே சட்டம் ஒழுங்கு பிரச்னையாகவும் ஏற்பட்டுள்ளது.


இதனால், முன்னெச்சரிக்கையாக திருக்கழுக்குன்றம் ஒன்றியத்தில் விநாயகர் சிலையை வைத்துள்ளவர்களை நேற்று முன்தினம் போலீசார் அழைத்து அமைதி பேச்சுவார்த்தை நடத்தினர். மாமல்லபுரம் இன்ஸ்பெக்டர் இளங்கோவன் தலைமை வகித்தார். டிஎஸ்பி கணேசன், திருக்கழுக்குன்றம் தாசில்தார் அமீர் உசேன் ஜஹாங்கீர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேச்சு வார்த்தையில் இந்து அமைப்பு நிர்வாகிகள், கிராமங்களில் சிலைகளை அமைத்துள்ள பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். திருக்கழுக்குன்றம் ஒன்றியத்தில் சுமார் 190 விநாயகர் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. சிலைகளை கரைக்க ஊர்வலம் செல்லும்போது எவ்வித சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாதவாறு அமைதியான முறையில் நடத்த வேண்டும் என்று அவர்களிடம் அதிகாரிகள் கேட்டு கொண்டனர்

கருத்துகள் இல்லை: