வியாழன், 5 நவம்பர், 2020

ரஜினியுடன் கமல்ஹாசன் பேச்சு ( தன்கட்சிக்கு ஆதரவு தரவேண்டும் அம்புடுதே)

மின்னம்பலம் :  ரஜினியுடன் அரசியல் பற்றி பேசிவருவதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.மக்கள் நீதி மய்யத்தின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் மண்டல ரீதியாக கடந்த மூன்று நாட்களாக சென்னை தி.நகரிலுள்ள ஜிஆர்டி ஹோட்டலில் நடைபெற்றது. அதில், கழகங்களுடன் கூட்டணி இல்லை எனவும், 3ஆவது அணி அமைப்போம் என்றும் கமல்ஹாசன் தெரிவித்தார். மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் முடிந்த பிறகு சீரமைப்போம் தமிழகத்தை என்ற தலைப்பில் செய்தியாளர்களை சந்தித்தார் கமல்ஹாசன்.அப்போது, “எங்களுக்கு வந்துள்ள கள விவரங்களின் படி தமிழகத்தில் நாங்கள்தான் மூன்றாவது பெரிய கட்சி. 3 ஆவது அணி ஏற்கனவே அமைந்துவிட்டது. எங்களது கூட்டணி நல்லவர்களின் கூட்டணியாக இருக்கும். அனைத்து கட்சிகளிலும் நல்லவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் மனம் நொந்து இருக்கிறார்கள். அவர்கள் இங்கே வரவேண்டும். அப்படி நல்லவர்களின் கூட்டணி அமையும்போது எங்களது 3ஆவது அணி, முதல் அணியாக இருக்கும்” என்ற கமல்ஹாசன்,  

எந்தக் கட்சியுடன் கூட்டணி அமைப்பது என்பதை அவசரமாக இப்போதே தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை எனவும், நேர்மையை முன்னிறுத்தி பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளதாகவும், அதேபோல, தாங்கள் நேர்மையானவர்கள் என பிற கட்சியினரால் கூற முடியுமா? எனவும் கேள்வி எழுப்பினார்.

சட்டமன்றத் தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவேன் என்றவர், மக்கள் நீதி மய்யத்தின் குரல் சட்டமன்றத்தில் ஒலிக்கும் என்றும், தான் தேர்தலில் போட்டியிடும் தொகுதி குறித்து வேட்புமனு தாக்கல் செய்யும்போது உங்களுக்கே தெரியும் எனவும் கூறினார்.

ரஜினிகாந்த் பற்றிய கேள்விக்கு, “அரசியல் பற்றி ரஜினியும் நானும் பேசிக்கொண்டேதான் இருக்கிறோம். அவரது நிலைப்பாடு முன்னரே எனக்குத் தெரியும். ரஜினிகாந்த் உடல்நிலையை பார்த்துக்கொள்ள வேண்டும் என்பது நண்பராக எனது விருப்பம். நல்லவர்கள் அரசியலுக்கு வர வேண்டும். ஆனால், இவையிரண்டில் உடல்நலம் என்பது முக்கியம். ஆகவே, முடிவெடுக்க வேண்டியது அவர்தான். சட்டமன்றத் தேர்தலில் ரஜினியின் ஆதரவைக் கேட்போம்” என்றார்.

மனு ஸ்மிருதி என்பது புழக்கத்தில் இல்லாத ஒரு புத்தகம் என்பதால் அதைப்பற்றி பேச வேண்டிய அவசியமில்லை என்ற கமல்ஹாசன், “முருகனின் வேலை யார் வேண்டுமானாலும் கையிலெடுக்கலாம். ஆனால், இளைஞர்களுக்கு வேலை வாங்கித் தருவதுதான் என்னுடைய வேலை. வேல் யாத்திரையை அரசு ரத்து செய்தால் நல்லது” என்று வரவேற்றார். பாஜகவின் பி டீமா என்ற கேள்விக்கு, தான் எதிலும் பி டீமாக இருந்ததில்லை என்று கூறினார்.

சகாயம் போன்ற நல்லவர்களை எப்போதும் மக்கள் நீதி மய்யம் கட்சி வரவேற்கும்.எனக்கு மக்கள் முன்னிலையில் வெளிச்சத்தில் நிற்கும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பிரச்சாரம் செய்வேன். எனது கட்சியின் கொடியையும், சின்னத்தையும் மக்களிடம் எடுத்துச் செல்வேன் என்றும் கமல்ஹாசன் தெரிவித்தார்.

எழில்

கருத்துகள் இல்லை: