செவ்வாய், 18 செப்டம்பர், 2012

பாரத் பந்த்துக்கு திமுக திடீர் ஆதரவு- பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து ரத்து செய்த தமிழக அரசு!

நாடு தழுவிய அளவில் மத்திய அரசுக்கு எதிராக 20ம் தேதி பாரத் பந்த் நடைபெற உள்ள நாளில் தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக பள்ளி கல்வி இயக்குநர் தேவராஜன் அறிவித்திருந்தார்.
ஆனால், இந்த பந்துக்கு திமுக ஆதரவு தெரிவித்ததையடுத்து இந்த விடுமுறையை தமிழக அரசு ரத்து செய்துவிட்டது.
மத்திய அரசின் டீசல் விலை உயர்வு, கேஸ் சிலிண்டர் கட்டுப்பாடு மற்றும் அன்னிய முதலீட்டுக்கு அனுமதி ஆகியவற்றைக் கண்டித்து 20ம் தேதியன்று நாடு தழுவிய அளவிலான பாரத் பந்த் நடைபெறுகிறது. ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளைத் தவிர அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்று திரண்டு இப்போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன.
இந்த போராட்டம் தொடர்பாக தமிழகத்தில் ஆளும் அதிமுக அரசு எந்தவித கருத்தையும் தெரிவிக்காமல் இருந்து வந்தது. இந்த நிலையில் இன்று மாலை பள்ளி கல்வி இயக்குநர் தேவராஜன் வெளியிட்ட செய்திக் குறிப்பில், 20ம் தேதியன்று அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
அன்றைய தினம் நடைபெற இருந்த காலாண்டு தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்படுவதாகவும், ஒத்தி வைக்கப்படும் தேர்வானது கடைசித் தேர்வுக்கு மறுநாள் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
திமுக திடீர் ஆதரவு:
இந் நிலையில் பந்த்துக்கு திமுக திடீரென ஆதரவு தெரிவித்துள்ளது. திமுக தொழிற்சங்கமான தொமுச இந்த பந்த்துக்கு ஆதரவு தெரிவிக்கும் என அக்கட்சித் தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அரசுக்கு எதிராக நடைபெறும் போராட்டத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதுடன், அமைதியாக நடைபெற வேண்டும். மாநில மக்கள் ஏற்கனவே பால் விலை, மின்கட்டண மற்றும் போக்குவரத்து கட்டண உயர்வு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் சமையல் கேஸ் சிலிண்டர்கள் மீது கட்டுப்பாடு, டீசல் விலை உயர்வு, அன்னிய முதலீடு என மக்கள் மீது மத்திய அரசு மேலும் சுமையை ஏற்படுத்தியுள்ளது. இதை எதிர்த்து வரும் 20ம் தேதி போராட்டம் நடைபெறுகிறது என்று கூறியுள்ளார்.

பள்ளிகளுக்கு விடுமுறை ரத்து:
பந்துக்கு ஆதரவாக கருணாநிதியின் அறிக்கை வெளியான நிலையில், பள்ளிகளுக்கு அறிவிக்கப்பட்ட விடுமுறையை தமிழக அரசு ரத்து செய்துவிட்டது.
பள்ளிக் கல்வித்துறையின் கீழ் செயல்படும் அனைத்து வகை பள்ளிகளும் 20.09.2012 அன்று வழக்கம் போல் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: