ஞாயிறு, 16 செப்டம்பர், 2012

சுலபப் பாதையில் சுடச்சுட ஈழம் Fast Food சீமானின் அன்பளிப்பு

“சுலபப் பாதையில் சுடச்சுட ஈழம்” ஈழத் தமிழர்களுக்கு அண்ணன் சீமானின் அன்பளிப்பு! அந்த காலத்தில் இருந்து புளிப்பிரசாரம் செய்யும் ஆனந்த விகடனின் அளப்பெரிய மனித விரோத இதழியல் கலாசாரம் 

Viruvirupu
“ஐ.நா. சபைக்குள் என்னை அரை மணி நேரம் பேசவிடுங்கள். நான் தனி ஈழம் பெற்றுக் கொடுத்து விடுவேன்” இவ்வாறு, ஈழத்துக்காக புதிய பாதை அமைத்துக் கொடுத்திருக்கிறார் இன்றைய தமிழினத்தின் விடிவெள்ளி, அண்ணன் சீமான்.
ஆனந்த விகடன் சஞ்சிகை பேட்டியில் அவர் இவ்வாறு கூறியுள்ள வார்த்தைகள், மிகவும் ஆழமானவை. உலக நாடுகளே அமெரிக்காவுக்கு பயந்து அடக்கி வாசித்துக் கொண்டிருக்கும் நிலையில், தனது ஒற்றை வார்த்தையில், அமெரிக்காவையே எள்ளி நகையாடியிருக்கிறார் எம் அண்ணன்.

சிரியா மீது ராணுவ நடவடிக்கை எடுப்பதற்கு, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா தலைகீழாக முயன்றது. ரஷ்யாவும், சீனாவும், தமது வீட்டோ அதிகாரத்தைக் கொண்டு, அமெரிக்க தீர்மானத்தை நிறைவேற்ற விடாது செய்தன. (அதே ரஷ்யாவும், சீனாவும் இலங்கைக்கு ஆதரவாக ஐ.நா.வில் வாக்களிக்கும் நட்பு நாடுகள்) ஹிலாரி கிளின்டனே நேரில் சென்றும், ஐ.நா. செக்யூரிட்டி கவுன்சிலில் எதுவும் செய்ய முடியவில்லை.
அந்த நிலையை எள்ளி நகையாடியுள்ள நம் அடங்காத் தமிழன் சீமான், ஹிலாரி கிளின்டனால் ராணுவ நடவடிக்கைக்கு ஒரு தீர்மானத்தையே கொண்டுவர முடியாத நிலையில், 30 நிமிடப் பேச்சால், தனிநாடே அமைத்துக் கொடுப்பதாக முரசறைந்துள்ளார்!
அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, “அண்ணே… நீங்க மெகா, நான் வாங்கிக்கிறேன் ஜகா” என்று சீமானை கையெடுத்து கும்பிட, ஹிலாரி கிளின்டன், “அடி ஆத்தீ..!” என்று முகவாயில் கைவைக்க மாட்டாரா? (பார்க்க: மேலேயுள்ள படம்)
ஆனந்த விகடன் (ஏங்க.. தெரியாமல் கேட்கிறோம். பார்ப்பான பத்திரிகைன்னு முன்னாடி திட்டுவாங்களே.. அந்த ஆனந்த விகடன், வேற ஆனந்த விகடனா?) பேட்டியில், “’தமிழீழத்தை அடைய என்ன திட்டம் உங்களிடம் இருக்கிறது?” என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, அண்ணனின் விவேகமுள்ள பதிலே, “அரசியல் புரட்சி. 12 கோடித் தமிழரில் ஒரு 50,000 பேரை ஒன்று திரட்டி விட்டால்கூட மிகப் பெரிய புரட்சி. அட, ஐ.நா. சபைக்குள் என்னை அரை மணி நேரம் பேசவிடுங்கள். நான் நாடு அடைந்துவிடுவேன்!”
இதில் விவேகம் மட்டுமன்றி, தமிழினத் துரோகிகள் கேட்கக்கூடிய கேள்வி ஒன்றைப் பற்றிய அச்சமில்லா ஆழுமை, அண்ணன் பேச்சில் வெளிப்படுகிறது.
கேவலமான தமிழினத் துரோகிகள் கேட்கக்கூடிய கேள்வி என்ன?
“ஒரு 50,000 பேரை ஒன்று திரட்டி விட்டால்கூட மிகப் பெரிய புரட்சி” என்று சொல்கிறாரே.. அப்படியானால், உங்க அண்ணனுக்கு ஐம்பதாயிரம் பேர்கூட ஆதரவாக இல்லையா?” என்பதே, வீணர்கள் கேட்கக்கூடிய கேள்வி.
இவையெல்லாம், வாய்ப்பேச்சு வேதாந்திகள் கேட்கக்கூடிய கேள்விகள். அண்ணனின் வழி தனி வழி! அது நேரடி ஆக்ஷன்தான் என்பதை பூண்டி தாக்குதல்கள் உணர்த்தி நிற்கவில்லையா? பூண்டியில் ஒலித்த சிங்களவனின் ஓலம், இமயத்தில் எதிரொலிக்கவில்லையா?
கேள்வி கேட்பவர்களால், ஒரு டூரிஸ்டையாவது, டூத்பேஸ்ட் போல பிதுக்க முடிந்ததா?
கையாலாகாதவர்களின் கேள்விகளுக்கு அண்ணன் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை. (அப்படியும் பதில் வேண்டும் என்று அடம் பிடித்தால், அவர்களை தேடிவரும், பூண்டிப் படையணி)
ரஷ்யர்களுக்கு ஒரு லெனின்கிராட் யுத்தம்போல (Siege of Leningrad) ஈழ விடுதலைக்கு ஒரு பூண்டித் தாக்குதல் என்று வரலாறு எழுதப்படும் நேரத்தில், ஆனந்த விகடன் சஞ்சிகை, அண்ணனை மாட்டிவிட நினைத்து, கேட்ட கேள்வியை பாருங்கள்:

“தமிழகம் வரும் சிங்களர்கள் மீது தாக்குதல் நடத்துவதன் மூலம் நீங்கள் சொல்ல விரும்பும் செய்தி என்ன?”
ஆஹா… யாரிடம் கேட்கிறார்கள் கேள்வி? இல்லை.. தெரியாமல்தான் கேட்கிறோம், யாரிடம் கேட்கிறார்கள் கேள்வி?
மீன் குஞ்சுக்கு நீந்த கற்றுத் தரவும் வேண்டுமா? மீடியம் சைஸ் பனியன் வாங்க திருப்பூர் வரை போகவும் வேண்டுமா?
அண்ணனே அலட்சியமாக கொடுக்கிறார் லட்சியப் பதில்! இதோ பாருங்கள் அண்ணனின் வாக்கு சாதுரியத்தை:
“முதலில் நாங்கள் தாக்குதல் நடத்துகிறோம் என்று சொல்வதே தவறு. என்ன தாக்குகிறோம்? ஒருவரைக் கையை ஒடித்திருக்கிறோமா, காயப்படுத்தி இருக்கிறோமா? (அண்ணனின் தம்பிகள் தாக்கவில்லை) நாங்கள் வன்முறைகளில் ஈடுபட வேண்டும் என்றெல்லாம் நினைத்திருந்தால், ஒரு சிங்களன் இங்கே நுழைய முடியாது. ஆனால், பத்திரமாகத்தானே இருக்கிறார்கள்?
அங்கிருந்து வந்தவர்களைத் திருப்பி அனுப்பியதற்காக (அண்ணனின் தம்பிகள் தாக்கினார்கள்) இவ்வளவு கோபப்படும் நீங்கள், 584 தமிழக மீனவர்கள் செத்திருப்பதைப் பற்றி வருத்தப்படவில்லையே?
இப்போதுகூட நாகப்பட்டினம் மீனவர்களை சிங்களர்கள் அடித்துத் துரத்தி இருக்கிறார்கள். இதை எல்லாம் பார்த்துக்கொண்டே இருக்கச் சொல்கிறீர்களா? (தாக்குதலுக்கு அண்ணன் நியாயம் கற்பிக்கிறார்)
எங்கள் இனம் மொத்தமும் கொத்துக் கொத்தாகக் கொன்று குவிக்கப்பட்டபோதும்கூட, அடக்க முடியாத ஆத்திரமும் கோபமும்கொண்டு வெறிகொண்ட மிருகங்களைப் போல உலவியபோதும்கூட, ஒரு சிங்களன் மீதுகூட நகக்கீறலை ஏற்படுத்தாத ஜனநாயகப் பிள்ளைகள் நாங்கள் (அண்ணனின் தம்பிகள் தாக்கவில்லை). உள்ளுக்குள் எரிந்துகொண்டு இருந்த நெருப்பைக்கூட எங்கள் மீது கொட்டிக்கொண்டு வெந்து செத்தோமே தவிர, ஒரு சிங்களனையும் தொடவில்லை (அண்ணனின் தம்பிகள் தாக்கவில்லை).
ஆனால், எல்லாவற்றுக்குமே ஓர் எல்லை உண்டு. இப்போதும்கூட அடிக்கவில்லை; தாக்கவில்லை. (அண்ணனின் ஆட்கள் தாக்கவில்லை) ஆனால், செய்ய முடியும்; (அண்ணனின் தம்பிகளால் தாக்க முடியும்)
இனியும் எங்கள் மீனவர்களைத் தொடாதே என்று எச்சரிக்கிறோம். இந்த நிலைமை தொடர்ந்தால், இப்படியே அற வழியில் நாங்கள் போராடிக் கொண்டு இருக்க மாட்டோம் என்று சொல்கிறோம் (அண்ணன் இப்போது நடத்துவது அறவழி போராட்டம்.. அப்படியானால், தாக்கவில்லை)”
இப்படியொரு ராஜதந்திர ரீதியான பதிலை ஆனந்த விகடன் சார்பில் பேட்டி கண்டவர், வாழ்நாளில் கேட்டிருக்க சான்ஸே இல்லை!
நாம் அண்ணனின் பேச்சைப் பற்றி கொடுத்த இந்த பொழிப்புரையுடன், தமிழினத் துரோகிகள் மடங்கி வீழ்ந்திருப்பார்கள். இனி அவர்கள் கேட்க மாட்டார்கள் கேள்வி.
ஆனால், விபரம் அறியாத பாமரர்கள் மற்றொரு கேள்வியை கேட்க முடியும் அல்லவா?
“பிரபாகரன், 30 வருடம் போராடி, 50,000 மக்களுக்கு மேல் உயிரிழந்து, பெற்றுக் கொடுக்க முடியாத ஈழத்தை, ‘ஒரு 50,000 பேரை ஒன்று திரட்டி, ஐ.நா. சபைக்குள் என்னை அரை மணி நேரம் பேசவிடுங்கள். நான் அடைந்துவிடுவேன்!’ என்று அண்ணன் சொல்கிறாரே! அப்போ பிரபாகரன் வெறும்….”
இப்படி ஒரு கேள்வியை எழுப்பினால், அண்ணன் பேச மாட்டார்.
அண்ணனின் ஆன்மாவாக இருக்கும் நாம் பேசுவோம். அண்ணனின் உயிரில் கலந்த உதிரமாய் உள்ள நாம் பேசுவோம். “டேய்….” என்று தமிழ் தேசிய பிள்ளையார் சுழியில் தொடங்குவோம். அதன்பின் எம்மிடம் ஒரு தமிழ் தேசிய பாரம்பரிய கலக்கல் பார்முலா உள்ளது.
‘அற்ப பதர்’, ‘எதிரியின் எலும்புத் துண்டுக்கு அலையும் ஈனப் பிறவி’, ‘வரலாறு தெரியாத வல்லூறு’, ‘வடை வாங்க தெரியாத வங்குரோத்து’ என்று தொடங்கி, உங்கள் சொந்த வாழ்க்கை பற்றி படு கேவலமாக எழுதும் பார்முலாவில் பயிற்சி பெற்ற வீர மறவர்கள் நாம். உமக்கு தருவோம் உரிய பதில்.
மவனே… நாம் வாழ்க்கையில், வார்த்தைகளில் தோற்றதில்லை!

கருத்துகள் இல்லை: